விடிகின்ற பொழுதாய் கவிதை

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

திலகபாமா


வயல் எங்களுக்கானதாய் இருக்க பசியெடுக்கையில் ,, முதலில் இருந்ததை உண்டு பசியாறினோம். அது தீருகின்ற தருவாயில் மீண்டும் விதைக்கப் பழகினோம். அதிகம் தேவை உருவாகின்ற பட்சத்தில் ஏரோட்டினோம். மேல் மண் வளம் குன்றத் துவங்க ஆழ உழுவது பற்றி யோசித்தோம். வானிலிருந்து மழை பொய்க்கும் பருவங்கள் வர ஏரை கீழே வைத்து விட்டு மண் பிளந்து கிணறு வெட்டத் துவங்கினோம்.

இப்படியாக எங்கள் வாழுதலுக்கான தேவைகள் எங்களை புதிதாய் இயங்க வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்ற்ன. தேடல்களை நோக்கி பயணிக்க வைக்கின்றன. அப்படியான ஒரு பயணமே எழுத்துக்கும் நேர்கின்றது. அந்தப் பயணத்தில் நாங்கள் விட்டுச் செல்கின்ற பதிவுகள் அதன் வழியாக வருபவர்களுக்கு வழி காட்டியாகவும்

எச்சரிக்கையாகவும் இங்கு பூக்கள் இருக்குமிடம், இங்கு புதைகுழிகள் இருக்கு மிடம் என அறிவுறுத்தவும் ஊர் போய் சேர்வதற்கான சுகமான வழிகளை தெர்ந்தெடுக்கவும் , சில நேரங்களில் கண்டடையக் கூடியதாகவும் , குறைந்த பட்சம் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கூடிய நிழலாகவோ, சுமை தாங்கி கல்லாகவோவாவது இருக்க வேண்டும். இரூந்திருக்கின்றது.

சங்கத் தமிழ் கவிதைகளை வைத்துப் பார்க்கையில் கவிதையின் பாடுபொருள் பெரும்பாலும் போர் சார்ந்த பிரதிபலிப்புகளாகவே இருந்திருந்திருக்கின்றன. அது அகமாக இருந்தாலும் புறமாக இருந்தாலும் போரின் தாக்கம் நிச்சயமாக இருந்திருக்கின்றது. போருக்கு செல்வது, போரில் வென்றவரை பாடுதல், போரை நிறுத்தவென்று பாடல், போரில் இறந்து பட்ட தலைவன் மகன் இவர்களுக்கான பாடல் இப்படியாக போரும் போர் சார்ந்த வாழ்வுமென பெரும் பாலான கவிதைகளின் பாடு பொருள்கள் இருந்திருக்கின்றன.

பெரும்பாலும் புரவலர்களை , ஆளும் வர்க்கத்தை புகழ்ந்தும் மகிழ்விப்பதுமான கவிதைகளே தரப் பட்டன.

அப்படியிருந்த போதும் வாழ்வியலை பிரதி பலித்திருக்கின்றன. வாழ்வியல் பார்வையை உயிரோட்டமாக கொண்டிருந்திருக்கின்றன யதார்த்தங்களை பிரதிபலித்த போதும் அழகியலை எப்பொழுதும் கை நழுவ விடாது காத்து செவ்வியல் தன்மை வழுவாது இருந்திருக்கின்றன.. வேத்தியலாக மன்னருக்கென பாடப் பட்ட போதும் சில போரை நிறுத்தியிருக்கின்றன. நிறுத்த முயன்றிருக்கின்றன. நல்லுறவை வளர்த்திருக்கின்றன. களவிலிருந்து கற்புக்கு மனிதனை தூண்டியிருக்கின்றன. கற்பென்ற போது அது பெண்ணுக்கானதாய் மட்டும் இல்லாது மனிதனுக்கான ஒழுக்கமாய் முன் நிறுத்தியிருக்கின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமான உணர்வை , நி ?ங்களில் எப்படி இருந்ததோ, கவிதைகளில் விட்டுக் கொடுத்தல்கள் இன்றி சரி செய்திருக்கின்றன. பரத்தமை நாடிப் போகும் தலைவனை கண்டித்திருக்கின்றன. மனித வாழ்வில் இயல்பாக நிகழ்ந்து விடுகின்ற வழுவல்களை , சொல்லும் போதும் அவற்றை காத்து வாழ்வது பற்றியே சிந்திக்க வைத்திருக்கின்றன.

சங்க கவிதைகள் வாசிப்பில் நான் உணர்ந்த இடமிருந்து எழும்பிய சில கேள்விகளை இங்கு முன் வைக்கலாம் என்று நினைக்கின்றேன்

இத்தனை பெண் பாற் புலவர்கள் இருந்தும் அரசனையே இடித்துக் கூறும் தகுதி பெற்றிருந்தும் ஆதிக்க சிந்தனையால் தன் மேல் நிழலாய் வீழ்ந்த இருள் மனோபாவங்களை தவிர்க்க முடியாமல் தவிக்கத்தான் செய்திருக்கிறார்கள் .

‘யாழொடும் கொள்ளா;பொழுதோடும் புணரா

பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு

அருள் வந்தனவால் .,புதல்வர் தம் மழலை

என் வாய்ச் சொல்லும் அன்ன; ஓன்னார்

கடி மதில் அரண் பல கடந்து

நெடுமான் அஞ்சி நீ அருளல்மாறே

‘ என் வாய்ச் சொல்லும் அன்ன ‘

எனும் இந்த கவிதை வரிகள் ,

இன்று பெண்களின் பேச்சு நிராகரிக்கப் படுவது போலவே ஒளவையின் சொற்களும் மதிக்கப் படாமல் போயிருக்கக் கூடுமென நம்மை நினைக்க வைக்கிறது. அப்படியிருந்த போதும் அங்கீகாரங்களை எதிர்பார்க்காது . யாழிசை போன்று என்று மயங்கவும் வெண்டாம், காலத்தோடு ஒத்து வாராது போல தோன்றவும் செய்யலாம், புரியவில்லை என்றும் உரைக்கலாம்.

ஆனாலும் அதையெல்லாம் மீறி தந்தைக்கு குழந்தை சொல் எவ்வளவு மதிப்பானதோ என் வாய்ச் சொல்லும் அத்தகையவையே என்று சொல்லும் சொற்கலில் தெரியும் தன்னம்பிக்கையே அந்த கவிதையின் வாழ்தலுக்கு காரணமென்று நான் நினைக்கிறேன்.

அன்று இருந்த அதே நிலை இன்றும் மாறவில்லை.

‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே ‘

என்ற வரியிலும் அந்த கர்வம், தன்னமிக்கை கலந்த கர்வம் இருப்பது முக்கியம் என்று எனக்கு படுகின்றது. ஆதிக்க சிந்தனையின் அடிமை மனோபாவம் பெண்ண்ணுகுள்ளும் புரையோடிப் போய் இருந்து கொண்டிருக்க அதை தவிர்க்க முடியாமல் தவிப்பது தொடர் முயற்சியாகவே இருந்து வந்து கொண்டிருக்கின்றது. தொடர்ந்து முயலுதல் என்பதுவே இயக்கமாய் இருக்க இன்று எழுத வந்த பெண்ணெழுத்துக்களிலும் அந்த முயற்சிகளில் வென்று விட்டோமா என்றால் அப்பவும் பெண்ணை பெண் உணர்வுகளை ஆணுக்கானதாய் படைத்துத் தரும் மனோபாவமும் அல்லது காத்து தவிப்பதுமாகவே முன் வைப்பது வருத்தம் தருவதாகவே இருக்கின்றது.

காத்திருப்பதும், மகிழ்விப்பதுவும், மன்னிப்பதுவுமே தான் பெண்ணுக்கான இயல்புகளாக அடையாளப் படுத்தப் படுஅதை அந்த காலம் முதல் இன்று வரை பாலியல் சுதந்திரக் கவிதைகளிலும் கூட ஏன் விட்டு வெளியேற முடியவில்லை என்று நாம் யோசிக்க வேண்டும். உடைத்துக் கொண்டு வெளியேறுவதாய் பிரகடனப் படுத்தப் படும் கவிதைகளும் ., உடைத்துக் கொண்டு எங்கு போய் விழுகின்றன என்றால் தொடங்கிய இடமே போய் விழுவதாக அமைக்கின்றது

வேர் என்று ஒன்று இருந்தால் அது மண்ணோடு பின்னிக் கிடக்க வேணும் என்பது போல். பெண் என்று இருந்தால் அவள் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் ஆணுக்கானவளாய் வழங்குவதற்கான ஒன்றாக நிகழ்ந்து விட வேண்டிய நுண்ணிய வழிமுறைகளில், சாதுரியமான முறைகளில் ஆணாதிக்கம் செயல்படுகின்றது

சங்க இலக்கியங்களில் பாடப் பட்டவர்கள் பட்டியலில் ஏறக்குறைய 110 பேர்கள் வரை பாடல் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அந்த பட்டியலில் ஏன் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. பெண்கள் செயல்படவே இடம் இல்லாது போனதாலா ? அல்லது அவர்கள் செயல் பட்ட போதும் அதை வெற்றியாக கண்டவர்கள் இல்லாததா ? காரணம் .

