உண்மையின் ஊர்வலங்கள்.. -1

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

புதியமாதவி


(ஊர்வலம் 1)

உண்மைகள் சில சமயங்களில் கற்பனைகளை விட அற்புதமானவை. அழகானவை. அதனால்தான் உண்மையின் ஊர்வலங்கள் எவ்வித ஒப்பனையுமில்லாமல் உங்கள் வீதிகளில் வலம் வர வேண்டும் என்று

விரும்புகிறேன். 100 % கற்பனை கலக்காத உண்மையின் தரிசனங்களில் மனம் உருகிக் கரைந்து போகிறது.இப்படியும் இருக்கிறார்களா ? இது நிஜம்தானா ? இவர்கள் நம்முடம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா ? இந்தச் சாதாரண மனிதர்களின் உண்மை முகங்களில்தான் எத்தனை இனிய கவிதைகளின் சாயல். வாசிக்க வாசிக்க நாமே அந்த உண்மையாகி, உண்மையில் கலந்து ஊண் உருகி உயிர்க் கரைந்து நம் சுயமிழந்து…உண்மையின் சுமையிலும் ஒரு சுகம்.

பிப்ரவரி 02 , 2006 வந்தால் அவனுக்கு , வினய்பாலுக்கு வயது 17. அவன் மும்பையின் ஜோகேஸ்வரி புறநகர்ப்பகுதியில் தன் அப்பா ராம்பாலுடன் இருக்கிறான். இந்த ஆண்டு +2 தேர்வு எழுதுகிறான். தேர்வுக்கு முன்பு தன் பிறந்த நாளில் தன் தாயின் ஆசி பெற அவன் நானாவதி மருத்துவமனைக்குப் போனான். அவன் தாய் காமாதேவிக்கு என்ன வியாதி என்று கேட்காதீர்கள். அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே அவள் இந்த மருத்துவமனையில் பெட் நம்பர் 33ல் தானிருக்கிறாள். அவனை அவளுக்கு அடையாளம் தெரிவதில்லை. 1989ல் சிசரியன் ஆபரேஷன் செய்து அவன் பிறந்ததலிருந்து அவளுக்கு அவள் மகனை அடையாளம் காண முடிவதில்லை. அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் கொடுத்த மயக்கமருந்தின் அளவு அதிகமானதால் அவள் மூளைப் பாதிக்கப்பட்டுவிட்டது. அவளால் பேச முடிவதில்லை. யாரையும் அடையாளம் காண முடியாத வெறித்தப் பார்வையுடன் தொடர்கிறது இந்தப் பதினேழு வருடங்களாக இந்த மருத்துவமனையில் அவள் வாழ்க்கை.

கோர்ட், வழக்கு, விசாரனை.. எல்லாம் இருந்தும் என்ன பயன் ? அவளுடைய கேஸில் மருத்துவர்களின் பெருந்தவறு இருப்பதால் இதோ 17 வருடங்களாக மருத்துவமனையில் அவள் இருப்பதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது!

ஒவ்வொரு நாளும் (Maharashtra telephone nigam ltd) எம்.டி.என்.எல். ஆபிஸில் கடைநிலை ஊழியராக இருக்கும் ராம்பால் ஆபிஸிலிருந்து நேராக மருத்துவமனைக்குத்தான் போகிறார். தன் மனைவிக்கு தன் கையால் இரவு உணவு கொடுத்துவிட்டு இரவு 10 மணிக்குப் பின் வீடு திரும்புகிறார். இத்தனை வருடங்களாக இதுவே அவர்

வாழ்க்கையாகிவிட்டது. ‘யாராவது ஊட்டினால் கொஞ்சம் சாப்பிடுகிறாள். அதுதான் தினமும் வந்து இரண்டு மணிநேரம் அவளூடன் இருக்கிறேன். இரவு உணவு ஊட்டிவிட்டபின் வீடு திரும்புகிறேன். என்னால் அவளுக்கு செய்ய முடிந்தது

இவ்வளவுதான் ‘ என்று சொல்லுகிறார் ராம்பால்.

மலாட் மிட்டல் கல்லூரியில் படிக்கும் அவர்களின் மகன் வினய்பால் ‘+2வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி வெற்றி பெறுவதுதான் என் பெற்றொர்களுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் ‘ என்கிறார்.

1988ல் ராம்பாலுக்கும் காமாதேவிக்கும் திருமணமாகி இருக்கிறது. ஓராண்டு மணவாழ்க்கையில் வினய் பிறந்திருக்கிறான்.

**

வெறித்தப் பார்வையுடன்

என்னை விலக்கி வைக்கும் விழிகளில்

உறைந்தப் பனிக்கட்டியாய்

இறுகிக்கிடக்கிறது எங்கள்காதல்.

தொடுதலின் வெளிச்சங்கள்

இல்லாத துருவக்கோட்டில்

எப்போதாவது

எட்டிப்பார்க்கலாம்

பனியை உருக்கும் பகலவன்.

அதுவரை நித்தமும்

என்னவளுக்காய்

எரிந்து கொண்டிருக்கும்

என்னுயிர்த் தீயின்

அகல்விளக்கு.

**

(Ref: Mumbai Mirror, Jan31, 2006 pg 2

An oversose of anaesthesia at the time of the cesarean

operation caused permanent brain damage to Gama dEvi. Her

medical condition is known as hypoxic brain damage. she cannot

recognize anyone. Nor can she speak ‘ said medical superindent

Dr. Ashok B hatolkar.

vinaypal who has been raised by his father Rampal in a slum

in Jogeshwari, will seek her blessings on the morning of his birthday Feb 2)

புதியமாதவி, மும்பை

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை