ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

மோனிகா


ஜார்ஜ் கிராஸ்சை புரிந்துகொள்ள அவரது ஆளுமையை கட்டமைத்த வரலாற்றுச்சூழலை புரிந்து கொள்வது இன்றியமையாதது.

1919 லிருந்து 1933 வரையிலான ஜெர்மன் வரலாற்றினை வெய்மர் குடியரசு என்று கூறலாம். வெய்மர் என்னும் ஜெர்மானிய நகரமே அப்பெயருக்கு காரணமாகும். முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கு பிறகு அதன் அரசியல் நிர்ணயச்சட்டம் (constitution) இந்நகரத்தில்தான் முதல் முதலில் இயற்றப்பட்டது. 1916க்குப் பிறகு ஜெர்மானியப் பேரரசு பால் வான் ஹிந்தர்பர்க் என்பவரின் கீழ் இருந்த இராணுவத்தால் ளப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போரில் பட்ட அடி ஜெர்மனியின் வலிமையின்மையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இன்னும் போருக்குள் ஒரு அடி எடுத்து வைத்தாலும்கூட பல்கேரியாவால் ஜெர்மனி ஆக்கிரமிக்கப்பட்டுவிடும் அபாயம் நிகழ்ந்தது. 1918ல் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு விலக மறுத்த “1871ன் ஜெர்மானிய அரசியல் சட்டம்” அகற்றப்பட்டு பார்லிமெண்டு மக்களாட்சி அமல்படுத்தப்பட்டது. பேரரசரும் ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டார். புதிய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட ஜெர்மனி பெரிய அவஸ்தைக்குள்ளாயிற்று. ஒரு புறம் போரிலிருந்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடிபட்ட போர்வீரர்கள் வந்து கொண்டிருக்க இன்னொருபுறம் இறந்து போன வலது சாரி தலைவர்களின் இறுதிச் சடங்கின் போது இடது சாரியினரின் ஆர்ப்பாட்டத்தினால் குழப்பம் விளைந்து கொண்டிருந்தது.

1923ம் ஆண்டு வெர்ஸயில்ஸ் உடன்படிக்கையின்படி போரின் நஷ்ட ஈட்டுத்தொகையை கூட கட்ட முடியாத நிலையில் புதிய அரசாங்கம் இருந்தது. அதற்கு பதிலாக பிரான்ஸும் பெல்ஜியமும் ஜெர்மனியின் முக்கியமான தொழில் பகுதியான ரூர் பிரதேசத்தை பிடித்துக் கொண்டன. அதே ஆண்டு கடைசியில் தொழிலாளர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. எட்டு மாதங்கள் நீடித்த இப்போராட்டத்தினால் இறக்குமதியும் மிகவும் பாதிக்கப்பட்டது. ஜெர்மானிய மார்க்கின் (பணத்தின்) மதிப்பு அதிரடி குறைப்புக்குள்ளாகி அதனால் விலையேற்றமும், பஞ்சமும் தலைவிரித்தாடின. அதே நேரம் பூர்ஷ்வாக்களும் அரசியல்வாதிகளும் நல்ல நிலைமையில் இருந்து வந்தனர். அதைத் தொடந்து பியர் ஹால் என்னும் பணக்காரர்கள் குடிக்கும் காலணிகளில் தொழிலாளர்கள் புகுந்து கலகம் செய்தனர்.

Inflation 23-24

மேற்கண்ட படத்தில் ஒரு பெண்மணி பணத்தை வீட்டின் விறகு எரிக்கும் பகுதியில் பதுக்கி வைப்பதைக் காணலாம். (இது ஜார்ஜின் படைப்பல்ல – அக்காலத்தின் அவல உருவகம்)

இந்நிலையில் 1920ம் ஆண்டு “ஜெர்மானிய உழைப்பாளர்கட்சி” அடால்ஃப் ஹிட்லரின் தலைமையில் தனது பெயரை “நாசிக்கட்சி” என்று மாற்றிக் கொண்டு வெய்மர் குடியரசுக்கெதிராக போராடியது. 1923 நவம்பர் எட்டாம் தேதி ஹிட்லர் மூனிக்கிலுள்ள பியர்ஹாலில் நடந்த பிரதமரின் கூட்டத்தை கலைத்துப் போராடவே ஒரு வருடம் சிறையிலடக்கப்பட்டார். அதன் பிறகு சட்ட ரீதியாக ஆட்சியைப் பிடிப்பதற்காக தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டார் ஹிட்லர்.

Cain or Hitler in Hell

1916ம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி காபெரெட் வோல்டேர் என்பவரால் சூரிக்கில் “தாதாயிஸம்” என்னும் போருக்கு எதிரான கலைவடிவம் தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் உலகப் போரின்போது ஏகப்பட்ட தாதாயிசக்கலைஞர்கள் தாங்களாகவும், அரசாங்கத்தாலும் அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். மார்ஷல் டுசாம்ப், பீட்ரைஸ் உட் போன்றவர்கள் பிரான்ஸிலிருந்து வெளியேறியதன் பின் ஹானோவர், கலோன் என்ற தாதயிசச் சமூகங்கள் அங்கு ஏற்பட்டன. 1920ம் ஆண்டு மாக்ஸ் எயின்ஸ்ட், ஹான்ஸ் ஆர்ப் மற்றும் சமூகத்தொண்டாற்றி வந்த ஆல்ப்ரட் கிருன்வால்ட் போன்றோர் “கலோன் தாதா” (Cologne Dada ) குழுமத்தை அமைத்தனர்.

