அஞ்சலியிலும் சாதி துவேஷமா?

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

ஜடாயு


அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்ற திண்ணை இதழில் வ.ஐ.ச ஜயபாலன் என்பவர் சுஜாதா பற்றிய தன் “அஞ்சலி”க் கட்டுரையில் இப்படி எழுதிக் கொண்டு போகிறார் –

“.. எனினும் என்னுடைய தமிழக நண்பர்கள் சிலர் அவர் பிராமணர் என்ற காரணத்தால் அவரது பங்களிப்பை கண்டு கொள்ள மறுத்தார்கள். ஆனால் கோமல் சுவாமி நாதன் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதியில் இருந்து மங்கை கிருஸ்னாடாவின்சி வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த எனது கலைத்துறை நண்பர்கள் பலரின் பிராமண பின்னணி பிறப்பின் விபத்து மட்டுமே என்பதை என்பதை நான் அறிந்திருந்தேன். ராமானுஜரைப் போலவே நண்பர் சுஜாதாவுக்கும் வரித்துக்கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ்க் கலாச்சாரத்தைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களும் பிறப்பின் விபத்துத்தான்.”

பிராமண பின்னணி *பிறப்பின் விபத்து* என்று பேசும் அந்த எழுத்துக்களில் தோய்ந்திருக்கும் அதீத வெறுப்பும், துவேஷமும் அருவருக்கத் தக்கதாயிருக்கிறது. இங்கே குறிப்பிட்டுள்ளவர்கள் பிராமணக் குடும்பத்தில் பிறந்தது “விபத்து” என்றால் அவர்களின் ஆளுமை, திறமைகள், பண்பு இவற்றில் அந்தக் குடும்பங்களின், வளர்ப்பின், சூழலில் தாக்கம் எதுவும் கிடையாதா? எந்த உரிமையில் பிறரைப் பற்றி இப்படி எழுத வருகிறது?

அப்படிப் பார்த்தால் எல்லா பிறப்பு அடையாளங்களும் “விபத்து” தானே? ஒரு நாடாரோ, செட்டியாரோ, முதலியாரோ, வன்னியரோ இறந்து போய் அவரை நினைவு கூறும்போதும் இதே மாதிரி சொல்லத் துணிவாரா? அல்லது “பிராமண பிறப்பு” மட்டும் தான் விபத்தா? ஒரு கவிஞர் என்று சொல்லிக் கொள்பவரிடம் இவ்வளவு காழ்ப்புணர்வா?

சுஜாதா நாலாயிர திவ்யப் பிரபந்த தமிழ்க் கலாசாரத்தை “வரித்துக் கொண்டார்” என்பது அதைவிடப் பெரிய அபத்தம்..
அவரது ஸ்ரீரங்க குடும்பச் சூழல் மற்றும் வளர்ப்பு அல்லவா அதன் பின் இருந்தது .. சிறுவயதில் பார்த்த பிரபந்த கோஷ்டிகளும், அரையர் சேவையும் அவரது ஆழ்மனதில் பதிந்தது பற்றி சுஜாதாவே மிக விரிவாக எழுதியிருக்கிறார். இந்த அவதூறில் ஸ்ரீராமானுஜரையும் இழுத்திருப்பது அறியாமையின் உச்சக் கட்டம்.

மேலும் அது தமிழ் என்பதை விடவும் இந்து ஆன்மிகத்திற்கு உட்பட்ட ஸ்ரீவைஷ்ணவ கலாசாரம் என்பதே சரியாகப் பொருந்தும். ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் ஏராளமான வைணவக் குடும்பங்கள் தங்கள் தாய்மொழி எழுத்தில் பல்லாண்டும், திருப்பாவையும் பல தலைமுறைகளாகப் படித்து வருகின்றன.. இமயச் சாரலில் பத்ரிநாத் அருகில் முக்திநாராயண பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் இருக்கிறார்கள்.. “கோதாம்பா” என்ற கோதை நாச்சியார் திருச்சன்னிதி உள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளிலும், வங்கத்திலும் ராமானுஜ மரபைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவர் இருக்கிறார்கள்.. இவரது குறுமதிக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது?

முன்பு இசை அரசி எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் மறைவை ஒட்டி ஞாநி எழுதிய திண்ணைக் கட்டுரையிலும் இதே போன்று சாதி அடையாளத்தை இழுத்திருந்தார். அப்போது அது வன்மையாகக் கண்டிக்கப் பட்டு, திண்ணையில் அவர் எழுதுவதை நிறுத்துவதாகச் சொன்னார் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

அஞ்சலிக் கட்டுரை என்ற பெயரில் சுஜாதாவின் முன்னோர்களையும், அவரது நம்பிக்கைகளையும் அவமதித்திருக்கிறார் ஜெயபாலன். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு


Series Navigation

ஜடாயு

ஜடாயு