This entry is in the series 20041104_Issue

பனசை நடராசன்


வானம்…
மழைப்பயிர் அறுவடைக்கு
கருமேகச் சாணைக்கல்லில்
கதிர்அரிவாள் தீட்டுவதால்,
சிதறுகின்ற ஒளிப்பிழம்போ
மின்னல்..!
அறுவடையான கதிர்களை
அடிக்கின்ற சப்தமோ
இடிமுழக்கம்..!
தூற்றுகையில் பறக்கின்ற
தூசுகளோ சாரல்..!
துளித்துளியாய் மண்ணில்விழும்
நெல்மணியோ மழைத்துளிகள்..!
விளைச்சலில் பறவைக்கூட்டம்
‘விர் ‘ரெனக் குதிப்பதால்
தெறித்து உதிர்ந்த தானியங்களோ
விண்மீன்கள்..!
கண்ட மகசூலை விற்றுக்
கடன் அடைத்தபின் கையில்
ஒன்றும் மிஞ்சாத
உழவனைப் போல்,
அடைமழை நின்றபின்
வெறுமையாய் வானம்..!!!
– பனசை நடராசன், சிங்கப்பூர்.-
(feenix75@yahoo.co.in)

Series Navigation