இந்த மண் பயனுற வேண்டும்

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

பசுபதி


கூழ்வேண்டிக் கெஞ்சுபவர் குழிவிழுந்த கண்ணில்
. . கொடுங்காலன் கண்டுளம் கொதிப்பவர் வேண்டும்;
ஊழ்வினையால் வறுமையெனும் உளுத்தபழங் கருத்தை
. . உதறிடநல் அறிவுரை உரைப்பவர் வேண்டும்.
வாழ்வினிலே வளமென்று வாக்குறுதி கூறி
. . வாய்கிழியும் அரசியல் வாதிகள் ஒதுக்கி
ஏழ்மையெனும் இருளதனை இல்லையெனச் செய்யும்
. . இளைஞரால் இந்தமண் பயனுற வேண்டும்.

விதவிதமாய் வண்ணங்கள் விரித்தாடும் வெண்மை
. . வேற்றுமையுள் ஒற்றுமை மிளிர்ந்திடும் உண்மை;
இதயங்கள் அனைத்திலுமே இரத்தநிறம் சிவப்பு;
. . இறையொன்றே என்றிட ஏன்மிகக் கசப்பு ?
மதமென்னும் புதரினிலே மறைந்திருந்து வெறியை
. . வளர்த்துவிடும் தீவிர வாதிகள் விலக்கி
மதஇனநல் இணக்கமெனும் மரத்தினிலே மலரும்
. . மக்களால் இந்தமண் பயனுற வேண்டும்.

தொன்மரபை, செந்தமிழின் சொல்லழகைத் துகைக்கும்
. . தொலைக்காட்சித் தொல்லையைத் தொலைப்பவர் வேண்டும்.
இன்னிசையும் இலக்கியமும் இறவாமல் காக்கும்
. . இலக்குடனே இல்லறம் ஏற்பவர் வேண்டும்.
சின்னதென்றும் பெரியதென்றும் செந்தழலில் உண்டோ ?
. . சீரழிக்கும் சிறுதிரைப் பெட்டியைத் தவிர்த்துப்
பண்பாட்டுப் பழந்தேனைப் பாலோடு புகட்டும்
. . பாவையரால் இந்தமண் பயனுற வேண்டும்.

Series Navigation

பசுபதி

பசுபதி