This entry is in the series 20050106_Issue

நாகூர் ரூமி


====

சில கேள்விகளை ஊற்ற ஊற்ற
வளருகின்றன பதில்கள்.
சில பதில்களை ஊற்ற ஊற்ற
முளைக்கின்றன கேள்விகள்.

சில கேள்விகளை தரையில் கேட்டால்
விடை சொல்கிறது வானம்.
சில கேள்விகளை வானத்திடம் கேட்டால்
பதில் சொல்கிறது பூமி.

கசப்பான கேள்விகளுக்கு
பாயச பதில்களும்
எட்டிக் கேள்விகளுக்கு
இனிப்பான பதில்களும்
பரிமாறப்படுவதுண்டு.

பதில் தேவைப்படாத கேள்விகள்
பல உண்டு.
கேள்விகளை அழிக்கும் பதில்களும்
சில உண்டு.

கேள்விகள் பதில்களாகும்போது
பதில்கள் கேள்விகளாகின்றன.
கேள்விகள் களைப்புறும்போது
பதில்களும் பட்டுப் போகின்றன.

கேள்விகளும் பதில்களும் அற்றதுதான்
என் வேள்வி.

–நாகூர் ரூமி

Series Navigation