சொல்லயில்

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

பசுபதி


கந்தன் மொழியை வேலன் பேரில்
. . காக்க வந்த சொல்லயில்;
இஇந்தி யக்க விஞர் வானில்
. . என்றுங் கூவும் பூங்குயில்.
சிந்து வேந்தர் பார திக்கென்
. . சென்னி என்றும் தாழுமே!
. . . செந்த மிழ்க்க விக்கு முன்பென்
. . . சென்னி என்றும் தாழுமே! (1)

சொல்லில் தமிழை ஊற வைத்த
. . சுப்ர மண்ய பாவலன் ;
அல்ல லுற்ற பார தத்தின்
. . ஆன்ம ஞானம் ஆர்த்தவன்.
ஷெல்லி தாசன் முன்னர் என்றன்
. . சென்னி என்றும் தாழுமே !
. . . செக்கி ழுத்த செம்மல் நண்ப!
. . . சென்னி என்றும் தாழுமே! (2)

மின்னும் கண்கள் வீரம் ஒளிரும்
. . மீசை, பாகை உருவினன் ;
கண்ணன் கழலை நண்ணும் கைகள்
. . கனலில் நீட்டும் காதலன்.
சென்னை செய்த வப்ப யன்முன்
. . சென்னி என்றும் தாழுமே !
. . . சித்தன் சக்தி பித்தன் முன்பென்
. . . சென்னி என்றும் தாழுமே! (3)

~*~o0o~*~

*அயில்=வேல்

pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி