இடர்மழை

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


 

நமக்கிடையே வான் தெளித்த
அடர்த்தியான மழையைத் தவிர்த்து
வேறெவருமிருக்கவில்லை
தூறல் வலுத்த கணமது
வீதியின் ஒரு புறத்தில் நீ
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய்

காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை

உன்னிடமோ என்னிடமோ
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த
குடைகள் இல்லை
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க
மேனிகளுக்குத் தெரியவுமில்லை

இத்தனைகள் இல்லாதிருந்தும்
ஆண்மையென்ற பலமிருந்து நான்
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்
காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து
பேருந்து நிறுத்தம் நோக்கி
ஓடத்துவங்குகிறாய்

திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை

ஆங்காங்கே ஒழுகிவழியும்
பேரூந்து நிறுத்தத்துக்குள்
நீ முழுவதுமாக நனைந்திருக்க
அடிக்கடி பின்னால் திரும்பி
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்

– எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்