இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு (ஒளிப்படங்களுடன்)

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

கெளதமநாதன்


(தாமதமாக வந்த ஒளிப்படங்களுக்காக, முழுமை கருதி மீண்டும் அதே கட்டுரை)

சாகித்ய அகாதமி. அது வருடத்திற்கொருமுறை தமிழ் படைப்பாளிகளுக்கு சடங்காக விருதினை அளிக்கிற ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதாகத்தான் பெரும்பாலான தமிழர்களுக்கு இதுகாறும் அறிமுகம் கொண்டிருந்தது. ஆனால் தயாரிக்கப்படாத ஒரு சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து படைப்பாளிகள் அணிவகுத்துக் கொண்டு பத்திரிகைகளிலும் டி.வி. சேனல்களிலும் செய்த சண்டைகள் அகாதமிக்கு விரும்பத்தகாத பிரபலத்தைக் கொடுத்துவிட்டன. சாகித்ய அகாதமி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ் கலைப் பள்ளியுடன் இணைந்து 22, 23, 24ம் தேதிகளில் ஜனவரி மாதம் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கு அதன் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்துகிற திருப்பு முனையாக அமையவேண்டும் என்றெண்ணி, சர்ச்சையில் ஈடுபட்டிருந்த எழுத்தாளர்கள் முற்றாக விலக்கப்பட்டிருந்தனர். திரை உலகைச் சேர்ந்த படைப்பாளிகளும் இலக்கியப் படைப்பாளிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்கின் பொருள் ‘இலக்கியமும் திரைப்படமும். ‘ இலக்கியம் திரைப்படத்தின் மீது கொண்டுள்ள ஆளுமை, திரைப்படத்திற்கு இலக்கியத்தின் பங்களிப்பு போன்றவற்றுடன் திரைப்படம் குறித்த தனித்தலைப்புகளும் (திரையுலக வரலாறு, தமிழ் திரை நிலை, பாடல், உரையாடல் போன்றவை) விவாதிக்கப்பட்டன. ஆனால் திரைப்படம் தமிழ் இலக்கியத்தை பாதித்தது பற்றி எவரும் கருத்து தெரிவிக்கவில்லை. திரைப்படம் இலக்கியத்தை பாதித்துவிடக் கூடாது என்பது போன்ற கருத்துகள் இலக்கியவாதிகளால் ஒருசில சமயங்களில் மொழியப்பட்டன. ஆனால் பொதுவாக திரைப்படத்தை நன்கு புரிந்துக் கொள்ள இலக்கியவாதிகள் முயற்சிப்பதும் திரைப்படக்கலைஞர்கள் இலக்கியத்தின் மீது கொண்டுள்ள பக்தியும் இந்த கருத்தரங்கில் நன்றாக வெளிப்பட்டது.

முதன்மைக் கருத்துரையை ஜெயகாந்தன் வழங்கினார். ‘இலக்கியம் அசல். சினிமா நகல் ‘ என்று துவங்கியவர் தான் சினிமாவிலிருந்து நிறைய கற்றுக் கொண்டதையும் சினிமா பிரச்சார பலம் கொண்ட சாதனம் என்பதையும் சுருக்கமாகக் கூறினார். தான் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க வந்திருப்பதாகக் கூறியவர் விழா நிர்வாகிகளிடம் அங்கு படிக்கப்படும் கட்டுரைகளின் நகல்களை தமக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொண்டார்.

பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ள நீல பத்மநாபன் மலையாள டைரக்டர் அரவிந்தனின் ‘சிதம்பரம் ‘ படத்திற்கு தமிழ் வசனங்களை எழுதியவர் என்பது அவ்வளவாகத் தெரிய வராத தகவல். நமது திரையுலகினரின் உலகத்தரம் வாய்ந்த படங்கள் வெளிவராததற்கு வணிக நோக்குதான் காரணம் என்று குற்றம் சாட்டியவர் அங்காங்கே சில நல்ல படங்கள் தமிழில் வந்திருந்த போதிலும் தொடர்ச்சியான ஒரு இயக்கம் உருவாகவில்லை என்றார். இக்கருத்தினை ஒட்டியும் எதிர்த்தும் பலரது விவாதங்கள் அமைந்தன.

