சாட்சி பூதம்
Published February 17, 2002 • By
பூரணி
பூரணி

முதுமை
என்னை நூதன வஸ்துவாகிவிட்டது
மனித இனத்திலிருந்து பிரித்து
உலகில் நான்
சாட்சி பூதமாய்
சாப்பாடு; தூக்கம்;
சங்கடம்; உடல் வாதை என.
கடமைகள்; காரியங்கள்;
கொடுக்கல்; வாங்கல்கள்;
கஷ்டம் , சுகம்;
கோபம் சமாதானம்;
ஏக்கம், எதிர்பார்ப்பு;
எல்லாமே முடிவுக்கு வந்தாயிற்று.
ஆனாலும்
நான் சாட்சி பூதமாய்
நூதன வஸ்துவாய்.
(பறத்தல் அதன் சுதந்திரம் – தமிழ்ப் பெண் கவிதைகள் தொகுப்பிலிருந்து)