கதைகதையாய் சொல்லத் தெரிந்தவள்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

ஹெச்.ஜி.ரசூல்


கதைகதையாய் சொல்லத் தெரிந்தவளிடம்
இப்படியானதொரு துயரம் நிகழ்ந்ததில்லை.
அலைகளை ரசித்த குழந்தையின் கண்களில்
ஒளிவற்றிப் போன இருட்டு.
கொண்டுவந்து சேர்த்த குதூகலங்கள்
பொட்டித் தெறித்து விம்முகின்றன.
ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும் கடற்காற்றில்
இதயம் நொறுங்கிச் செத்த
வேதனையின் வேறொரு வாசனை.
இரவுகளில் கைப் பிடித்துச் செல்லும்
கட்டுமரங்களின் சிதிலங்களில்
நேற்றைய கனவுகளின் மிச்சம் தங்கியிருந்தது.
உயிர்களின் வரைபடமொன்று
மரணத்தின் சுவடுகளை அழிக்கமுடியாமல்
தன்னையே மாய்த்துக் கொள்கிறது.
கடற்புறத்தின் கண்ணீர் மெளனங்களை
எழுதும் மொழி தெரியாமல்
நடுங்குகின்றன விரல்களின் நுனி.
மனம் சொல்ல நினைப்பதை
வார்த்தை சொல்ல மறுக்கிறது.
ஆயுதங்களால் அழிக்கப்பட்டவை அநேகம்.
குவிந்து கிடக்கும் சடலங்களை
கொத்தித் தின்னப் பறக்கும் பருந்துகளுடன்
வெற்றிடம் எங்கும் விரிகிறது.
விடிந்தும் பொழுது இருள் சூழ்ந்தே
விடிகிறது இப்போதெல்லாம்.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்