This entry is in the series 20021110_Issue

வ.ந.கிரிதரன்


நீ சொல்ல வேண்டுமென்று
எவ்வளவோ
நினைத்தாய். ஆனால்
சொல்லவில்லை.
நானும் சொல்ல வேண்டுமென்று
எவ்வளவோ
நினைத்திருந்தேன். ஆனால்
சொல்லவில்லை.

நீ
ஒரு பாதையில் சென்றாய்.
நானோ
இன்னுமொரு பாதையில்
சென்றேன்.
பாதைகளோ..
தொலைவில் இணைவதைப் போல்
தோன்றும்
சமாந்தரப் பாதைகள்.
என்றுமே இணைவதற்குச்
சாத்தியமற்ற
சமாந்தரம்.

நீ மட்டும் சொல்ல வேண்டுமென்று
நினைத்ததைச்
சொல்லியிருந்தால்,
நானும்
சொல்லாமல் விட்டதைச்
சொல்லியிருந்தால்
என்ன நடந்திருக்கும்
என்று
இப்பொழுதும் நான்
அடிக்கடி
எண்ணிப் பார்ப்பதுண்டு.
ஒரு வேளை
ஏன் தான் சொல்லித்
தொலைத்தோமோவென்று
இருந்திருக்குமோ ?

ngiri2704@rogers.com

Series Navigation