தொடர்பில்லாதவை
நாவிஷ் செந்தில்குமார்
மூங்கில்களற்ற காடொன்றில்
புல்லாங்குழல் தேடி அலைந்து
களைத்துப் போகிறது
காற்று
கொட்டும் மழையில் நனைந்ததாலே
குரல் மாறிப் போனது…
நான் குயில்தான் எனச்
சத்தியம் செய்தது
காக்கையொன்று
முழுதும் சுவைத்தபின்
தூக்கி எறிந்தவனுக்கும்
தெரியாமல்
யாரோ சிலருக்கென
கனிகளை ஒளித்துவைத்திருக்கிறது
மாங்கொட்டையொன்று
காலுக்கு
புதுச்செருப்புப் போட்டு
கண்ணாடியில்
முகம் பார்த்தேன்
அழகாய்த் தெரிந்தது!
உண்ணுகிற
ஒவ்வொரு பருக்கையிலும்
தன் பெயர் இருப்பதாகச்
சொல்கிறவன்
தட்டில் மீதம் வைக்கிற
பருக்கைகளிலிருந்து
எவனோ ஒருவன்
பெயரை அழிக்கிறான்!
—
navishsenthilkumar@gmail.com