This entry is in the series 20100606_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


செதுக்கி முடித்த சிலை
விழியைச் சரிசெய்ய
உளி வைக்கையில்
கழுத்து முறியலாமா?

கறையானாய் ஓடி
கட்டி முடித்த வீடு
பால் பொங்கையில்
தீப்பிடிக்கலாமா?

கடவுளுக்கென்ன
தடுமாற்றமா?
நீரூற்று மிடத்தில்
நெருப்பூற்றலாமா?

ஓடுதளம்
உலைக்களமாகி
ஒரு நூற்றறுபது பேரை
உருக்கி ஊற்றிவிட்டது

இனி . . . இனி . . .
கருப்புப் பெட்டி
காரணம் சொல்லலாம்
இறந்தோர்க்கு
எழுபது லட்சம்
இன்றே கிடைக்கலாம்
கர்ப்பத்திலேயே
கடவுள் தந்த
‘மறதி’
மறக்க உதவலாம்

ஆதலால்
சகிப்போம்
சாம்பலி லிருந்து
உயிர்ப்போம்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation