நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இரவின் இருளில் மெய்மறந்து தூங்கவும்
விண்ணிலிருந்து விழுந்து கொண்டிருக்கும்
நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளவும்
நாளெல்லாம் தவமிருந்தேன்
கனவுகலைந்தபோது
எனது இருப்பிடம் தகர்க்கப் பட்டிருந்தது.
விடாது பொழிந்து பார்க்கலாமென
மேகங்களில் வசித்திருந்தேன் மழையைப் போல.
கொண்டைமுறிந்த பனைமரங்களையும்
வருக்கை சக்கைகள் காய்க்கும் பிலாமரங்களையும்
வெட்ட வெட்ட பால்சுரக்கும் ரப்பர்மரங்களின்
உதிர்ந்த இலைகளையும் நனைத்தது தவிர
எந்த இதயங்களிலும் ஈரம் படரவில்லை.
துக்கத்தில் உறைந்திருந்த காலம் உறைய
மூடிய கைகளைத் திறந்து
பட்டாம்பூச்சிகளைப் பறத்திவிடுகிறேன்.
வனமெங்கும் பறந்து திரிந்துவிட்டு
உள்ளங்கைகளில் திரும்பவும்
அது உட்கார்ந்து கொள்கிறது.
எனதுலகம் உருமாறுகிறது
எல்லோரும் பெயர் சொல்லி அழைக்கும் போது
என்ன பெயர் சொல்லி உன்னை அழைக்க
தந்தைதாய் பெயரறியாத
அந்த பட்டாம்பூச்சிக்கு ஒரு பெயர் சூட்டினேன்.
எப்போதும்போல்
அது ஒரு குழந்தையாய் சிரிக்கிறது.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்