டைரக்டர் ஞானராஜசேகரன் தமிழ் சினிமாவுடன் இலக்கியம் இணையவில்லை என்றார். ஆனால் கேரளாவில் அது சாத்தியப்பட்டிருப்பதாகக் கூறினார். இலக்கியப் படைப்புகளை படமெடுத்தால் அதற்கு இலக்கியவாதிகளிடமிருந்தே எதிர்ப்பு கிளம்புகிறது என்று வருத்தப்பட்டார். பாலு மகேந்திரா தனது படங்களுக்கு விமர்சகர்கள் இடையே அங்கீகாரம் கிடைக்காதது குறித்து மிகவும் குறைபட்டார். தனது ‘கதை நேரம் ‘ டி.வி. தொடர்மூலமாக ஏராளமான எழுத்தாளர்களின் கதைகளைப் படமாக்கியுள்ளதை நினைவு படுத்தினார். தமிழ் சினிமா இசைநாடகத்தின் தொடர்ச்சி என்று இக்கருத்தரங்கினை பாண்டிச்சேரியில் அமைக்கும் பொறுப்பினை ஏற்ற கே.ஏ.குணசேகரன் கூறினார். பூமணி, பிரேம் ஆகியோரின் கருத்துகளும் இதனை ஒட்டியிருந்தன. பிரேம் சினிமாவை ஒரு புதிய புலன் என்று கூறினார்.

இலக்கிய ரசனைக்கான பாரம்பரியம் நம்மிடையே உள்ளது. ஆனால் அசைகிற பிம்பத்தை புரிந்துகொள்வதில் கலாச்சார வேறுபாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அம்ஷன் குமார். இந்தியர்கள் யதார்த்த இலக்கியத்தின் மூலமாகத்தான் சினிமாவை தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள் என்றும் சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி ‘ அதற்கு சிறந்த உதாரணம் என்றும் கூறினார். திரைப்படத்தின் சமூக தாக்கங்கள் அலசப்பட்டன. தமிழ் சினிமாவை சாதுவான பிராணி என்று வெங்கட் சாமிநாதன் வர்ணித்தார். புதியபாதை, சவால், கலகம் ஆகியன தமிழ் சினிமாவிற்கு ஒத்து வராத சமாசாரங்கள். பாரதியின் பாடல்கள் கூட பிரிட்டிஷ் அரசாங்கம் தனது எதிர்ப்பின் வலிமையைக் குறைத்துக் கொண்ட காலங்களில் தான் திரைப்படங்களில் இடம் பெற்றன. அரசியல் படங்கள் தணிக்கை அதிகாரிகளிடம் காட்டப்பட்டு அவர்களது முன் அனுமதி பெற்று வெளியிடப்படுகின்றன. பால்தாக்கரேயிடம் காட்டப்பட்ட பிறகு ‘பம்பாய் ‘ படம் வெளியானது என்றும் குறிப்பிட்டார்.

திராவிடக் கருத்துள்ள படங்களிலும் எதிர்ப்பு குணங்கள் இல்லை என்று அ.மார்க்ஸ் கூறினார். திராவிடக் கழகத்தினரின் நாடகங்களில் இருந்த எதிர்ப்பு முகம் அவைகள் படமாக்கப்பட்ட பொழுது அரசியல் லாபம் கருதி சிதைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஒரே பெண் பங்கேற்பாளரன ப்ரீதம் பெண்கள் கவனமின்றி சினிமாவில் சித்தரிக்கப்படுவதாக வாதிட்டார். ஒரு பெண் கதாபாத்திரம் என்ன வேலை பார்க்கிறாள் என்பதைக்கூட சரிவர திரைப்படம் காட்டுவதில்லை என்றார்.

டாகுமெண்டரி படங்களைப் பற்றி பேசிய இயக்குனர் அருண்மொழி தற்சார்புடன் கூடிய படங்களை முன்னர் அரசாங்கமே தயாரித்தன. ஆனால் அவற்றைத் தயாரிக்க அதனால் பயன் பெறும் சில தனியார் நிறுவனங்களும் இப்பொழுது முன் வருவதைக் குறிப்பிட்டார்.

மாற்று சினிமா பற்றிய கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. சினிமா பலகலைகளை உபயோகித்தாலும் வியாபார சினிமா என்கிற பகுதியின் வளர்ச்சி பூதாகாரமானதாக இருக்கிறது என்று நாசர் குறிப்பிட்டார். சினிமாவிற்கு வருபவர்களுக்கு பயிற்சி இல்லை என்று கூறினார். டிஜிடல் சாதனங்களின் உதவி கொண்டு குறைந்த பட்ஜெட்டில் நம்மிடையே நிலவும் யதார்த்தத்தை எவரும் படம் எடுக்க முன் வரலாம் என்று ஆர்.ஆர்.சீனிவாசன் கூறினார். டி.செல்வராஜ் தமிழ் சினிமாவில் எதிர் கலாச்சாரத்தின் தேவையை வலியுறுத்தினார்.

ராஜன்குறை மற்றவர்கள் மீது திரைப்படத்துறையினர் பழி சுமத்துகிறார்கள் என்றும் நல்ல படத்தைத் தர வேண்டும் என்று துடிப்பவர்களை எவரும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கவில்லை என்றும் பேசினார். தமிழ் சினிமாவை முழுமையாக நிராகரிப்பது காலனி ஆதிக்கத்தினர் பழங்குடியினரின் கலையை உதாசீனப்படுத்துவதற்கு ஒப்பானதாகும் என்றார். ஓவியம் இலக்கியம் ஆகியவற்றுடன் சம்பந்தப்படுத்தி சினிமாவின் காட்சிப்படுத்தல் பற்றி பேசினார் பாவண்ணன். தற்குறிப்பேற்றம் சினிமாவில் எவ்வாறு வருகிறது என்பதை சில உதாரணங்களுடன் விளக்கினார்.

தமிழ் சினிமா சரித்திரத்தை எழுதுவதில் உள்ள சங்கடங்கள் பற்றி தியோடர் பாஸ்கரன் விவரித்தார். சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டிருந்ததால் அதிகாரபூர்வமான ஆவணப்படங்கள் எதுவும் தோற்றுவிக்கப்படவில்லை. நைட்ரேட்டை ஆதாரமாகக் கொண்ட பிலிம் நமது சீதோஷ்ணத்தை தாங்க முடியவில்லை. எனவே அது விரைவாக அழிந்து போயிற்று. மேலும் அதில் இருந்த வெள்ளியை விற்பதற்காக பிலிம் சுருள்கள் எரிக்கப்பட்டன. தமிழில் எடுக்கப்பட்ட மெளனப்படங்களில் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் அழிந்துவிட்டன என்றார்.

நிறைவுப் பேருரையாற்ற இளையராஜா அழைக்கப்பட்டிருந்தார். மாணவர்களும் பொதுமக்களும் பார்வையாளர்களாக திரண்டிருந்ததால் கூட்டம் அலை மோதியது. முதன் முறையாக தான் இசையைப் பற்றி பேசவந்திருப்பதாகக் கூறினார். தன்னை மற்றவர்கள் சரியாகப் புகழவில்லை என்பதால் தானே தன்னைப்பற்றி பீற்றிக் கொள்வதாகவும் கூறி அதில் சிறிது நேரம் ஈடுபட்டார். ‘பதினாறு வயதினிலே ‘ படத்திற்குப் பிறகு தன்னுடைய பாணி உருவானதாகக் கூறினார். டைரக்டர் தவற விட்டதை இசை அமைப்பாளர் ஈடுகட்டமுடியும் என்றவர் மிலோஸ் போர்மன் இயக்கத்தில் வெளியான ‘Amadeus ‘ படத்தின் ஒரு காட்சியைப் போட்டுக்காட்டி அதில் உரையாடல் எவ்வாறு பிண்ணனி இசையாக உருமாறியுள்ளது என்பதை விளக்கினார். தனது படங்களிலும் அந்த முறையைப் பின்பற்றுவதாகக் கூறினார்.

இலக்கியவாதிகளும் சினிமா கலைஞர்களும் தங்களது தளங்களில் நின்று கொண்டு பரஸ்பரம் கருத்துகளை பரிமாற்றம் செய்து கொண்டது இதுவே முதல் தடவையாகும்.

**

Series Navigation

கெளதமநாதன்

கெளதமநாதன்

இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

கெளதமநாதன்


சாகித்ய அகாதமி. அது வருடத்திற்கொருமுறை தமிழ் படைப்பாளிகளுக்கு சடங்காக விருதினை அளிக்கிற ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதாகத்தான் பெரும்பாலான தமிழர்களுக்கு இதுகாறும் அறிமுகம் கொண்டிருந்தது. ஆனால் தயாரிக்கப்படாத ஒரு சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து படைப்பாளிகள் அணிவகுத்துக் கொண்டு பத்திரிகைகளிலும் டி.வி. சேனல்களிலும் செய்த சண்டைகள் அகாதமிக்கு விரும்பத்தகாத பிரபலத்தைக் கொடுத்துவிட்டன. சாகித்ய அகாதமி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ் கலைப் பள்ளியுடன் இணைந்து 22, 23, 24ம் தேதிகளில் ஜனவரி மாதம் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கு அதன் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்துகிற திருப்பு முனையாக அமையவேண்டும் என்றெண்ணி, சர்ச்சையில் ஈடுபட்டிருந்த எழுத்தாளர்கள் முற்றாக விலக்கப்பட்டிருந்தனர். திரை உலகைச் சேர்ந்த படைப்பாளிகளும் இலக்கியப் படைப்பாளிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்கின் பொருள் ‘இலக்கியமும் திரைப்படமும். ‘ இலக்கியம் திரைப்படத்தின் மீது கொண்டுள்ள ஆளுமை, திரைப்படத்திற்கு இலக்கியத்தின் பங்களிப்பு போன்றவற்றுடன் திரைப்படம் குறித்த தனித்தலைப்புகளும் (திரையுலக வரலாறு, தமிழ் திரை நிலை, பாடல், உரையாடல் போன்றவை) விவாதிக்கப்பட்டன. ஆனால் திரைப்படம் தமிழ் இலக்கியத்தை பாதித்தது பற்றி எவரும் கருத்து தெரிவிக்கவில்லை. திரைப்படம் இலக்கியத்தை பாதித்துவிடக் கூடாது என்பது போன்ற கருத்துகள் இலக்கியவாதிகளால் ஒருசில சமயங்களில் மொழியப்பட்டன. ஆனால் பொதுவாக திரைப்படத்தை நன்கு புரிந்துக் கொள்ள இலக்கியவாதிகள் முயற்சிப்பதும் திரைப்படக்கலைஞர்கள் இலக்கியத்தின் மீது கொண்டுள்ள பக்தியும் இந்த கருத்தரங்கில் நன்றாக வெளிப்பட்டது.

முதன்மைக் கருத்துரையை ஜெயகாந்தன் வழங்கினார். ‘இலக்கியம் அசல். சினிமா நகல் ‘ என்று துவங்கியவர் தான் சினிமாவிலிருந்து நிறைய கற்றுக் கொண்டதையும் சினிமா பிரச்சார பலம் கொண்ட சாதனம் என்பதையும் சுருக்கமாகக் கூறினார். தான் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க வந்திருப்பதாகக் கூறியவர் விழா நிர்வாகிகளிடம் அங்கு படிக்கப்படும் கட்டுரைகளின் நகல்களை தமக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொண்டார்.

பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ள நீல பத்மநாபன் மலையாள டைரக்டர் அரவிந்தனின் ‘சிதம்பரம் ‘ படத்திற்கு தமிழ் வசனங்களை எழுதியவர் என்பது அவ்வளவாகத் தெரிய வராத தகவல். நமது திரையுலகினரின் உலகத்தரம் வாய்ந்த படங்கள் வெளிவராததற்கு வணிக நோக்குதான் காரணம் என்று குற்றம் சாட்டியவர் அங்காங்கே சில நல்ல படங்கள் தமிழில் வந்திருந்த போதிலும் தொடர்ச்சியான ஒரு இயக்கம் உருவாகவில்லை என்றார். இக்கருத்தினை ஒட்டியும் எதிர்த்தும் பலரது விவாதங்கள் அமைந்தன.