ஆனால் இன்றைய வாழ்க்கையில் போரென்ற சூழல் இல்லாவிடினும், வானத்துக்குக் கீழ் உள்ளவற்றிலிருந்து, பூமிக்கு மேல் உள்ளது வரை எதையும் பாட முடியு மென்றிருந்தும் பெரும்பான்மையான பாடு பொருளாக களனாக வாழ்தலுக்கான போராட்ட வாழ்வு, அழுத்தப் படுகின்ற உணர்வுகளிலிருந்து விடுபடுகின்ற விடுதலை நாடும் எண்ணமும் ஏற்கனவே இருக்கின்ற விழுமியங்கள் இன்றைய இயல்பு வாழ்க்கைக்கு முரணானதாய் இருக்கும் போதும், அதை புணரமைத்து விடும் எண்ணமுமே கவிதைக்கான பாடு பொருளாய் இருக்கின்றது அதே போல் யாருக்காகவும் அல்லாது சுய பிரக்ஞையின் பேரில் எழுதத் துவங்கும் கவிஞனின் வெளி இன்று அதிகரித்திருக்கின்றது என்றே எனக்குப் படுகின்றது அந்த வெளியில் கவிஞனின் கடமையும் எவ்வளவோ எழுத வேண்டிய தேவையும் உயர்ந்திருக்கின்றது

அப்படியிருக்க கவிதை மிக உச்சத்தை அடைந்திருக்க வேண்டும் . ஆனால் திசை மாறி போய்க் கொண்டிருக்கின்றது. காரணம்

*புனிதங்களை கட்டுடைத்தல்

*செய்யப் படு பொருள்

நவீனம் என்றும் புதியவை என்றும் நம் வாழ்வுக்கு தொடர்பில்லாதவற்றை

எழுதவும் பேசவும் திட்ட மிடுகின்றோம். . இருபக்க அதீதங்களூக்குள்ளேயே பயணிக்கிறோம்.

கவிதை தொகுப்புகளை விமரிசனத்திற்குள்ளாக்கும் போது பொதுவாக ஒரு கருத்துண்டு ஒரே ஒரு கவிதையாவது அந்த தொகுப்பில் இருந்தால் போதுமானதென்று. ஆனால் இன்று பல தொகுப்புகளில். மொத்தக்கவிதைகளையும் செம்பு பாலில் துளி விசமாய் கலந்து விட்ட ஒரே ஒரு கவிதையாலேயே ஒட்டு மொத்த கவிதை போக்கும் திசை திரும்புவதும் நிகழவே செய்கின்றது. கலாப் பிரியா கவிதைகள் பெரும் பாலும் இந்த தடம் புரளூதலுக்கு மிக முக்கிய காரணமாய் இருந்திருக்கின்றன.

புனிதங்களை கட்டுடைப்பதை வெற்றுக் கோசமாக கையிலெடுத்தது தான் கலாப் பிரியாவின் ஒட்டு மொத்த தோல்விக்கு காரணம். .புனிதங்களை கட்டுடைப்பதை புரட்சி என்று நினைப்பவர்களுக்கு.

புனிதம் எனும் பெயரில் எங்கு அடக்கு முறை நிகழ்த்தப் படுகிறதோ, ஆதிக்கம் தலை தூக்குகின்றதோ அங்கு மட்டுமே அதற்கு காரணமாய் இருந்த புனிதங்களாய் நிறுவப் பட்ட விசயங்களே உடைபட வேண்டும்.

‘இது என் அசிங்கங்களுக்கான அழகான கவிதை ‘ என்று தலைப்பிடும் கலாப்பிரியா, அசிங்கங்களை எழுதுகின்ற அழகான கவிதை என்று ஏன் போட வேண்டும்.

