21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


இன்னல்வந் துற்றிடும் போதற்கு அஞ்சோம்!

ஏழையராகி இனி மண்ணிற் துஞ்சோம்!

தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்!

தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்! … (எங்கள் நாடு)

மகாகவி பாரதியார்

‘அணைகள் நவீன இந்தியாவின் கோயில்கள் ‘.

பண்டிட் ஜவஹர்லால் நேரு. (ஹிராகுட் அணை, ஒரிஸா 1948)

‘மாநிலங்களின் உறவுகளில் ஏற்றம், இறக்கம் உண்டாக்கும் நெருக்கடிகளை எளிதாக்கும் கருவியாக,

நீர்வள நதி இணைப்புகள் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, பகைமைக் கனலை ஊதிப் பன்மடங்கு பெருக வைப்பதற்கு அல்ல! ‘

டாக்டர் சுதீரெந்தர் சர்மா

‘புவியீர்ப்பு ஆற்றலில் ஓடும் நதியிணைப்புக் கால்வாய் அமைப்புகளைத் தவிர, மற்ற நதிப்படுகைகளில் திருப்பமாகும் கால்வாய்களின் மூலம் நீரனுப்புவதில் குறுக்கீடும் இயற்கைத் தடைகளை கடக்க, குகைகளோ, நீரழுத்த உயர்த்திகளோ [Hydraulic Lifts] அல்லது மலையைச் சுற்றிச் செல்லும் நீளமான ஒரு கால்வாயோ தேவைப்படலாம். அவ்வித நிர்ப்பந்தம் ஏற்பட்டால் குறிப்பாக பெருமுதலீடுகள் விதைப்பையும் [High Capital Investments], நீரமுக்க ஏற்பாடுகளை இயக்குவதற்கு ஆகும் மின்சார ஆற்றல் செலவையும் அரசாங்க நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டிய திருக்கும். அத்துடன் பேரணைகள், பெரும் நீர்த்தேக்கங்கள் அணுகப் பயணப்போக்குச் சாதனங்கள் [Conveyance Systems] செலவு செய்து கட்டப்பட வேண்டும். அவ்விதம் செய்தால் பூதளத்தின் சூழ்மண்டலப் பொலிவுகள் சிதைவாகி, பேரளவு மக்கள் இடப்பெயர்ச்சியால் பாதிப்பாகி வெளியே தள்ளப்பட்டுப் புதிய குடியேற்றத்தில் நுழைய வேண்டிய திருக்கும்!

பிரம்மாண்டமான திட்டங்கள் எப்போதுமே அதிகார வர்க்க நிர்வாகிகளுக்கும், தொழிற்துறை வல்லுநர்களுக்கும் தவிர்க்க முடியாத ஓர் கவர்ச்சி சக்தியைச் சீதனமாய்த் தாரை வார்க்கின்றன! தனிப்பட்ட சிலதுறை அரசியல் வகுப்பினருக்கும், தொழில் நிபுணர்களுக்கும் குடிமக்களின் நிதிவெள்ளம் தரும் பெரும் சுரண்டல் வாய்ப்புகளைக் கண்டு ஒருவர் திடுக்கிடாமல் இருக்க முடியாது! ‘

ஆர். இராமசுவாமி ஐயர், முன்னாள் செயலாளர் மத்திய அரசாங்க நீர்வளத்துறை அமைச்சு, 2020 நீர்வளத் திட்டக் குழு உறுப்பினர் (டிசம்பர் 2002).

‘நதியிணைப்புத் திட்டங்கள் மக்களுக்குத் தேவையானவை! அவை ஒவ்வொன்றும் கற்பனையோ அல்லது கனவோ அல்ல ‘

ஸனியமு போஸ்

கி.பி. 2050 ஆண்டில் இருநூறு கோடி இந்தியரின் வாய்களுக்குத் தாகம் தீர்க்க சுத்தமான குடிநீர் வேண்டும்! உடம்புகளைச் சுகாதாரமாய் வைத்திருக்கக் குளிப்பு நீர் வேண்டும்! ஆடைகளைத் துவைக்க வெளுப்பு நீர் வேண்டும்! பயிரினம் விளைய கோடான கோடி ஏக்கர் வயல்களுக்கு நீர்ப்பாசானம் வேண்டும்! பணிதரும் தொழில் யந்திரங்களை ஓட்ட வடிகட்டிய நீர் வசதி வேண்டும்! முன்னேறும் பாரதத்தில் நீர்வளத் தேவைகளின் நெருக்கடி ஒருபோதும் குறையப் போவதில்லை. நீர்ச் சண்டைகளைக் கைவிட்டு, நதி இணைப்புத் திட்டங்களில் இந்திய மக்கள் மூழ்கி, முழு மனதாய் முற்பட வேண்டும். முதல் நூறு கோடி மக்கள் நீதி நெறிக்கு உடன்பாடு இல்லாமல், ஒருமைப்பாடு கொள்ளாமல் நதி யிணைப்புகளுக்கு இடையூறு செய்து, இப்போது போரிடும் போது, 2050 இல் இருநூறு கோடி இந்திய மாந்தர் நீர்ப்பங்கீட்டை எதிர்த்துப் போரிடும் எதிர்காலக் கோரச் சண்டைகள் உள்நாட்டு யுத்தமாய், உலக வரலாற்றில் இடம்பெறும்! 21 ஆம் நூற்றாண்டில் எழுந்த உன்னத நீர்வளப் புரட்சி வெற்றி பெற, இந்திய மக்கள் உடன்பாடும், ஒருமைப்பாடும், ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.

கட்டுரை ஆசிரியர்

2050 ஆண்டை நோக்கிச் செல்லும் இந்தியாவின் நீர்வளம்

நூறு கோடி ஜனத்தொகை இன்னும் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளில் இருநூறு கோடியாகப் பெருகப் போவதை ஓரளவு கட்டுப்படுத்தலாமே தவிர, யாராலும் அதைக் கடிவாள மிட்டு நிறுத்த முடியாது! இன்று முதல் நூறு கோடி மக்களில் பலர் குடிநீரும், கழுவு நீரும், குளிப்பு நீரும், வெளுப்பு நீரும் இல்லாமல் அனுதினமும் இடர்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நகரங்களின் வளர்ச்சியாலும், பலருக்குப் பணிதரும் தொழில்வளங்களின் விருத்தியாலும் துர்மாசுக்கள் நிரம்பி இந்திய நதிகளிலும், கால்வாய்களிலும் ஓடும் 75% நீர்வெள்ளம் குடிநீர்த் தகுதி பெறாது, நீர்ச் சுத்தீகரிப்புச் சாதனங்களில் முதலாகப் பக்குவப் படுத்தப்பட வேண்டி யிருக்கிறது! ஆயிரக் கணக்கான ஊர்களில், கிராமங்களில், நகரங்களில் போதிய நீரனுப்பு வசதிகள், சுகாதாரக் கழிப்பறைகள் இல்லாமலே, விடுதலை இந்தியா 50 ஆண்டுகளைக் கடந்து விட்டது! அடுத்து பிறந்து வளர்ந்து 2050 இல் இன்னும் பெருகப் போகும் நூறு கோடிச் சந்ததிகளுக்கு எப்படிக் குடிநீரும், குளிப்பு நீரும், வெளுப்பு நீரும், கழுவு நீரும் பாரத நாடு அளிக்கப் போகிறது ? இந்தியா விடுதலை அடைந்து 1950 ஆம் ஆண்டில் உணவு தானியத் தேவை 50 மில்லியன் டன்னாக இருந்தது! ஆனால் இன்று (2004) தானியப் பெருக்கம் நான்கு மடங்கு பெருகி 200 மில்லியன் டன்னாகி ஒரு பில்லியன் மக்களின் வயிறுகளை நிரப்பி வருகிறது! கோடான கோடி டன் தானியங்கள் விளைவிக்க 160 மில்லியன் ஹெக்டா ஏக்கர் வயல்களுக்கு வேண்டிய நீர்வளம், நீர்ப்பாசான வசதிகள் இருக்குமா ?