1893ம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் கிராஸ்ச்(George Grosz) ஜெர்மானிய தாதாயிஸத்தின் ஒரு முக்கிய கலைஞர் ஆவார். 1914ம் ஆண்டு ஜார்ஜ் ஜெர்மானிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுமாறு வற்புறுத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார். 1914ல் போரிட்ட ஐரோப்பிய வீரர்களுக்கு “ஷெல் ஷாக்(Shell shock)” எனப்படும் ஒருவகை தலைவலி வருவதுண்டு. அதீத சத்தத்துடன் வெடிக்கின்ற ஷெல்களின் ஒலி மூளைக்குள் சென்று ஒரு வெற்றிடத்தை உண்டு பண்ணுவதாகவும் அதனால் மூளைக்கு ஒருவகை பாதிப்பு ஏற்படுவாதாகவும் மருத்துவர்கள் அதனை விளக்கினர். அதனால் அப்பாதிப்புக்குட்பட்டவர்களை ராணுவம் வீட்டிற்கு திருப்பியனுப்பியது.

1919ம் ஆண்டு “ஸ்பார்ட்டகஸ் எழுச்சிக் குழு”வினரை கைது செய்தபோது சிறை சென்ற ஜார்ஜ் போலி அடையாள அட்டைகளைக் காட்டி சிறையிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு அதே வருடம் ஜெர்மானிய கம்யூனிஸ்டு கழகத்தில் சேர்ந்த அவர் 1921ம் ஆண்டு ராணுவத்தை கிண்டல் செய்ததற்காக 300 ஜெர்மன் மார்க்குகள் அபராதம் விதிக்கப்பட்டதோடு அவருடைய வரிசை ஓவியங்களான “நம்மோடு கடவுள்(God with us)” என்பதையும் அழிக்குமாறு கட்டளையிடப்பட்டார். 1922ம் ஆண்டு லெனின் மற்றும் ட்ராட்ஸ்கியுடன் ஐந்து மாதங்களை செலவிட்ட ஜார்ஜ், “அதிகாரம் எந்த உருவத்தில் வந்தாலும் அதற்கு நான் எதிரி” என்று கூறிக்கொண்டு கம்யூனிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினார்.

Pillars of the society

பெரும்பாலும் மையினாலும், நீர்வர்ணத்தாலும் தீட்டப்பட்ட ஜார்ஜின் ஓவியங்கள் பெர்லினைப் பற்றியதும் வெய்மர் குடியரசைப்பற்றியதுமாகும். அக்குடியரசின் அங்கமான பணக்கார வியாபாரிகள், காயமடைந்த போர்வீரர்கள், விலைமாதர்கள் மற்றும் கேளிக்கைகளையே இவர் படமாக வரைந்தார். அவருடைய கோட்டோவியங்களும், கேலிச் சித்திரங்களும் மிகவும் பிரசித்தி பெற்றன. ஜார்ஜ் வெகுஜன ஒவியங்களின் எளிமையான உருவாக்கத்தை வெளிப்பாட்டியற் சிதைப்பு(expressionist distortion), துல்லியமான யதார்த்தங்கள் முதலியவற்றுடன் இணைத்து வரையலானார்.

Germany a Winters tale

அவரது நவீன நகரம் நரகத்துக்கு நிகராக, முதலாளிமார்கள், வன்மத்துடன் அலைந்து கொண்டிருக்கும் போர்வீரர்கள் மற்றும் அடக்கியாளப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினையே வர்ணித்து வந்தது.

Life of a Socialist

இவ்வாறு கம்யூனிசத்திலும் சோசியலிசத்திலும் முதலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஜார்ஜ் பிறகு ஜெர்மானிய சோசியலிஸம் மற்றும் நாசிக்கட்சியை இனத் தீவிரவாதத்தை நோக்கி தள்ளிய அதி தீவிர தேசப்பற்று ஆகியவற்றைக் கண்டு தேசியம், தேசப்பற்று என்ற கருத்தாக்கங்களை கேள்விக்குள்ளாக்கினார். தனது பெயருடன் “E” சேர்த்துக் கொண்டு ஜெர்மானிய Georg ஐ George ஆக்கிக் கொண்டார். நாசிக்கட்சிக்கு எதிராளியான அவர் யூதர் என்று சந்தேகிக்கப்பட்டு பெரும் சித்திரவதைக்கு உள்ளானார். மனம் வெறுத்த நிலையில் 1933 ம் ஆண்டு அமெரிக்காவை நோக்கி பயணப்பட்ட ஜார்ஜுக்கு அமெரிக்கா ஒன்றும் அவர் எதிர்பார்த்தாற்போல் ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவின் அராஜகம் அவரை மீண்டும் ஒரு அதிருப்தியை நோக்கி நகர்த்தவே 1959ம் ஆண்டு ஜுலை ஆறாம் நாள் அவர் ஜெர்மனிக்குச் சென்று மிகவும் குடித்த நிலையில் மரணமடைந்தார்.

அவரது கலை வெளிப்பாட்டின் பிற சர்சைக்குள்ளான பகுதிகளை அடுத்த வாரம் காணலாம்.

—-

monikhaa@yahoo.com

Series Navigation

மோனிகா

மோனிகா