நலமா
சேவியர்

நலமா,
எனும் விசாரிப்புகள் தொடரும்.
செவிப்பறைகள்
பதில் வருமுன் பூட்டிக் கொள்ளும்.
உன்னைப் பார்த்ததில்
மனசு மகிழ்கிறது
எனும்போதும்,
கண்கள்
தூக்கக் கலக்கத்தில் விழிக்கும்.
மிச்சமிருப்பதெல்லாம்
சொற்களுக்கும்
பற்களுக்குமான உறவு…
இமைகள் கூட
கண்களை தனிமைச் சிறைக்குள்
தள்ளும் கதவு தான்.
கடிகாரக் கட்டளைகளும்
அதிகார மூச்சிரைப்புகளும்
விரட்டிக் கொன்று விட்டன
சில
வெளிவராத வெளிச்சங்களை.
இன்னும்
எங்கள் விசாரிப்புகள் தொடரும்,
உள்ளீடில்லா வார்த்தைகளோடும்
ஊமையான
செவிகளோடும்.