21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி

முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பயி 2002 ஆம் ஆண்டில் பாரத மக்களின் நலனைக் கருதிப் புது யுகத்தின் நீர்வளப் புரட்சியைப் பறைசாற்றினார். 560,000 கோடி ரூபாய் (112 பில்லியன் டாலர்) நிதிச் செலவில் இந்தியாவின் 37 இமாலயத் தொடர் பெருநதிகளும், தென்னகத்தின் சிறு நதிகளும் கால்வாய்கள் மூலமாக இணைக்கப்படும். இவ்விதம் சேர்க்கப்படும் 7500 மைல் நீளமான தென்னாசிய நீர்வளக் கால்வாய்த் தொடர்பு உலகிலே மிகப் பெரிய ஓர் இணைப்பாய் கருதப்படும். அதன் நீர்க்கோப்பு அணைகள் 35,000 மெகாவாட் மின்சாரம் பரிமாறும் தகுதி உடையவை. அந்தக் கால்வாய்கள் ஆண்டு தோறும் 178 கியூபிக் கி.மீ. நீர்வெள்ளத்தை நதிப் படுகைகளிலிருந்து எடுத்து மற்ற மாநிலங்களுக்குப் பரிமாறும். அத்துடன் 35 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசானம் அளித்து உணவு தானியங்களை விளைவிக்கும். 2016 ஆண்டுக்குள் 42 நதி யிணைப்புத் திட்டங்கள் முடிவு பெற கால வரையறை குறிக்கப்பட்டு, ‘பணி ஆட்சிக்குழு ‘ [Task Force] ஒன்றையும் பிரதமர் நியமித்தார். சுரேஷ் பிரபு பணியாட்சிக் குழுவின் அதிபதியாக நியமிக்கப் பட்டார். இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் தூண்டுதலால், அதே ஆண்டில் பாரத உச்சநீதி மன்றத்தின் ஆதரவும், அனுமதியும், திட்டங்களை முடிக்க ஆணையும் கிடைத்தன. கேரளாவைத் தவிர அனைத்து மாநிலங்களும் உடன்பாடைத் தெரிவித்தன. எதிர்க் கட்சிகள் பிரதமரின் உறுதியான நீர்வளத் திட்டங்களை வரவேற்றன. பிஜேபி கட்சியின் நதியிணைப்புத் திட்டங்கள் முடிவில், தேசீய நலத் திட்டங்களாக வடிவம் மாறின!

இமாலயத்தின் பூத நதிகளான கங்கா, பிரமபுத்திரா ஆகிய இரண்டின் நீர்வெள்ளம் கட்டுப்படுத்தப் படுவதால், அவற்றின் கிளை ஆறுகள் ஓடும் நேபாளம், பூதான், பங்களா தேசம் ஆகிய நாடுகளின் கருத்துப் பரிமாற்றங்கள் அறியப்பட்டு, உடன்பாடுகள் பெற்று ஒப்பந்தங்கள் எழுதப்பட வேண்டும். பங்களா தேசத்தில் ஓடும் 57 நதிகளில், 54 நதிகள் இந்தியாவிலிருந்து நுழைகின்றன. ஆகவே நதி யிணைப்பு முற்பாடுகளில் பாரத-பங்களா கூட்டு ஒப்பந்தம் வெற்றியானால், அது ஓர் முக்கிய சம்பவமாகக் கருதப்படும்! தேசீய நதியிணைப்புகள் இமாலய நதிப்பகுதிகள், தென்னக நதிப்பகுதிகள் என்று இருபெரும் வகுப்புகளில் பிரிவு படுகின்றன. கங்கா பிரமபுத்திரா பூத நதிகளின் பிணைப்புகள் வட இந்தியாவில் அமைவதால், அவை பாதிக்கும் நேபாளம், பூதான், பங்களா தேசம் ஆகிய நாடுகளின் உடன்பாடும், ஒப்பந்தமும் மிக மிக அவசியம்.

இமயத்தொடர் பூத நதிகளின் இணைப்புகள்

கங்கையில் சேரும் கிளை ஆறுகளிலும், மற்றும் பிரமபுத்திரா கிளை நதிகளிலும் பல நீர்த் தேக்கங்கள் அமைப்பது, இமாலய நதிப்பகுதித் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சம். அத்துடன் கிழக்குத்தள நதிகளில் எஞ்சிய நீர்வெள்ளம், கால்வாய்கள் மூலம் வடதிசை நதிகளில் இணைக்கப் படுவது அடுத்த அம்சம். பிரமபுத்திரா, மற்றும் அதன் கிளை ஆறுகள் கங்கா நதியுடன் சேர்க்கப் படுவது மூன்றாவது அம்சம். பிறகு கங்கா நதி தெற்கே மகாநதியுடன் பிணைக்கப் படுவது நான்காவது அம்சம். மேலும் மேற்கு வங்காளத்தில் தற்போதுள்ள பரக்கா நீர்த்தேக்கத்திற்கு [Farakka Barrage] கூடுமான நீர்வெள்ளம், இணைப்புக் கால்வாய் வழியாக அனுப்பப்படும்.

முதல் தலையாய இமாலப் பூதநதி யிணைப்புகளில், எஞ்சிய நீர்வெள்ளம் 19 திருப்புப் பகுதிகளில் ஆராயப் படுகின்றன. 16 நீர்த்தேக்கங்களின் இட அமைப்புகள், 19 நீர் பரிமாறும் இணைப்புகள் உளவாய்வு செய்யப் படுகின்றன. அத்துடன் புதிதாக 14 நீர் அனுப்பும் நதிப்படுகைகளின் தகுதிகள் ஆராயப்பட்டு கருத்துரை தயாரிக்கப் பட்டுள்ளது. 1999 மார்ச் மாதம் மேற்கூறிய திட்டக் கருத்துரைகள் அனைத்தும் முடிக்கப் பட்டு அரசாங்க நீர்வளத்துறை அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. அடுத்த 7 நதியிணைப்புகளின் [மனாஸ் -சங்கோஷ் -டிஸ்ட் -கங்கா இணைப்பு, சார்தா -யமுனா இணைப்பு, காக்ரா -யமுனா இணைப்பு, கங்கா -தாமோதர் -சுபர்நரேகா இணைப்பு, யமுனா -ராஜஸ்தான் இணைப்பு, சுனார் -சோன் தேக்க இணைப்பு, சோன் அணை -கங்காவின் கிளைநதி இணைப்பு] உளவு அறிக்கைகள் 2000 இல் பூர்த்தியாகி உள்ளன.

தென்னகச் சிறு நதிகளின் இணைப்புகள்

தென்னக நதிப்பகுதி இணைப்புகள் நான்கு முக்கிய பிரிவில் திட்டமிடப் பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. மகாநதி -கோதாவரி -கிருஷ்ணா -பெண்ணாறு -காவிரி ஆகிய நதிகளின் இணைப்பு.

2. மும்பைக்கு வடக்கே மேற்கில் ஓடி அரபிக்கடலில் சங்கமம் ஆகும் நதிகளோடு, தப்தி நதியின் தெற்குப் பகுதியில் இணைப்புகள்.

3. வட மேற்கில் மத்திய பிரதேசத்தின் சாம்பல் நதியுடன் கென் நதி இணைப்பு.

4. கேரளா, கர்நாடகா இரண்டு மாநிலங்களில் அரபிக்கடல் நோக்கி மேற்கில் ஓடும் நதிகளை, கிழக்கே ஓடும் நதிகளுடன் இணைப்பு.

தென்னக நதியிணைப்புப் பணிகளில், 49 தளங்களில் 137 நதிப் படுகைகளின் உளவாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அவற்றில் 56 நீர்த்தேக்கங்கள் அமைப்பாகும். 18 நதியிணைப்புகளின் உளவு அறிக்கைகள் தயாரிக்கப் பட்டுள்ளன. பணி ஆய்வுக்குழுவினர் மேற்கூறிய அனைத்துத் திட்டங்களின் முடிவறிக்கைகள் தயாராகிச் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.

2000 ஆண்டில் அவற்றுடன் 8 இணைப்புத் திட்டங்கள் ஆராயப் பட்டுள்ளன.

1. மகாநதி -கோதாவரி இணைப்பு.

2. கிருஷ்ணா (அல்மட்டி) -பெண்ணாறு இணைப்பு.

3. கிருஷ்ணா (நாகார்ஜுன ஸாகர்) -பெண்ணாறு (சோமசீலா) இணைப்பு.

4. தமன் கங்கா -பிஞ்சால் இணைப்பு.

5. பார்வதி -காளிசிந்து -சாம்பல் நதி இணைப்பு.

6. இச்சம்பள்ளி கீழணை -நாகார்ஜுன ஸாகர் ஏரி இணைப்பு.

7. பெண்ணாறு -காவிரி (பேரணை) இணைப்பு.

8. காவிரி (கட்டளை) -வைகை -குண்டாறு இணைப்பு.

நீர்வளப் பங்கீடும் வெள்ளப் பெருக்குக் கட்டுப்பாடும்

இந்தியாவின் 85% நீர்வளத் தேக்கம் ஆண்டு தோறும் வேனிற் காலத்தில் பொழிந்து தள்ளும் நிச்சயமற்ற மழைகளின் வெள்ளத்தைப் பொறுத்ததே. ஹரியானா, ராஜஸ்தான், குஜரத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பெரும் பகுதிகள் மழை குன்றிய தளங்களாக உள்ளன. வேனிற் காலத்தில் மேற்கண்ட மாநிலங்களில் நீர்த்தேக்கங்கள் சுருங்கி, நதி ஓட்டங்களில் நீர் குன்றி, நிலத்தடி நீர் ஊற்றுகள் வற்றிக் குடிநீர்ப் பற்றாக்குறையில் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இருக்கின்ற மாந்தருக்கும், பெருத்துவரும் எதிர்கால சந்ததிக்கும் குடிநீரைப் போல், வயிற்றுக்கு உணவு அளிக்கப் பயிரின வளர்ச்சிக்கு நீர்ப்பாசானமும் 2025 ஆம் ஆண்டில் பாரத நாடு எப்படி பங்கிட்டுத் தரப் போகிறது ?

ஆண்டு தோறும் அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பெருக்கால் கிராமங்களும், நகரங்களும் மூழ்கி மக்கள் இடர்ப்பட்டு நீந்தி வரும்போது, ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மீண்டும் மீண்டும் நீர்வறட்சி ஏற்படுகிறது. இந்தியாவின் 85% நீர்வறட்சி அந்த மாநிலங்களில்தான் உண்டாகிறது. 1953 இல் வெள்ளப் பாதிப்புச் சேதாரம்: 52 கோடி ரூபாய்! 1998 ஆம் ஆண்டில் வெள்ளச் சேதாரத் தொகை: 5846 கோடி ரூபாய்! அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், பஞ்சாம் போன்ற மாநிலங்களில் வெள்ள அடிப்பால் ஆண்டு சராசரி விரையம் மட்டும் 1343 கோடி ரூபாய் ஆகிறது! அணைகள் அமைத்து, நீரோட்டத்தைத் திருப்பி வேறு திசையில் அனுப்பும், வெள்ளக் கட்டுப்பாடு வழிமுறைகள் வெள்ளப் பெருக்கு மாநிலங்களில் நிறுவகமாக வேண்டும்.

நதிச் சங்கமப் படுகைகளில் நீரெடுப்புக் கால்வாய்த் திட்டங்கள்

ஆண்டு தோறும் கங்கா, பிரமபுத்திரா, நர்மதா நதி, மகாநதி, கோதாவரி போன்ற ஆறுகளின் நீரோட்டத்தில் மிஞ்சிய நீர் வெள்ளம் கடலில் வீணாக ஓடிக் கலக்கிறது. இந்தியாவின் நீர்வளத்துறை அமைச்சரகம் [Ministry of Water Resources] 1980 முதல் பல்லாண்டு காலம் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு, நதிப்படுகைப் பகுதிகளில் நீரெடுக்கும் வழிமுறைகளை உளவு செய்து வந்தது. பொதுவான திட்ட அமைப்பு முறைகள் பின்வருமாறு:

1. தற்போது இயங்கி வரும் நதியிணைப்புக் கால்வாய்கள் மாற்றப்படாமல் பராமரிக்கப்படும்.

2. புதிய நதியிணைப்புத் திட்டங்கள் அரசியல் சட்டங்களுக்கும், நீதி நெறிகளுக்கும் உட்பட்டு 21 ஆம் நூற்றாண்டு காலங்களில் நிறுவகம் செய்யப்படுபவை.

3. மாநிலங்களுக்குள் இயங்கிவரும் உடன்பாடுகள் மதிக்கப்பட்டு, நதிவள அபிவிருத்திகள் யாவும் நிறைவேற்றப்படும்.

4. நதிப்படுகை [River Basin] நீர்ப்பங்கீடுத் திட்டங்கள் அமைக்கப்படும் போது, நதிப்படுகை உள்ள மாநிலத்தின் எதிர்கால நீர்த்தேவைகள் உளவு செய்யப்பட்டு, அவைகள் திட்டங்களில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

5. நீர்மின்சார நிலைய ஆற்றலைப் பெருக்குவதும், தற்போதைய நீர்ப்பாசான வேளாண்மையைச் செழிக்கச் செய்வதும் முதல் குறிப்பணியாகத் தலைமேற் கொண்டு, நிலவளமும், நீர்வளமும் பெருந் திறம்பாடுடன் பயன்பட முற்பட வேண்டும்.

