கடிதம் – ஜூன் 3,2004

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

பொறையாறு நந்தன்


பிறைநதிபுரத்தானின் RSS/வி.டி சவர்கார் மற்றும் தேசபிரிவிணை: சில உன்மைகள் (http://www.thinnai.com/le0527043.html), மற்றும் நாக.இளங்கோவனின் ஆர்.எஸ்.எஸ்-க்கான எதிர்வினை படித்தேன். உண்மையான தகவல்களை, நிகழ்வுகளை தொகுத்து தந்து சங்பரிவாரத்தின் வேஷங்களை தோலுரித்து காட்டியதற்கு நன்றி. ஆனால் ஒன்று, எவ்வளவுதான் உண்மைகளை எடுத்து கூறினாலும், உண்மைகளும், வரலாறுகளும் RSS செவிடர்கள் காதில் ஊதிய சங்காகத்தான் வீண் போகும். தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குவதுபோல நடிக்கிறவர்களை எழுப்ப முடியாது. அதனால் எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். இப்படி யாரும் பதிலடி கொடுக்காவிட்டால் அவர்கள் இஷ்டத்திற்கு திண்ணையில் ‘ரீல் ‘ விடுவதை தொடர்ந்துக்கொண்டேயிருப்பார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை ஜீரனிக்க முடியாதவர்கள். தமிழகத்தில் தோற்றுப்போனதற்கு யார், என்ன காரனம் என்பது ஜெயலலிதாவுக்கும்-சசிக்கலாவுக்கும் தெரிந்து அத்தகைய தோல்வியை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்காக தான் கொண்டு வந்த ‘தடாலடி ‘ சட்டங்களை அள்ளிக்கொண்டு போய் கூவத்தில் எறிந்த பிறகும், சில அறிவு ஜீவிகள் தங்களை கொலம்பஸ் என்று நிணைத்துக்கொண்டு ‘புதிய காரணங்களை ‘ அள்ளி தெளிக்கிறார்கள். அப்படியே மத்தியில் பா.ஜ.க தோற்றதற்கும் பிரமோத் மஹாஜனுக்கே தெரியாத, ஆளுக்கொரு-நாளுக்கொரு புத்தம்புது காரணங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். வாழ்க அவர்கள் பணி.

சிறுபான்மை மக்கள் சமயபீடங்களின் கட்டளைக்கு அடிபனிந்துவிட்டனராம் சிலிர்த்துக்கொள்கிறார்கள் சிலர்.. உண்மைதான். அதுபோலவே இந்துக்களில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட இந்துக்களும் தங்களது சாதி பீடங்களின் கட்டளைக்கு பணிந்துவிட்டனர். பொய் பித்தலாட்டத்தை நம்பி- பிற உயர் சாதியினரின் ஃபத்வாக்களுக்கு அடிபணியாமல்- பிற்படுத்தப்பட்ட முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாஅத் யாதவ் மற்றும் மாயாவதிகளின் கட்டளைக்கு அடிபணிந்தனர் அதனால்தான், உத்தரபிரதேசிலும், பீகாரிலும் போலி/சந்தர்ப்பவாத தேசியம் மற்றும் சாதீய ஹிந்துத்வம் பேசும் உயர் சாதியினரின் பிடியில் இருக்கும் பா.ஜ.க. தலை குப்புற விழுந்தது.

வர்னாசிரம வெறி பிடித்த தாங்கள் தோற்றுவிட்டால் மட்டும் ஏன் இந்திய தேசியமும், இந்தியாவும் தோற்றுவிட்டதாக புலம்புகிறார்கள் ?.

அயோத்தி-காஷி-மதுராவை இந்திய முஸ்லிம்கள் தானாகவே வந்து ஒப்படைத்து விடவேண்டும் என்று இந்துக்களின் பிரதிநிதிகளாக சுய பிரகடனப்படுத்திக்கொண்டு வீரவசனம் பேசிய மதவெறியர்களிடமிருந்து மக்கள் மூன்று தொகுதிகளையும் பிடுங்கிவிட்டனர். முஸ்லிம்களை பிளாக்மெயில் செய்துகொண்டிருந்தவர்களை- அரசியல் வாழ்க்கையிலிருந்து மொட்டையடித்து-பண்டாரங்களாக்கி விரட்டிவிட்டனர். இந்த மூன்று தொகுதிகளில் தோல்வியடைந்ததற்கு ‘திண்ணையில் ‘ ஏனோ இதுவரை ‘பூசிமொழுகும் ‘ புதிய காரணங்களை எழுத அறிவுஜீவிகள் மறந்துவிட்டார்கள் (செலக்டிவ் அம்னீஷியாவா ?).

இந்த தேர்தலில் பா.ஜ.க மதவெறியை முன்னிறுத்தவில்லையாம் – இதைவிட்டால் நிறுத்துவதற்கு உருப்படியாக பா.ஜ.க.விடம் என்ன இருக்கிறது ? தேர்தலில் தனி மெஜாரிட்டி வந்தால் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோவில் கட்டுவோம் என்று வடமாநிலங்களில் கூட்டனி கட்சிகளுக்கு பயந்துகொண்டு சத்தம்போடாமல் பேசியது, குஜராத் படுகொலைக்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மோடியை தோளில் தூக்கிவைத்துக்கொன்டு ஆடியது. ஜெயலலிதா கொண்டுவந்த மதமாற்ற தடைசட்டத்தை ஆதரித்து பேசியது- இவையெல்லாம் ஒரு சிலருக்கு மதவெறிபோல் தோனாமல்- வளர்ச்சியை முன்னிருத்தி பேசியதாக தோணலாம்.

புதிய வரலாற்றை திணிக்கும் பணியில் ஈடுபட்ட முரளிமனோகர் ஜோஷி தோற்கடிக்கப்பட்டது மதச்சார்பின்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. பா.ஜ.க அனியினர்தான் வெற்றிபெறுவார்கள் என்று தவறாக ஆருடம் கூறிய ‘ஜோசியத்தை ‘ இன்னும் பல்கலை கழகங்களில் பாடமாக வைக்கவேண்டுமா அல்லது எரித்து சாம்பலக்கி மாசுப்பட்ட கங்கை கரையில் கரைத்து விடவேண்டுமா என்று அடுத்த தேர்தல் வரை அவர்கள் யோசிக்கட்டும்

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, எந்த மாநிலத்தில் பாடமாக வைத்தாலும் தமிழகத்தில் செயலலிதா இருக்கும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நடக்காது- ஆருடத்தை நம்பி, வெட்டி யாகங்கள் செய்து- காசு, பணம், மானம், மரியாதை, சூடு, சொரனை அனைத்தும் இழந்து- அனைத்து தொகுதிகளிலும் அநியாயமாக தோற்றவர் அவர்.

மதமாற்ற தடைசட்டத்தை நீக்கியதன் மூலம் முகத்தில் செயலலிதா கரியை பூசிவிட்டாராம் – வீரத்துறவி இராம கோபால அய்யர் கண்ணீர் மல்க பேட்டிளிக்கிறார்; ஆனால் ‘காவியனிந்த ‘ செயலலிதாவின் முகத்தில் தமிழக மக்கள் ‘கரியைப்பூச ‘ இம்மாதிரி சட்டங்கள்தான் காரணம் என்பது ஏன் இராமகோபலனுக்கு தெரியவில்லை. வீரத்துறவி. இராமகோபாலன் வீரத்தை மட்டும் துறந்தாரா இல்லை அடிப்படை அறிவையுமா ?

மதமாற்ற தடைசட்டத்தை நீடிக்கவேண்டும் என்று ‘ஆறு தொகுதிகளிலும் படுதோல்வியடைந்த ‘ தமிழக பா.ஜ.க. அடிபட்ட கழுதையாக முனகுகிறது. இனிமேல் தங்களின் இருப்பை தமிழகத்தில் காட்டிக்கொள்ள இதுபோன்ற முக்கலும் முனகலும் எழுப்பித்தான் ஆகவேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அந்தோ பரிதாபம்! இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ‘முன்னாளில் இந்துக்களின் கக்கூசை இடித்துவிட்டுத்தான் அந்த இடத்தில் முஸ்லிம்கள் கக்கூஸ் கட்டினார்கள் ‘ ‘முஸ்லிம்கள் இப்போது அனிந்திருக்கும் ஜட்டி இந்துக்களுடையது ‘ போன்ற ‘உரிமை கூச்சல்கள் ‘ இல்லாமல் தமிழகம் அமைதிபூங்காவாக இருக்கும்.

சோனியா வெளிநாட்டுக்காரராம் – RSS இயக்கம் ஆரம்பித்த சாதியினர் உள்நாட்டுக்காரர்களாம். எப்படியெல்லாம் பூ சுத்துகிறார்கள் ?

இந்திய தேர்தல் முடிவுகள் இத்தாலிய தலைவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஏளனம் பேசும் சங்பரிவாரத்தினருக்கு, இத்தாலியின் முசோலினியும், ஜெர்மனியின் ஹிட்லரும் இல்லையென்றால், RSS இன்றைக்கு போலி தேசியவாதம் பேசி ஏமாற்றி பிழைக்க வழி தெரியாமல் போயிருக்கும் என்பதை மறந்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள்! முசோலினியின் பாசிச-ஜெர்மனியின் நாஜி கொள்கைகளை காப்பி அடித்து உருவானதுதானே ஹிந்து மஹா சபையே.. இவர்களின் கொள்கை அடித்தளமே விதேசி ஆனால் பேசுவதோ சுதேசி..இத்தகைய முரன்பாடுகளை இவர்களால் மட்டும்தான் பேச-செய்ய முடியும்.

RSS/VHP/பா.ஜ.க வில் இருக்கும் அனைவரும் ISO தர முத்திரை குத்தப்பட்ட தேசப்பற்றாளர்கள், யோக்கிய சிகாமனிகளாம். ஆனால், சில தேர்தல் கூட்டனிக்கு முன்பு-

ஆயிரம் கோடி இரானுவ தளவாட ஊழலில் அடல் பிகாரிக்கு பங்கு-

டெல்காம் ஊழலில் அடல் பிகாரிக்கு பங்கு-

அந்நிய நாட்டு ஆயுத முதலாளிகளிடம் அடல் பிகாரிக்கு தொடர்பு-

அடல் பிஹரியால் இந்தியாவுக்கு ஆபத்து- எத்தனை குற்றச்சாட்டுக்கள் .

கூட்டனி தர்மத்துக்கு பெயர்பெற்ற ‘செல்வன் ‘ வாஜ்பாயை பார்த்து கூட்டனி தர்மத்தின் அன்னை ‘செல்வி ‘ ஜெயலலிதா சொன்னார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்த போதெல்லாம் எதேதோ பேசி குழப்பி மக்களை திசைதிருப்பித்தான் இவ்வளவு நாட்கள் ஆட்சி செய்தது பா.ஜ.க தலைமையிலான அரசு. தேர்தலில் தோல்வியடைந்தவுடன், மக்களால் தான் நிராகரிக்கப்பட்டதை ஜீரணிக்கமுடியாமல், பா.ஜ.காவால்தான், இந்திரா காந்தி தேசிய கலை மையத்திற்கு சோனியா வாழ்நாள் டிரஸ்டியாக நீடிக்கமுடியாமல் போனது என்று கூறி மகிழ்ந்து கொள்கிறது.

இத்தாலியிலிருந்து வந்து இந்திய குடியுரிமைப்பெற்ற ‘வெள்ளைதோல் ‘ சோனியா, பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருந்தாலும் இந்தியாவில் பிரதமராக கூடாதாம். ஆனால், கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ‘வெள்ளை நூல் ‘ அனிந்த குறிப்பிட்ட சாதியினர் மட்டும் இந்தியர்களின் பெயரிலும், இந்துக்களின் பெயரிலும் பரம்பரை பரம்பரையாக பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கலாமாம்.

அந்தமான் சிறையில் வாடிய தேசபக்தர்களைப்பற்றி கவலைப்படுபவர்களுக்கு ஒரு செய்தி:

அந்தமான் சிறையில் அங்கிலேயரின் மிரட்டல் உருட்டல்களுக்கு ‘வீர் சவர்க்கார் ‘ போல் அடங்கி, அடிபணியாமல் இறுதிவரை ஆங்கிலேயர்களை எதிர்த்து, தேசத்திற்காக சித்திரவதை அனுபவித்து கஷ்டப்பட்ட நந்த கோபால், நானி கோபால், ஹோதிலால்,மற்றும் சக்கரவர்த்தி போன்ற உண்மையான தேசபக்தர்களுக்கா பாராளுமன்றத்தில் படம் திறந்தார்கள் இல்லையே, கருனைமனு அளித்து, தன்னை மட்டும் விடுதலை செய்ய சொன்ன ‘தன்னலமற்ற இயக்கத்தை சார்ந்தவர்களின் ‘ தந்தையும், போலி தேசபக்தரும், ஏமாற்று பேர்வழியுமான வீர் சவர்காருக்கு அல்லவா படம் திறந்தார்கள் ? அதனால், இந்திய மக்களுக்கு உண்மையான வரலாறை உணர்த்தும் வண்ணம் சோனியா செய்ய வேண்டிய முதல் காரியம் – பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள வீர் சவர்க்கார் படத்தை கழற்றியெறியவேண்டும் அல்லது அந்த படத்துக்கு அருகிலேயே ‘முகமது அலி ஜின்னாவின் ‘ படத்தை வைக்கவேண்டும் – இந்தியவை கூறுபோட்ட இரட்டை சகோதரர்களில் ஒருவருக்கு மட்டும் படம் என்ற பாரபட்சத்தை நீக்கவேண்டும்.

பொறையாறு நந்தன்

ananthakumaran@hotmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை)


Series Navigation

பொறையாறு நந்தன்

பொறையாறு நந்தன்