செய்தி

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

பவளமணி பிரகாசம்


அதிசயமோ அருமையான தத்துவமோ
அரிதாக இடறியது போல் சிக்கியதோ
காலையிலே படித்த கதையிது கேளீர்
சிந்திக்க வைத்ததே கதையின் செய்தி
வனத்தின் பச்சைமரக்கிளையொன்றிலே
விடிந்த பொழுதை கொண்டாடவென்றோ
குருவியொன்று குரலெடுத்துப் பாடியதே
அவ்வழியே சென்ற எமனின் பார்வையும்
ஒரு கணம் குருவியின் மேல் படிந்ததுவே
அரண்டு போனது கூவிய குட்டிப் பறவை
அழைத்தது அவசரமாய் வலிமிகு கருடனை
கெஞ்சியது ஏழு கடல் தாண்டிய தீவிற்கே
தன்னை கொண்டுசேர்க்க வேண்டுமென்றே
இசைவுடன் கருடனும் இறகை விரித்திட
ஏறி அமர்ந்து குருவி பயணித்ததுவே
நீண்ட நேரம் நெடுந்தூரம் நிற்காமலே
இலக்கை அடைந்த பின் நிம்மதியே
இரவுக்கு முன் வீடு திரும்பும் எமனோ
காலையில் பார்த்த வனத்து மரத்தை
தாண்டுகையில் சொன்னது துணையிடம்
ஏழு கடல் தாண்டியுள்ள தீவில் இப்பொழுது
நான் கவர வேண்டிய குருவியை இன்று
காலையில் இங்கு கண்டேனேயென்று
எழுந்த வியப்பு எமனுக்கு மட்டுந்தானா

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்