டைரக்டர் ஞானராஜசேகரன் தமிழ் சினிமாவுடன் இலக்கியம் இணையவில்லை என்றார். ஆனால் கேரளாவில் அது சாத்தியப்பட்டிருப்பதாகக் கூறினார். இலக்கியப் படைப்புகளை படமெடுத்தால் அதற்கு இலக்கியவாதிகளிடமிருந்தே எதிர்ப்பு கிளம்புகிறது என்று வருத்தப்பட்டார். பாலு மகேந்திரா தனது படங்களுக்கு விமர்சகர்கள் இடையே அங்கீகாரம் கிடைக்காதது குறித்து மிகவும் குறைபட்டார். தனது ‘கதை நேரம் ‘ டி.வி. தொடர்மூலமாக ஏராளமான எழுத்தாளர்களின் கதைகளைப் படமாக்கியுள்ளதை நினைவு படுத்தினார். தமிழ் சினிமா இசைநாடகத்தின் தொடர்ச்சி என்று இக்கருத்தரங்கினை பாண்டிச்சேரியில் அமைக்கும் பொறுப்பினை ஏற்ற கே.ஏ.குணசேகரன் கூறினார். பூமணி, பிரேம் ஆகியோரின் கருத்துகளும் இதனை ஒட்டியிருந்தன. பிரேம் சினிமாவை ஒரு புதிய புலன் என்று கூறினார்.

இலக்கிய ரசனைக்கான பாரம்பரியம் நம்மிடையே உள்ளது. ஆனால் அசைகிற பிம்பத்தை புரிந்துகொள்வதில் கலாச்சார வேறுபாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அம்ஷன் குமார். இந்தியர்கள் யதார்த்த இலக்கியத்தின் மூலமாகத்தான் சினிமாவை தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள் என்றும் சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி ‘ அதற்கு சிறந்த உதாரணம் என்றும் கூறினார். திரைப்படத்தின் சமூக தாக்கங்கள் அலசப்பட்டன. தமிழ் சினிமாவை சாதுவான பிராணி என்று வெங்கட் சாமிநாதன் வர்ணித்தார். புதியபாதை, சவால், கலகம் ஆகியன தமிழ் சினிமாவிற்கு ஒத்து வராத சமாசாரங்கள். பாரதியின் பாடல்கள் கூட பிரிட்டிஷ் அரசாங்கம் தனது எதிர்ப்பின் வலிமையைக் குறைத்துக் கொண்ட காலங்களில் தான் திரைப்படங்களில் இடம் பெற்றன. அரசியல் படங்கள் தணிக்கை அதிகாரிகளிடம் காட்டப்பட்டு அவர்களது முன் அனுமதி பெற்று வெளியிடப்படுகின்றன. பால்தாக்கரேயிடம் காட்டப்பட்ட பிறகு ‘பம்பாய் ‘ படம் வெளியானது என்றும் குறிப்பிட்டார்.

திராவிடக் கருத்துள்ள படங்களிலும் எதிர்ப்பு குணங்கள் இல்லை என்று அ.மார்க்ஸ் கூறினார். திராவிடக் கழகத்தினரின் நாடகங்களில் இருந்த எதிர்ப்பு முகம் அவைகள் படமாக்கப்பட்ட பொழுது அரசியல் லாபம் கருதி சிதைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஒரே பெண் பங்கேற்பாளரன ப்ரீதம் பெண்கள் கவனமின்றி சினிமாவில் சித்தரிக்கப்படுவதாக வாதிட்டார். ஒரு பெண் கதாபாத்திரம் என்ன வேலை பார்க்கிறாள் என்பதைக்கூட சரிவர திரைப்படம் காட்டுவதில்லை என்றார்.

டாகுமெண்டரி படங்களைப் பற்றி பேசிய இயக்குனர் அருண்மொழி தற்சார்புடன் கூடிய படங்களை முன்னர் அரசாங்கமே தயாரித்தன. ஆனால் அவற்றைத் தயாரிக்க அதனால் பயன் பெறும் சில தனியார் நிறுவனங்களும் இப்பொழுது முன் வருவதைக் குறிப்பிட்டார்.

