ஒரு பாளை கள்ளு..
Published December 2, 2001 • By
விக்னேஷ்
விக்னேஷ்.

திளாப்பு கெட்டி பனையேறி
நாலு கலையம் சுண்ணாம்பு தேச்சு,
ரெண்டு கலையத்துல
கள்ளு எறக்கி,
அக்கானியை அடுப்பில வெச்சு
கருப்பட்டி செய்து,
கள்ளெடுத்து பாளையில வீத்தி
சுட்ட அண்டியும், பச்ச மிளகும் கடிச்சு
ஒரு மடக்கு குடிக்கும்போ
பனையெல்லாம் பிள்ளையா தோணும்.
பனம் பூவை பாளை அருவா கொண்டு
சீவினா பனைக்கு வேதனை எடுக்காதா ?
ஊறி வர கள்ளெல்லாம் அதோட கண்ணீரா ?
பனை ஓலையை வெட்டும்போ
பனைக்கு கைவேதனை எடுக்குமா ?
கள்ளு குடிச்சு முடிச்சும்போ
நிறைய தோணும்….
அப்படியே பனையை கட்டிப் பிடிச்சு கிடந்தா
எல்லாரும் சொல்லுவினும்
குடிகாரன்…
பாரு குடிச்சு கெறங்கி கிடக்குதான்னு.