அந்த இரவு
நடராஜா முரளிதரன் (கனடா)

இரவின் மீது பிரியமுடன்
நடந்து செல்லும்
நாளை நோக்கிக்
காத்திருக்கும் எனக்கு
ஒளியை இழந்த
அந்த இரவினைக் கடப்பது
என்றும் போல்
அன்றும் கடினமாயிருந்தது
சந்திரன் தொலைந்து
நட்சத்திரங்கள்
விழுங்கப்பட்ட
அந்த இரவு
காற்றில் எழுதப்பட்ட
வரிகளை
சுவாசிக்கவும்
திராணியற்ற
அந்த இரவு
காலமெல்லாம்
கிளர்ந்தெழும்
காமத்தை
மறுத்த
அந்த இரவு
உறைந்து போய்
ஒரு வெளியாய்
திரண்டு போயிருக்கும்
அந்த இரவு
எனக்கு வேண்டிய
சேதிகளைச்
சொல்ல மறுத்து
நிற்கிறது
nmuralitharan@hotmail.com