பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


1948ல் பிறந்து இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தந்திருக்கும் பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard), பிரெஞ்சு இலக்கிய உலகில் அதிகமாகப் சீராட்டப்படும், இன்றைய எழுத்தாளர். சிக்கலையும் அதனை அவிழ்க்கும் உபாயத்தையும் ஒரு சேர வாசகனுக்கு அளிக்கும் உத்தி அறிந்தவர். அவரது எழுத்துக்களில் வுர்தாம்பெர் கூடம் ( Le salon du Wurtemberg), பாலுணர்வும் அச்சமும் ( Le sexe et l ‘effroy), கபட வாழ்க்கை ( Vie Secrete), உரோமாபுரி உப்பரிகை (Teraace தூ Rome). எல்லாம் ஓஹோரகமென்பது பண்டித சிரோன்மணிகளின் அபிராயம். அடியேனுக்கு அவற்றினுடைய அட்டைப்படம்கூட தெரியாது

ஆனால் 2002ல அவரது இறுதி இராச்சிய (Dernier Royaume) வரிசையில் முதலாவதாக வந்த ‘அலையும் நிழல்களுக்கு ‘ (Les Ombres Errantes) பிரான்சுநாட்டின் பேரிலக்கியத்திற்கான ‘கொன்கூர் பரிசை (Academie Goncourt) தட்டிப் போக, அதனை வாங்கிவந்து எதுவோ முழுத்தேங்காயை உருட்டியதுபோன்று ஆறுமாதம் முயற்சி செய்து, ஒருவாறு உடைத்து தாகத்தையும், கீறல் பத்தைகளைக் கொண்டுப் பிரகாரப் பசியைத் தணித்துக்கொண்டதும் தனிக் கதை.

நிழல்கள் எங்கே ? என இறக்கும் தருவாயில் கேள்வியெழுப்பிய ரோமாபுரி மன்னனை ஞாபகப்படுத்திவிட்டு, எலெக்ற்றானிக் பொருள்களாலான நமது சந்தை உலகில் அப்படிப் பட்டக் கேள்வி எழுப்பபடுவதில்லையே என நிஜமாகவே முனகுகிறார். நாவலா சொல்ல முடியாது. வேதாந்தச் சுருக்கமா இருக்கலாம். எல்லாம் பேசுகிறது. பேசுகிறார். நாமறியா பொருள்கள் பற்றி நமக்கெட்டா பொருள்கள்பற்றி நமது அல்லது அவரது அந்தராத்மாவோடு அன்யோய்மாக நம் முகத்தை உராய்ந்துகொண்டு பேசுகிறார். எட்டி நில்லய்யா என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். மிகவும் பிடிவாதகுணம். இனம் தெரியாத உலகிற்கு இட்டுச் செல்லும் மந்திர வார்த்தைகள். இறப்பைப்பற்றிய கேள்விகள் எழுப்பும் இலக்கியம்.. இன்றைய உலகத்தினின்றும், உறவினின்றும் மனதை ஒளிக்கும் முயற்சி. இறந்த காலத்தை அசைபோடுபவர் என்றாலும் ‘கிஞ்ஞார் ‘ நிகழ்காலத்தின் மீது குற்றம் சுமத்தவில்லை. தன் சுயத்தின் மீதே இரக்கமற்றொதொரு அக்கினிப் பார்வை. மனிதமும், சமூகமும் வெவ்வேறாவானவை அல்ல என்பதாகச் சொல்லிப் போகிறார். நமது அக்கறைகளனைத்தும் அரூபத்தின்மீதே ( Le Regard de tous sur le Reflet de Personne) அதாவது நமது அக்கறைகள் அனைத்தும் பொய்யின் மீது. எல்லாம் மாயை என்கின்ற நமது தாத்தாக்கள் விசாரமெனினும் நம்மை ஆர்வபடுத்துகின்றது. அவரது எழுத்துக்கள் இலத்தீன் இலக்கியங்கள், குழந்தத்தனமில்லா குழந்தைகள் உலகு, போர் அவலங்கள் என ஊர்வலம் வருகின்றன. வரலாற்றின் அநீதிகளும் அழுகைகளும் எழுத்துக்களாக அவதாரமெடுத்துள்ளன.

காலத்தோடுள்ள உறவைத் துண்டித்துகொண்டு எழுதுவதென்பது எத்தனை பேருக்கு சாத்தியம் ? இந்த மனிதர் ஜெயித்திருக்கிறார். அவரது மனிதர்கள் மார்க்கண்டேயர்கள். காலத்திற்குக் கட்டுப்படாத சுதந்திரத்துடன் நம்மனதில் நமைச்சலூட்டுவதெற்கெனவே வருகின்றார்கள். ‘வாசிப்பது என்பதே அலைவதுதான் ‘ (Lire c ‘est errer) பஸ்கால் கிஞ்ஞார் வாசகமிது. முடிந்தால் நீங்களும் அலைந்து பாருங்களேன். இறுதி இராச்சியத்தின் இரண்டாவது நூலாக Sur le Jadis ( இறந்த காலம்) மூன்றாவது நூலாக Abimes (சிதைவு) வந்திருக்கின்றன.

நாகி

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா