“ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

ருத்ரா



முத்தமழையை
கவிதைகளாக்கி
முழக்கமிட்டிருக்கும்
ஒரு க‌விஞ‌ருக்கும்
விம‌ர்ச‌ன‌ம் என்ற‌ பெய‌ரில்
அதற்குவர்ணக்குடை
பிடித்து
காக்காய்பொன் மினு மினுப்புடன்
வார்த்தைகளில்
சாமரம் வீசியிருக்கும்
ம‌திப்பிற்குரிய‌ இன்னொரு க‌விஞ‌ருக்கும்
என் மனங்கனித்த பாராட்டுகள்.

எச்சில் முத்தம்
இனிக்கின்ற பாற்கடலில்
காதலெனும் தீவு நோக்கி
கப்பல் விடும் மாலுமிகளே
இந்த‌
கப்ஸாக்களை வைத்தா
புதிய யுகம் நோக்கி புறப்பட்டீர்கள்.

உதடுகள் குவித்துக்கொண்டே
இருக்கும்
உங்கள் தேசத்தின்
தேசிய‌கீத‌ம்
வெறும் “இச்சு”க‌ள் தானா?
ப‌னிஉறைந்த‌
இம‌ய‌ ம‌லையில்
கார்கில் போரில்
வீர‌ இளைஞ‌ர்க‌ள்
துப்பாக்கிக‌ளையே
த‌ம் முதுகெலும்பாக்கி
விறைத்து நின்று
தீர‌ம் காட்டுகின்ற‌போது
அந்த‌ யுத்த‌ ச‌த்த‌ங்க‌ளை
முத்த‌ ச‌த்த‌ங்க‌ளாய்
கொச்சை ப‌டுத்துகின்ற‌
“ப‌ச்சை”க்க‌விஞ‌ர்க‌ளே
உங்க‌ள் காகித‌ ப‌க்க‌ங்க‌ள்
கார்கில் முக‌டுக‌ள் அல்ல‌.
அதில் உத‌டுக‌ள் தேடிஅலையும்
உம‌ர்க‌ய்யாம்க‌ளே !
அந்த பாரசீகக்கவிஞன் பாடியதில்
இளமை எனும் நீர்க்குமிழிக்கு
ஒரு தேடலின் நெருப்புக்குமிழி
சுடர்விட்டுக்கொண்டிருந்தது.
வாழ்க்கை த‌த்துவத்தின்
எரிமலையிலேயே குளிர்காய்ந்து..அதை
முத்த‌மாக்கி ம‌துவாக்கி
தீக்குளித்த‌வ‌ன் அவன்.

நீங்களோ
வாழ்க்கையின் குமிழியைக்கூட
உடைத்து நொறுக்கும்
சம்மட்டிகள்.
மோப்பக்கூட குழையும்
அனிச்சப்பூ எனும் காதலை
அருவறுக்கும்
கள்ளிப்பூக்களின் மூடைகளாக்கி
சுமந்து திரிகின்றீர்கள்.

அமுதம் என்கின்ற முத்தத்தைக் கூட‌
அழுத்தம் கொடுத்து அழுத்தம் கொடுத்து
காமம் மட்டுமே சொட்டும்
கள்ளிப்பாலாய் அல்லவா
ஊற்றிக் கொடுக்கிறீர்கள்.
அந்த மெல்லிய உதடுகளை
உங்கள்
உலக்கைப்பேனாக்களால்
கந்தலாக்கியதையெல்லாம்
ஒட்டுப்போட்டு தைத்து
கவிதைத்தொகுதியாக்கினீர்கள்.

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் தேடி
த‌லையை சிலுப்பி சிலுப்பி
பிய்த்துக்கொண்ட‌ உங்க‌ள்
ம‌யிரெழுக்களிலும்
ம‌ற்றும் இந்த‌
காகித‌ க‌ச‌க்க‌ல்க‌ளிலும் கேட்டால்
அவை சொல்லும் க‌தை கதையாய்.
முத்த‌ங்க‌ளின் அந்த‌ கான‌ல்நீரில்
க‌ரைந்துபோன‌
இதோ இந்த‌ சித்திர‌த்தைப்பாருங்க‌ள்:‍‍‍‍‍‍

அந்த காகித கசக்கல்களை பிரித்துப்பருங்கள்.
அவன் அருகே
அது மலைபோல் குவிந்துள்ளது.
அவை எல்லாம்
வெற்றுக்காகிதங்கள்.
இன்னும்
பேனாவின் எச்சில்
ப‌ட‌வே இல்லை.
பேனாவை நாக்கில்
தொட்டுக்கொண்டுஎழுதும்
அவ‌ன் ப‌ழ‌க்க‌த்தில்
அந்த‌ நிப்புமுனைக‌ள்
எச்சில் ஆன‌து தான் மிச்ச‌ம்.
இன்னும் ஒரு க‌விதை கூட‌
உருவாக‌வில்லை.
காத‌லியை நினைத்து
உருகிக்கொண்டு தான்
உருவாக்க‌ நினைத்தான்.
த‌லைப்பை ம‌ட்டும்
ம‌ன‌துள் நினைத்து நினைத்து
ச‌வைத்துக்கொண்டிருக்கிறானே யொழிய‌
எழுத்துக‌ள்
இன்னும் தூர‌ல் போட‌வில்லை.
புதுக்க‌விதை கிறுக்க‌ல்க‌ளை
க‌ல்லூரியில்
அவ‌ன் ப‌க்க‌த்து சீட்டு “ம‌ச்சிக‌ள்”
கஞ்சா பொட்ட‌ல‌த்தை
க‌ச‌க்கி கொடுப்ப‌து போல்
க‌ச‌க்கி கொடுத்திருந்தாலும்
இன்னும் க‌விதை க‌ருத‌ரிக்க‌வில்லை.
காகித‌ க‌ச‌க்க‌ல்க‌ள்
குவிந்து கொண்டேயிருந்தன.
முத்த‌ம் ப‌ற்றி
முத்துமாரி பொழிந்த‌
உங்க‌ள் க‌விதைக‌ளும்
ஒரு வித‌த்தில் வெறும்
காகித‌ க‌ச‌க்க‌ல்க‌ள் தான்
இதோ
கீழே கிட‌க்கும் க‌ச‌ங்க‌ல்க‌ளையும்
உங்க‌ள் க‌விதைத்தொகுதியில்
சொருகிக்கொள்ளுங்க‌ள்.

“அன்பே
வான‌ம் கூட‌ ஆசைப்ப‌ட்டு
“ஜொள்” விட்ட‌து.
அதை ம‌ழை என்றார்க‌ள்.”

“ஒன்று தான் கொடுத்தாய்
ஆயிர‌ம் ஜாங்கிரிகளை
நாக்கில்
ச‌ப்பு கொட்டிக்கொண்டிருக்கிறேன்.”

“க‌ட‌லின்
அலை நாக்குககள்
கரை உதடுகளை
கவ்வி கவ்வி
கவ்விதை எழுதின.
அது நீலவர்ணத்தின்
ஒரு நீளமான
இனிப்பு முத்தம் அல்லவா.”

“ம‌யில் பீலிகள்
எனும் உவமைகளில் கூட
மனம் கசந்து போயிற்று.
உன் முத்தத்தில் நான்
உன்மத்தம் கொண்டதால்.”

“நம் இதய வானின்
காலையும் மாலையும்
ஒரே நேர‌த்ததில்
உத‌டு குவித்த‌ பிறகு
அந்த‌ சூரிய‌ன் கூட‌
பொறாமைகொண்டு
அமாவாசையை த‌ன் மீது
ப‌ர்தா போட்டுக்கொண்ட‌து.”
…………………………….
…………………………….
க‌ற்ப‌னையை
க‌ச‌க்கிய‌ போதும்.
காகித‌ க‌ச‌க்க‌ல்களே
அவ‌னைச்சுற்றி
இரைந்து கிட‌ந்த‌ன‌.
அவ‌னுக்கு பின்னால்
“க்ளுக்கென்று”
ஒரு சிரிப்பை மட்டும்
யாரோ உமிழந்த‌து போல்
இருந்தது.
அதுவும்
ஒரு உருவெளித்தோற்ற‌ம் தான்.

அதை எழுதியே தீர‌ வேண்டும்.
த‌லைப்பு இதோ வ‌ந்து விட்ட‌து.

“முத‌ல் முத்த‌ம்”.

ஆடுவெட்டும் அரிவாளுடன்
“சுடலை மாடன்கள்”போல‌
மீசை முறுக்கிய
முண்டைக்க‌ண் அப்பாக்க‌ளின்
கோப‌ம் கொப்புளிக்கும் பார்வையில்
சிவப்பாய்
ஒரு “லாவா” வை
பாய்ச்சியது போல்
இன்னொரு தோற்ற‌ம்.

அப்பாக்களை
அவன் அப்பால் தள்ளினான்.
இருப்பினும்
ஒரு அச்சம் அவனைச்சுற்றி
வலை பின்னியது.
அப்புற‌ம்
பேனா உமிழ்ந்த‌து
எழுத்துக்க‌ளை அல்ல.
பயம் எனும் மையைத்தான்.
முத்தங்களின்
கலித்தொகை எல்லாம்
இப்போது கிலித்தொகை ஆயிற்று.
பேனாவுக்குள்ளிருந்து கூட
ரத்தம் வருமா?
அவன் மிரண்டுதான் போனான்.

