அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்
த.அஜந்தகுமார்
.
வாத்சல்யம் பொழியும்
கண்களின் குளிர்மை
என்னை அழைத்துச் செல்கிறது
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
வாசல்கள் தோறும்
இனம்புரியாச் சிலிர்ப்பு
கண்களில் இறங்கி
அந்தரித்து
உத்தரிக்கிறது எனது
உடலின் அசைவுகளை.
பேசமுடியாது வெறித்துக் கிடக்கும்
சொற்களின் கிடங்கு
யாருமற்ற ஏகாந்தத்தில்
தன் மௌனங்களை உடைக்கிறது
முட்டை உடைத்துவரும் குஞ்சாய்
கனவுகளின் நிறங்கள்
கவிதைகளில் வெளிக்கிளம்ப
பேச்சின் சுவாரசியங்கள்
புதைகிறது
ஆழக்கிடங்கொன்றில்.
சிரிப்புக்கள் வரண்ட
உதடுகளை
சகிக்க முடியாது
முகம் கானும் விருப்பமின்றி
திரும்பி நடக்கிறேன்
திசைகளின் வெறுமையில்
எல்லோரிடமும் பூத்துக் குலுங்கும் புன்னகை
என்முகம் கண்டதும்
ஓடிக்கொள்கிறது
புன்னகை கொல்லும் பாவம்
புதைகிறது என்னுள்
வானம் பார்த்து நடக்கிறேன்
ஏதோ ஒரு பொறுமையில்………….
prinstionj@gmail.com