This entry is in the series 20101010_Issue

ராமலக்ஷ்மி



பூனைக்குப் பயந்து
புதருக்குள் ஒளிந்த
எலியினைக் கண்டு
இரக்கம் கொண்டு
புசுபுசுப் பூனையாகிட
வழங்கினார் ஆசியை
வனத்திலிருந்த முனி.

புதுப்பிறவி எடுத்ததுமே
நடுநடுங்கத் தொடங்கியது
நாயினிடம் மாட்டினால்
என்னாவேன் என்று.
இதென்ன வம்பாயிற்று
சரி, போனால் போகட்டுமென்று
நாயாகும் வரம் தந்தார்.

வாலினை மடக்கி
நாலுகால் பாய்ச்சலில்
நாக்குத்தள்ள மூச்சிரைக்க
ஓடலாயிற்று-
எங்கோ தொலைவில்
உலாத்தும் புலிகள்
கண்ணில் பட்டாலே.

இனியாவது துணிவாக
வாழட்டும் கம்பீரமாக-
பொங்கும் கருணையுடன்
புலியாக்கிப் பார்த்துப்
புளங்காகிதம் அடைந்தார்.
‘வேடன் பார்த்தால்
வேறு வினையே
வேண்டாம்’
வெருண்டு நின்றது
விலங்கு இப்போது.

‘புலியாகும் புண்ணியம்
கிடைத்தாலும் எலியின்
இதயத்துடனேதான்
இருப்பேன் என்கிறநீ
எலியாகவேதான்
மாறிப் போ!’
வரங்களைத் திரும்ப
வாங்கிக் கொண்டு
தன் தவத்திலே
மூழ்கிப் போனார் முனி.

*** *** ***

Series Navigation