6. அடுத்த முக்கியமான சிறப்பு அம்சம், நதிப்படுகைக் கால்வாய் நீரோட்ட முறைகள், புவியீர்ப்பால் தானாய் இயங்க வேண்டும். நீர்த்தேக்கம், நீரழுத்த உயர்த்திகள் [Hydrulic Lifts] தேவைப்பட்டால், அவை 400 அடி [120 மீடர்] உயரத்தை மிஞ்சக் கூடாது.

7. நதிப்படுகைத் திட்டங்கள் பூதள அமைப்பாடுக்குப் பொருந்தியும், தொழில் நுட்பத்தில் சாதிக்க ஏதுவானதும், நீர்ப்பாசான வசதிகளுக்கு நிதிச் சிக்கன நிறுவக மாகவும் இருக்க வேண்டும்.

8. பெரு நதியிலிருந்து அடுத்த சிறு நதிக்குக் கூடியவரை அணைகள் இல்லாமல் கால்வாய் மூலம் நீரனுப்ப முற்பட வேண்டும்.

9. அணைகள் அல்லது நீர்த்தேக்கங்கள் கட்ட வேண்டிய நிர்பந்தம் நேரிட்டால், பேரளவு நீர்மின்சார ஆற்றல் எடுக்கும் நிலையங்களுடன் நிறுவப்பட வேண்டும்.

10 நதி யிணைப்புக் கால்வாய்கள் அமைக்கும் போது, அவை கடந்து செல்லும் நிலப்பகுதியில் கூடுமான ஏக்கர் நீர்ப்பாசான வயல்களை உருவாக்க வேண்டும்.

11 கால்வாய் நீரோட்டத்தில் பயணப் போக்குவரத்து வசதிகள் [Navigational Facilities] அமையத் திட்டமிடப்பட வேண்டும்.

12 நதி யிணைப்புக் கால்வாய் நீர்வெள்ளம் குடிநீராகப் பயன்பட நீர்ப்பக்குவச் சாதனங்கள் [Water Treatment Plants] ஊர்ப்புறங்களில் நிறுவகமாக வேண்டும். அவ்விதம் அமைத்தால்தான் மக்கள் நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காதவாறு, தடுத்துக் கொள்ள முடியும்.

13 நதி யிணைப்புக் கால்வாயின் நீர்வெள்ளம் அடிக்கடி உளவு செய்யப்பட்டும், கால்வாய் ஓராண்டுக்கு அல்லது ஈராண்டுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டும் மாநில அரசாங்கம் பராமரித்து வரவேண்டும்.

14 கால்வாய் நீர்வெள்ளப் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகளில் பொதுமக்கள் உடன்பாடும், ஒத்துழைப்பும், ஒருமைப்பாடும் உண்டாக அரசாங்கம் ஆக்கவழிகளில் தொடர்பு கொள்ள வேண்டும்.

15 நதி யிணைப்புக் கால்வாய்கள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீர் மின்சார நிலையங்கள் ஆகியவை யாவும் பொதுநபருக்கு ஏராளமான வேலைகளைத் தொடர்ந்து அளித்து ஊதியம் தருபவை. அவை அனைத்தையும் மக்கள் ஆலயங்களாகப் பாதுகாத்து வர வேண்டியது, மிக மிக அவசியம்.

நதியிணைப்புகளுக்கு இந்தியாவின் முந்தைய அனுபவங்கள்

இந்திய அரசாங்கம் பறைசாற்றிய 42 நதியிணைப்புத் திட்டங்களை பெரும்பான்மையான மாநில முதல் அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கோடி நாட்டில் சீர்கேடுகளும், சிதைவுகளும் ஏற்பட்டு மக்கள் இடர்ப்படுவதை நதியிணைப்புகள் மூலம் ஓரளவு தவிர்க்க முடியாலாம் என்று கருதி அவர்கள் உடன்பட்டது போல் தெரிகிறது. மாநிலங்களில் கேரளா மாநிலம் மட்டும், வேறு மாநிலத்துக்கு நீரனுப்புவதை எதிர்த்து, நதியிணைப்பு விதிகளுக்கு உடன்பட வில்லை! நீர்வள அமைச்சகத்தின் துணைச் செயலாளர், ராதா சிங் செய்தித்துறை நிருபர்களுக்கு நதியிணைப்புத் தகவலை அறிவித்தார். ‘அந்த பூத இணைப்புத் திட்டங்கள், சிறிய திட்டங்களையும் கொண்டிருக்கும். முக்கியமான பெரும் திட்டங்கள் இரண்டு இன்னும் இரண்டரை ஆண்டுகளில் தயாராகி விடும். ஒவ்வொரு கால்வாய் இணைப்புக்கும் தனித்தனி அமைப்புரை விளக்கமாகத் தயாரிக்கப்படும். திட்டங்களுக்கு நிதி ஏற்பாடு முயற்சிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன. நிதி திரட்டல் பணியில் எந்த விதப் பிரச்சனைகளும் எழப் போவதில்லை. நதியிணைப்புத் திட்டங்களுக்கு பங்களா தேசம் தனது மறுப்பை அறிவித்தாலும், நதிவளக் கூட்டவையில் [Joint Rivers Commission] சிந்தனா வடிவில் திட்டங்கள் இருக்கும் நிலையில் மறுப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படா. அதுபோல் நேபாளம், பூதான் நாடுகளுடனும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன ‘, என்று ராதா சிங் [அக்டோபர் 15, 2003] நிருபர்களிடம் கூறினார்.

கடந்த பல்லாண்டுகளாக உலகெங்கும் நீர்ப்பற்றாக்குறை, நீர்வறட்சி மிகுந்த பகுதிகளில், மாந்தர் நீர்த் தேவைகளுக்குப் பொதுவாக நதிச்சங்கமப் பிரதேசங்களில்தான் நீரெடுக்கப்பட்டுப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இம்முறை ஒன்றும் புது முயற்சி அன்று. நதி நீர்ப்பெருக்கம் மிகுந்துள்ள பகுதிகள், நீரற்ற பிரதேசங்களுக்குப் பங்கீடு செய்ய முன்வராமல் போவதுதான் முதல் பிரச்சனையாகவும், பின் சிக்கலாகவும் ஏற்பட்டு விடுகிறது. வட இந்தியாவில் ரவி, ஸட்லெஜ், பியாஸ் நதிகளின் கிளையான இந்திரா காந்தி கால்வாய், நர்மதா கால்வாய், தென்னகத்தில் பெரியாறு, பரம்பிக்குளம், அலையாறு, கர்நூல்-கடப்பா கால்வாய், தெலுங்கு-கங்கா சென்னைக் கால்வாய் ஆகிய கால்வாய்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திய வல்லுநர்களால் கட்டப்பட்டுக் குடிநீரும், நீர்ப்பாசானமும் அளித்து வருகின்றன. குறித்த காலத்தை மீறி மெதுவாக ஆமை வேகத்தில் கால்வாய்த் திட்டங்கள் முன்னேறினாலும், கணித்த மதிப்பீட்டு நிதித்தொகையைப் போல் பலமடங்கு தாண்டினாலும், இறுதிப் பலாபலன்கள் இந்திய மக்களுக்குப் பல்லாண்டு காலம் பயனளிக்கப் போவதில் சற்றேனும் ஐயமில்லை.

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission (Dec 2002) [www.flonnet.com/].

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004).

29 Large Dam Construction is a Controversial Issue in India, BBC By: Ram Dutt Tripathi, Lucknow [Dec 8, 2001]

30 The Greater Comman Good -Article on Gujarat ‘s Sardar Sarovar Dam in Narnada River By: Arundhathi Roy [April 1999].

31 Untapped Water Resources in Yamuna River Basin By: R.N. Malik (June 26, 2003) [www.tribuneindia.com/2003/20030626/science.htm]

32 Interlinking of Rivers – Opening the Floodgate of Contradictions By: Sudhirendar Sharma.

33 River-Linking Plan: India to Go Ahead By: Golap Monir (Sep 26, 2004).

34 India ‘s Gigantic River Linking Project: Think about the Oceans too! By: Sudhirender Sharma.

35 River Linking Projects The Need, Earlier Proposals, About the Plan, Financing, Benefits & Implementation.

36 River Linking Scheme, Central Chronicle By: Pradip Saha [www.centralchronicle.com] (Sep 25, 2004).

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [November 4, 2004] (Part VII)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா