புல்லாங்குழல்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி



இலைகள் அசைந்தன
மரங்கள் குலுங்கின

கிளையில்
கட்டாமல் ஊஞ்சல்
ஆடுவது யாரென கேட்டது
வேர்.

பட்டம் பறந்தது
விட்டது யாரென
கேட்டது நூல்

தன்னை
தொட்டுத் தள்ளுவது யாரென
கேட்டது
பாய்மரம்.

தன்னை
ஏற்றியது யாரென
வெளிச்சத்திடம் கேட்டது
சுடர்.

பேசுவது யாரென
வாயிதழ் பார்த்து
வார்த்தைகள் கேட்டன.

உன்
மூச்சு யாரென
முகம் பார்த்துக் கேட்டது
உயிர்.

யார் யாரென கேட்டதையே
ஒன்று
தன்னை
இசையாய் பாடவைப்பது
யாரென கேட்டது..

அது
எரிந்துப் போயிருக்கலாம்

கிளஸ்டர்
குண்டுத்தாக்குதலில்

மூங்கில் காடெரிய வீடெரிய
மூச்சுக் காற்றுத் திணற
எரிந்துப் போயிருக்கலாம்

இந்நேரம்
ஈழத்தில்
ஒரு
புல்லாங்குழல்.


பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்


thamizhmathi@gmail.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி