கண்ணாடி வார்த்தைகள்
சு.மு.அகமது

நிர்வாண அடுக்ககங்கள் மீது
நிமிர்ந்து நிற்கிறது ஆடையகம்
அதில்
திமிறல்களின் புழுதி கண்டு
லஜ்ஜையால் போர்த்திக்கொள்கிறது மனது
உடற்கூறுகளின் வித்தியாசப்படுத்தலில்
உண்மை உறுத்துகிறது உள்ளத்தை
மவுனத்தை புரிதலோடு
மனனம் செய்கிறோம்
பறவையின் பறத்தலாய்
விடியலின் திசை நோக்கி
இருள் பாவும் முன்னமேயே
செம்பிழம்பாய் கனன்று போகிறது
ஏதுமற்ற பெருவெளிகள்
வெக்கையாய் பொழுதுகள் புலரும்போது
உடையிழந்த வெற்றுடலாய் விரிகிறது வானம்
‘நீல’ப்பார்வையில்
மலையிடுக்கின் நீரும் நிறமும்
நெஞ்சில் உலறாத ஈர வடுவாய்
புலன் மறைக்க ஆடை தேடுகிறான்
ஆதி மனிதன்
கனி புசித்த பின்பு தான்
சு.மு.அகமது