This entry is in the series 20060922_Issue

பாஷா


செங்கல் சுண்ணாம்பு நிரப்பி
காகித கற்றைகளில் என்
பெயர் பரப்பி
உறவு அழைத்து ஒரு
விருந்தில் அதன் பெருமை சொல்லி
வீடு என்று கொண்டாடும்
இது உள்ளே ஒளிந்திருக்கிறதா
எனது இருப்பு!

ஒரு
மழை மாலையில்
மல்லிகை மணத்தில் அவள்
இதழ்வழி சொட்டும் நீர் என்
இமை நுனி தெறிக்க
எல்லாம் இவளெயென
தலை சாய்த்திருந்த
அவள் மடியிலிருக்கிறதா
எனது இருப்பு!

என்
கனவுகளையும் ஆசைகளையும்
விந்து துளியாய் கருவறையில் விதைத்து
நீருற்றி பின்
நெடும் தொலைவிலிருந்து
தொலைபேசியில் வரும் குரலில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
அந்த பிம்பத்திடமா இருக்கிறது
எனது இருப்பு!

நீண்ட நெடிய கால கணக்கின்
இறுதி விடை கிடைக்கும் நொடியில்
கருமேகங்களுக்குள் ஒளியும் நட்சத்திரங்களாய்
காணாமல் போகிறது
எனது இருப்பு!

பின்னொரு நாளில் என்
சவக் குழியில்
ஓலை பாய்க்கும்
மூங்கில் கழிகளுக்குமான
வெற்றிடத்தை அது
நிரப்ப கூடும்.
——————————————————————————-
sikkandarbasha@hotmail.com

Series Navigation