This entry is in the series 20030329_Issue

வேதா


பட்டாம்பூச்சி வயசு,
படபடக்கும் மனசு..
‘பைத்தியம் ‘ என்று பலர் சொன்னாலும்,
அவையெல்லாம் பதியவில்லை….
உன்
பாசம் தெளுத்த பார்வையின் முன்!!

நட்பும் நங்கூரமும்
நம் கப்பலில்!!

நடந்து நடந்து
அரங்கேற்றம் செய்யவில்லை,
பயந்து பயந்து
பரிமாறிக் கொள்ளவில்லை,

பார்த்து, பேசி,
பழகலாம் என்பதற்குள்,
‘பச்சக் ‘கென்று ஒட்டியது உன் ஆசை முகம்!!

கனவுகள், சுவைகள்
கலந்து ஒன்றாக,
காற்றுக்கே
கவிதை கற்றுக்கொடுத்தோம்!!
கவிதைக்குள்
கதைகள் சொல்லிக் கொடுத்தோம்!

நினைவுகளும் நிஜங்களும்
நீயும் நானுமே
நிரப்பிக் கொண்ட நாட்கள்,
நெஞ்சை விட்டு நீங்காத நாட்கள்!!

நெருங்கி இருந்து
நிழல் நிறைத்த காலமெல்லாம்
கடற்கரையில்
கவிதை செதுக்கிய நேரமெல்லாம்
கண்களுக்குள் மின்மினியாய்!!

காலம் …..
சிலது மட்டும் கரையவில்லை,
கரைத்து விட மனசுமில்லை,
ஆசை ஆசையாய்
அரைத்து வைத்த உன் புன்னகை மட்டும்
அதிசயமாய் பூத்திருக்க,
என் இமைகள் திருடிய
தங்க முகம்,
கண் மூடிப் பார்க்கிறேன்,
கடுகளவும் தெரியவில்லை…

அச்சச்சோ!
ஆசை முகம் மறந்து போச்சோ ?
******

Series Navigation