This entry is in the series 20031016_Issue

இளந்திரையன்


முக வரிகள் நிறைந்து
முறுவலிக்க மறந்த
முகம்
முதிர்ச்சியாய்

கடும் பனியில்
கட்டிடக் காட்டினுள்
இயந்திரத்துடனான போராட்டத்தில்
இறுகிச் சிவந்து

வார இறுதியின்
வரவுக்கும்
மாசம் தவறாத
மருட்டும் செலவுக்குமான
இடைவிடாத போராட்டத்தில்
இன்னும் தொலைந்தது நித்திரை

மலர்கள் மழலைகள்
மரத்துப் போன இதயத்தின்
மானசீகக் கற்பனை
மயக்கமூட்டுவதாய்

கடிகார முள் பார்த்து
கால் ஓட
சாத்திய கதவின் பின்னால்
கவனமாய் ஒரு வரி – என்
முகத்திலேற
முறுவலிக்க மறந்த
முகம் முதிர்ச்சியாய்
முக வரிகள் நிறைந்து.
************************************************************
Ssathya06@aol.com

Series Navigation