மாற்று சினிமா பற்றிய கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. சினிமா பலகலைகளை உபயோகித்தாலும் வியாபார சினிமா என்கிற பகுதியின் வளர்ச்சி பூதாகாரமானதாக இருக்கிறது என்று நாசர் குறிப்பிட்டார். சினிமாவிற்கு வருபவர்களுக்கு பயிற்சி இல்லை என்று கூறினார். டிஜிடல் சாதனங்களின் உதவி கொண்டு குறைந்த பட்ஜெட்டில் நம்மிடையே நிலவும் யதார்த்தத்தை எவரும் படம் எடுக்க முன் வரலாம் என்று ஆர்.ஆர்.சீனிவாசன் கூறினார். டி.செல்வராஜ் தமிழ் சினிமாவில் எதிர் கலாச்சாரத்தின் தேவையை வலியுறுத்தினார்.

ராஜன்குறை மற்றவர்கள் மீது திரைப்படத்துறையினர் பழி சுமத்துகிறார்கள் என்றும் நல்ல படத்தைத் தர வேண்டும் என்று துடிப்பவர்களை எவரும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கவில்லை என்றும் பேசினார். தமிழ் சினிமாவை முழுமையாக நிராகரிப்பது காலனி ஆதிக்கத்தினர் பழங்குடியினரின் கலையை உதாசீனப்படுத்துவதற்கு ஒப்பானதாகும் என்றார். ஓவியம் இலக்கியம் ஆகியவற்றுடன் சம்பந்தப்படுத்தி சினிமாவின் காட்சிப்படுத்தல் பற்றி பேசினார் பாவண்ணன். தற்குறிப்பேற்றம் சினிமாவில் எவ்வாறு வருகிறது என்பதை சில உதாரணங்களுடன் விளக்கினார்.

தமிழ் சினிமா சரித்திரத்தை எழுதுவதில் உள்ள சங்கடங்கள் பற்றி தியோடர் பாஸ்கரன் விவரித்தார். சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டிருந்ததால் அதிகாரபூர்வமான ஆவணப்படங்கள் எதுவும் தோற்றுவிக்கப்படவில்லை. நைட்ரேட்டை ஆதாரமாகக் கொண்ட பிலிம் நமது சீதோஷ்ணத்தை தாங்க முடியவில்லை. எனவே அது விரைவாக அழிந்து போயிற்று. மேலும் அதில் இருந்த வெள்ளியை விற்பதற்காக பிலிம் சுருள்கள் எரிக்கப்பட்டன. தமிழில் எடுக்கப்பட்ட மெளனப்படங்களில் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் அழிந்துவிட்டன என்றார்.

நிறைவுப் பேருரையாற்ற இளையராஜா அழைக்கப்பட்டிருந்தார். மாணவர்களும் பொதுமக்களும் பார்வையாளர்களாக திரண்டிருந்ததால் கூட்டம் அலை மோதியது. முதன் முறையாக தான் இசையைப் பற்றி பேசவந்திருப்பதாகக் கூறினார். தன்னை மற்றவர்கள் சரியாகப் புகழவில்லை என்பதால் தானே தன்னைப்பற்றி பீற்றிக் கொள்வதாகவும் கூறி அதில் சிறிது நேரம் ஈடுபட்டார். ‘பதினாறு வயதினிலே ‘ படத்திற்குப் பிறகு தன்னுடைய பாணி உருவானதாகக் கூறினார். டைரக்டர் தவற விட்டதை இசை அமைப்பாளர் ஈடுகட்டமுடியும் என்றவர் மிலோஸ் போர்மன் இயக்கத்தில் வெளியான ‘Amadeus ‘ படத்தின் ஒரு காட்சியைப் போட்டுக்காட்டி அதில் உரையாடல் எவ்வாறு பிண்ணனி இசையாக உருமாறியுள்ளது என்பதை விளக்கினார். தனது படங்களிலும் அந்த முறையைப் பின்பற்றுவதாகக் கூறினார்.

இலக்கியவாதிகளும் சினிமா கலைஞர்களும் தங்களது தளங்களில் நின்று கொண்டு பரஸ்பரம் கருத்துகளை பரிமாற்றம் செய்து கொண்டது இதுவே முதல் தடவையாகும்.

**

Series Navigation

கெளதமநாதன்

கெளதமநாதன்