This entry is in the series 20020909_Issue

புகாரி, கனடா


ஓ… பெண்ணே
நீ போகாதே பின்னே…!

நீ
பின்னுக்குப்போனால் – வாழ்க்கை
மண்ணாகிப் போகும் – உன்
கண்ணுக்கு முன்னே!

O

போராடு…!

யாரையும் சாகடிக்க அல்ல
உன்னையே நீ வாழ வைக்க!

உன்னோடு
இந்த உலகப் பெண்களையும்
உயர்த்தி வைக்க!

முன்னுக்கு வருவதென்பது
முதலையே மோசமாக்கும்
மூர்க்கச் செயலல்ல!

ஆண்களை மிதித்துக்கொண்டு
அதிகாரம் காட்டுகின்ற
அவலமல்ல!

ஆணோடு பெண்ணும்
சமமென்று கைகோர்க்கும்
அற்புதம் செய்ய!

O

பிறப்புச் சூட்சுமம்
உரைக்கும் நியதிப்படி
மறுப்பவர்கள் அல்ல – ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்…!

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்…!

ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்…!

ஆக,
ஊதாரிதானே ஆண் –
கவலையை விடுங்கள்!

O

பெண்களின்
விருப்பமே அறியாமல்
ஓடிக்கொண்டிருக்கலாம்
உங்கள் ஆண்கள்!

அவர்களிடம்
கேளுங்கள் தோழியரே…!

காதல் பேசிய
விழிகளால் மட்டுமல்ல
சம்மதம் சொன்ன மொழிகளாலும்
உங்கள் தேவைகளைக்
கேளுங்கள்…!

தொட்ட நாள் முதல்
தொடரும் நாளெல்லாம்
விட்டு விடாமல்
வீரமாய் நின்று – வார்த்தை
மொட்டவிழ்த்துக் கேளுங்கள்…!

கேட்டுத்தான் பெறவேண்டுமா
என்ற
வேதனை வார்த்தைகள்
வேண்டாம்…!

கேட்பது என்பது
எவருக்கும் பொது…!

நாளெல்லாம் அவர்கள்
உங்களிடம் கேட்டுக் கேட்டுப்
பெறுகிறார்களே – அதைப் போல…

கேளுங்கள் தோழியரே…!

O

வரம் கேட்டு
வாங்கிக்கொள்வதெல்லாம்
பெண்கள் – அதைக்
கொடுத்துவிட்டு
அல்லல் படுபவரே ஆண்கள்
என்றுதானே நம்
இலக்கியங்களும்
எழுதப் பட்டிருக்கின்றன…!

அந்தப் பயத்தில்
எவரேனும்
முரண்டுபிடிக்கலாம்…!

அது
வெறும் பயமே தவிர
பாரபட்சம் காட்டும்
போக்கு அல்ல!

உங்கள் வரங்கள்
வாழ்வதற்கன்றி வதைப்பதற்கல்ல
என்று
உங்கள் முகப்பூக்களின்
விழிச் சுவடிகளில்
இனிமையாய்த் தெளிவாய்
எழுதி வையுங்கள்…

பிறகு பாருங்கள்…!

நீங்கள்
கேட்கும் முன்னரே
எல்லாமும்
கிடைக்கக் கூடும்!

O

திருமணம் என்பது
தண்டனை அல்ல!

செக்கில் கட்டிச்
சிதைக்கும் காரியமல்ல!

தலையைக் கொய்யும்
தலையெழுத்தல்ல!

அடிமையாவதற்கு
அடிமைகளே எழுதித் தந்த
அடிமைச் சாசனம் அல்ல!

இதைத்
தெளிவாக்கிக்கொண்டுவிட்டால்…

தோழியரே!
பெண்ணின் மீது இடப்பட்ட
அத்தனை விலங்குகளும்
பட்டுப் பட்டென்று
தெறித்துச் சிதறி
எங்கும்
சமத்துவமே துளிர்க்கும்…!

வாழ்த்துக்கள்!

*-*-*

buhari2000@hotmail.com

Series Navigation