இன்றைய சிறுவர் நாளை உலகம்
கவிதா நோர்வே

பழங்காவியங்களில் கறையிருந்தாலும்
அக்காலப்போருக்கொரு வீரமிருக்கும்
காதல் இருக்கும்
வெட்டி வீழ்த்துவதில்
நேர்மையிருக்கும்
என்னத்தை வளர்ந்தோம்
நாங்கள்
என்னத்தை வளர்த்தோம்
இன்று
குழந்தைகளை போருக்கிழுத்த
குரங்குகளை நோவதா
குழந்தையென்றும் பாராமல்
குதறித்தின்னும்
நாய்களை நோவதா
குரங்குக்குக் கோயில் கட்ட
நாலு பேர்
நாய்க்கு நாக்கு வழிக்க
நாலு பேர்
அந்த எட்டில்
நீ எந்தப் பக்கம்?
இரண்டிலும் சேராமல்
நடுதெருவில் நாட்டி நிற்கும்
நான் யார்?
இந்த லட்சணத்தில்…
குரங்குக்கும் நாய்க்கும்
புலி சிங்கம் என்று
கௌரவப்பட்டம் வேறு
தூ…..!