சாவோடு வாழ்தல்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

ஈழநாதன்


என்றோ நடந்து
மறந்து போனாலும்
இன்றும் வீசிக்கொண்டிருக்கும்
இரத்த நெடில்!
குண்டும் குழியுமான
குண்டு வீச்சின்
நினைவுச்சின்னங்களின் மேல்
விரையும் நாட்கள்!
இயற்கை உபாதைக்கென
ஒதுங்க கஷ்டமின்றி
நகரத்தின் மத்தியிலே
தலைகாட்டும்
இடிபாடுகள்!
இடிந்தழிந்த வீட்டை
கட்டவா விடவாவென்று
வாஸ்து பார்க்கப்போகும்
படித்த மனிதர்கள்!
எங்களுக்கும் ஒருநாள்
உதவக்கூடுமென்று
செயற்கைக்கால் செய்பவர்களுடன்
சமூக சேவையில்
ஈடுபடும் இளைஞர்கள்!
அழிந்த நகரம்
புதுப்பிக்கப்பட முன்னே
புதிதாய் எழும்
காவலரண்கள்!
ஒவ்வொருநாளும்
காணாமற் போகும்
நண்பர்கள்.
போன இடம் தெரிந்தும்
தேடப்போகாத
பெற்றோர்கள்!
விதவைத் தாய்மாரை
ஏக்கத்துடன் பார்க்கும்
இளைய பெண்கள்!
சைக்கிளை விற்றுவிட்டு
மோட்டார் சைக்கிள் வாங்க
ஆயிரம் தடவை
யோசிக்கும் அப்பா!
இத்தனை நாள்
கழித்து
எங்கள் ஊரில்
மெதுவாய்ச் சூழும்
சாக்களை!!

ஈழநாதன்

Series Navigation

ஈழநாதன்

ஈழநாதன்