இன்று நவீனம் எனும் பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அபத்தங்களுக்கெல்லாம், யவனிகா, அன்பாதவன், பிரான்சி ?கிருபா, சுகிர்தராணி, சல்மா, மாலதி மைத்ரி . குட்டி ரேவதி லக்ஷ்மி மணிவண்ணன் மகுடேச்வரன் என்று உடல் மொழி பேசவென்று எழுதப் பட்ட கவிதைகளுக்கு புனிதங்களை உடைப்பது மட்டுமே நவீனம் என்றும் நினைக்க வைத்த கலாப் பிரியாவின் கவிதைளும் அதுவே நவீனம் என்று முன்னிறுத்தியவர்களும் தான் அஸ்திவாரமாய் இருந்திருக்கின்றார்கள்

என் மனைவி

எனை மட்டுமே விரும்புகின்றாள்

அவளின் ஆடுதன்

செட்டுக்கு

ஜோக்கர் கிடைக்காதவரை

அவள் பத்தினியாயிருப்பாள்

மிகச் சாதாரண கிராமத்து ஆணாதிக்கவாதி அவரது இக்கவிதைகளில் வெளிப்படுகிறார். யதார்த்தம் அதுவாகவே இருந்த போதினும் அதை அப்படியே தருவதல்ல கவிதை. அதை மீறி தானும் சிந்தித்து வாசகனையும் சிந்திக்க வைப்பதுவே நல்லதொரு கலையாக இருக்க முடியும், இலங்கையில் பேசுகையில் அடிக்கடி எழுப்பப் பட்ட கேள்வி ஒன்று. தேசியப் போராட்டம் ஏன் பெண்ணுக்கான விடுதலையை பெற்றுத் தரவில்லை. ? என்பது. ஒரு சமயமோ மதமோ. இயக்கமோ அரசியலோ பெண்ணையும் மக்களையும் நிராகரித்து அல்லது உண்டு செயல் படத் தொடங்குமானால், அது வெற்றியடையப் போவதில்லை என்பதற்கு நம்மிடையே பல சான்றுகள் இருக்க , முன்னோக்கி சிந்திக்க வேண்டிய படைப்பாளி ஏன் பெண்ணை மறந்து போகிறான். ஏற்கனவே இந்த சமூகம் திணித்திருக்கும் ஆணாதிக்க கூறுகளை நாமே அறியாது நம்முள்ளே கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க மறப்பது முழுமையான படைப்பு நிலைக்கு இடமளிக்காது இது ஆணூக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்

அடக்குமுறைக்குள்ளாகும் எல்லா இன மக்களிடமும் உயர்வான வாழ்வொன்றும் உயர்வான மொழியும் இருக்கவே செய்கின்றது. மொழி அர்த்தப் படுத்தப் படுகின்ற முறைமையாலேயே கொச்சையாக மாறுகின்றது. அப்படி பார்க்கையில் கலாப் பிரியா எழுதியிருப்பது அனைத்தும் கவிதைகளல்ல கொச்சைகளே..

இன்றைய போக்கு எனும் பெயரில் இயல்பாக இல்லாது மேற்கத்திய இலக்கிய வடிவங்களில் வென்று விட்ட வடிவமிது உத்தி இது என்று எண்ணிக் கொண்டு நமது மண் சார்ந்த வாழ்வியல் சூழலை மறந்து கவிதை சில நேரங்களில் செய்யப்பட்ட பொருளாக மாறிவிடுகின்றது. வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் தமது பத்திரிக்கைகளுக்கு அப்படியாக செய்யப் படு பொருள் தேவை என ஒரு போலித் தேவையை காலச் சுவடு உருவாக்கி வருகின்றது. காலச் சுவடின் தடத்தில் அதற்கு போட்டியாக நடத்தப் படும் பத்திரிக்கைகளும் அதையே செய்து வருகின்றன அதில் நடக்கும் விளம்பர உத்திகளில் முதல் பலி இளைஞர்கள் தான். கவிதை செய்யப் படு பொருளாக ஒரு நாளும் மாற முடியாது சங்க இலக்கியங்களில் வேத்தியலாக பாடல்கள் அமைந்த போதும் கூட உணர்வு முந்தித் தள்ள, திட்ட மிடுதல் இல்லாமலேயே கவிதைகள் நிகழ்ந்திருக்கின்றன.

ஒரு கவிஞன் தனக்குள்ளும் இல்லை , அவனுக்கு வெளியிலும் இல்லை , அவனிலிருந்து அவனைக் கடந்தவனாக இருக்க வேண்டும். எழுதுவதற்கு எல்லா உரிமைகளும் இருப்பது போலவே கடமைகளும் இருக்கின்றன. இறந்த காலத்தில் கற்று நிகழில் பரிசோதனை செய்து எதிர் காலத்திற்கு சாட்சியாய் இருக்கக் கூடிய முன்னோக்கிய பார்வையே கவிஞனின் இலட்சியம் . தினம் தோறும் விடிகிற விடியலின் காலடித் தடங்களாய் கவிதை பாதம் பதித்து வாழ்வில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது

mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா

திலகபாமா