ஆதிமுதல்….
நெப்போலியன் சிங்கப்பூர்

பசித்த
பொழுதெல்லாம்
பழம்
கிடைப்பதில்லை.
கிடைக்கும்
பழங்கள்
அத்தனையும்
பசிக்குகந்ததாயில்லை.
நிர்வாணமாய்
நிற்கும் மரம்
பச்சையாய்
இளித்தபடி பாம்பு.
கனிகளாய்
தொங்கியவை
உள்ளே ஊறிய இச்சை.
சுவைக்கும் சுகம்
கட்டளை மறக்கும்
ஞாபகம் தெளிய
தன் சுயம் உணரும்.
குளிர்ச்சியான
நேரத்தில்
கடவுள் வருவார்.
ஏதேன் தோட்டம்
எல்லோருக்கும் பொது.
எச்சில்
ஊறி நின்றபடி
ஏவாள்கள்….
அரைகுறை
எலும்புகளுடன்
ஆதாம்கள்….
சந்தர்ப்பம்
எதிர்பார்த்தபடியே
சர்ப்பங்கள் !
kavingarnepolian@yahoo.com.sg