அப்புறம் ஒரு காட்சி
அவனை உறைய வைத்தது.
அதைக்கண்ட திகிலில்
உதடுகள் இப்போதும் நடுங்கின.
முத்தத்துக்காக அல்ல…எல்லாமே ஒரு
முற்றுப்புள்ளியாக‌ போன‌த‌ற்காக‌..
முற்றும் என்று போட்டது
கவிதைதொகுதிக்கு…அவ‌ன்
மூக்கில் இருந்து வ‌ந்த‌ ர‌த்த‌ம்..
இப்போது
ஒரு காகித மடல் அவன் கையில்..
காகித கசக்கல்கள் இடையில்
இது என்ன..
வாசித்தவன்
சிதறிவிழுந்தான்.
யார் எங்கே எப்போது
இந்த “பாம்” வைத்தது..
அந்த மடல் சொன்னது..
அவனை முத்தமழையில்
திணற‌டித்த அந்த காதலிக்கு கல்யாணம்.
மாப்பிள்ளை யு.எஸ்ஸாம்.
குப்புறவிழுந்தான்.
குமுறி அழுதான்.
அந்த “குமரிக்”கண்டத்தோடு
அவனை ஒரு கடல் விழுங்கியது.
அவன் அவனில் இறந்துபோனான்.
மூச்சு இருந்த‌து.
மூளை இற‌ந்த‌து.
ஏர்வாடிச்ச‌ங்கிலியில்..அந்த‌
காத‌ல் பூத‌ம் பூட்டிக்கிட‌ந்த‌து.

இருட்டை
அள்ளிப்பூசிக்கொண்ட‌வ‌ர்கள‌து
இத‌ய‌க்காகித‌ங்க‌ளின்
க‌ச‌க்க‌ல்க‌ள் இவை.
அவனை பேய் அடித்தது என்றார்கள்.
அவனுக்குத்தெரியுமா?
பேய் அடித்தது
அவனை அல்ல
நம் பைந்தமிழை என்று.

காத‌ல் என்ப‌து
“பா.விஜ‌ய்” க‌ளின் பித்த‌ வாந்தியும் அல்ல‌
சேதுக்க‌ளின் ர‌த்தவாந்தியும் அல்ல‌
இர‌ண்டுங்கெட்டான்களின்
சிவ‌ப்பு அந்தி.அது.
எதிர்காலமே தீப்பிடித்து
பற்றியெரியும்
நம்பிக்கையில்லாத‌ வான்தீ அது.
இளைஞ‌ர்க‌ளின் யுக‌ம்
இப்ப‌டி
க‌ச‌ங்கிப்போவ‌த‌ற்கா
முத்தக்கவிதைகளை
மூட்டி விட்டீர்கள்.
அதற்காக‌
பூதாகாரமாய்
இந்த காகிதங்களில் எல்லாம்
உத‌டுக‌ள் ஆக்கினீர்க‌ள்.

வாழ்க்கையை வாழ்ந்து தான் பார்ப்போமே
என்ப‌த‌ற்கும்
வாழ்க்கையை செத்து தான் பார்ப்போமே
என்பதற்கும்
இடையே உள்ள‌ ம‌ய‌க்கங்க‌ளை
மாறி மாறி
ஊற்றிக்கொடுக்கும்
வ‌ர்ண‌ பிராந்தியை கொட்டி அழியுங்கள்
ஓ!புதுக்கவிஞர்களே!

வாக்கியங்களை
ஒடித்து ஒடித்துப்பொட்டு
புதுக்கவிதை சமையுங்கள்
கவலையில்லை.
பசிக்கு
இன்னொரு பசியை
புசிக்க‌க்கொடுக்கும் உங்க‌ள்
புல்லுருவித்த‌ன‌த்துக்குத்தான்
புதுக்க‌வித்தை என்று பெய‌ரா?

பொறுக்கி பொறுக்கி
எச்சில் கொண்டு எழுதிய‌ இந்த‌
முத்த‌ங்க‌ளுக்கு
உங்க‌ள் “ச‌ங்க‌த்தில்”
என்ன‌ திணை என்று பெயர்?
குறிஞ்சித்திணையா..
வேண்டாம்..வெறும் எச்சில்
“உறிஞ்சித்திணை” என்று
பெய‌ர் வையுங்க‌ள்.
ஏனெனில்
உங்க‌ள் உரிப்பொருளும் க‌ருப்பொருளும்
இருப்ப‌து..வெறும்
“உத‌டும் உத‌டு சார்ந்த‌ இட‌மும்” தானே!

எங்கெல்லாம் தேடுகின்றோம்
ந‌ம் தாய்த்த‌மிழின் ஏட்டுச்சுவ‌டிக‌ளை.
அந்தோ!ப‌ரிதாப‌ம்!
இவை யாவும்
“ஏர்வாடியில்” க‌ண்டெடுத்த‌ ஏட்டுச்சுவ‌டிக‌ள்.


epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா