This entry is in the series 20031010_Issue

புகாரி


இதழுடன் கொஞ்சிக் கொஞ்சி
இதயத்தில் உலவிவரும்
என்னருமைக் கண்மணியே

உனையன்று
முதன்முதலில் கண்டதுமே
முத்தமழை பொழியயெண்ணி
மும்முரமாய் எத்தனித்தேன்

நீயங்கோ
கதம்பமலர்க் குவியலிலே
கண்டோரை ஏங்கவைக்கும்
காட்டுமல்லியாய்ப் புன்னகைத்தாய்

நீர்த்துளித்த
மிதமான குளிர்காற்றிலுன்
மென்னுடலில் பள்ளிகொள்ள
மறைவிடம் தேடிச்சென்றேன்

உனையன்று
இதமாக அள்ளியெடுத்து
இதழோரம் இருகணைத்து
இன்பரசங் கண்டேனடி

ஐயகோ அதை
நிதமும் நானெண்ணி விழி
நித்திரையிலும் கனாக்கண்டு
நெஞ்சத்தை இழந்தேனடி

தினமுமுனை
விதவிதமாய் அனுபவிக்க
வேலைகளை விட்டொழித்து
வருவேன் நீ வருவாயடி

வந்துவந்து
மதங்கொண்ட என்நெஞ்சை
மகிழ்வினில் மிதக்கவிடப் புகை
மலர்களள்ளி இறைப்பாயடி
சிகரெட்டே!

O

இளமை மலரை எரிக்காதே
ஈரல் குடிலைக் கருக்காதே
புகையின் நடுவில் பூக்காதே
புதையும் வாழ்வைத் தேடாதே

*

அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation