தானத்தில் சிறந்தது உடல்தானம்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

கவிஞர் இரா.இரவி


இரத்த தானம், கண் தானம் தாண்டி இன்று உடல் தானம் என்ற நிலைக்கு
உயர்ந்துள்ளது. மனித சமுதாயம். மருத்துவர்களான திரு.அசோகன், திருமதி.
புஷ்பாஞ்சலி பெற்றோர்கள் தனது மகன் இதயந்திரனுக்கு விபத்தில் முளை மரணம்
ஏற்பட்டவுடன் முடிவெடுத்து சிறுமி அபிராமிக்கு இதயத்தை தர சம்மதித்து
வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடந்து இன்று அபிராமி உடல் நலம் பெற்று
பேசுவதைக் கண்டு “எங்கள் மகன் இதயேந்திரன் சாகவில்லை அபிராமி உருவில்
வாழ்கிறான்”என உருக்கமாக தெரிவித்தார்கள். சிறுமி அபிராமியின் தாய்
மஞ்சுளா “எத்தனையோ கடவுள்களை வேண்டினோம் எந்தக் கடவுளும் உதவவில்லை. என்
மகளின் உயிர்காத்த நீங்கள் தான் கடவுள்” என்று இதயேந்திரன் பெற்றோரின்
காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி கூறினார். மனிதநேயம் இன்னும்
மறைந்துவிடவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இந்த நிகழ்வு. இந்த
செய்தியினை படித்தோம், நெகிழ்ந்தோம், பாராட்டினோம் என்று இருந்து
விடாமல். உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் வரவேண்டும்.
ஒருவர் இறந்தவுடன் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம்.தீயுக்கும்,
மண்ணிற்கும் இரையாகும் இந்த சடலத்தை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு
வழங்குவதில் தவறு இல்லை. தசாவதாரம் புகழ் சாதனையாளர் கலைஞானி கமலகாசன்
தனது உடலை தானமாக மருத்துவக்கல்லூரிக்கு வழங்க உள்ளார். அவரது ரசிகர்கள்
மற்றும் பொதுமக்கள் இது போன்ற நற்பணிக்கு முன்வர வேண்டும்.

ரத்த தானம் தந்தால் விபத்தில் ரத்தம் இழந்தவருக்கு உயிர் காக்கும்
மருந்தாக இந்த ரத்த தானம் உதவும். எனவே தயக்கமின்றி ரத்த தானம் வழங்கிட
பொதுமக்கள் முன் வரவேண்டும். விழி தானம் நாம் எழுதி கொடுத்து விட்டால்
மட்டும் போதாதது வந்து எடுத்துச் செல்வார்கள். 30 நிமிடங்களில் வேலை
முடிந்துவிடும்.மற்ற இறுதிச் சடங்குகளை வழக்கம் போல செய்து கொள்ளலாம்.

கண் தானம் வழங்கினால் பார்வையற்ற இரண்டு நபர்களுக்கு பார்வை
கிடைக்கின்றது. இறந்த பின்னும் இந்த உலகை ரசிக்கும் அறிய வாய்ப்பு. வீணாக
தீயுக்கும்,மண்ணிற்க்கும் இரையாகும் விழிகளைத் தானம் செய்வோம்,
பார்வையற்று விழிகளுக்காக காத்து இருப்போர் நம் நாட்டில் பல்லாயிரம்
பேர். விழிதானம் தந்துவிட்டால், உடலில் ஒர குறை இருந்தால் சொர்க்கத்தில்
இடம் கிடைக்காது என்ற மடத்தனமாக முட நம்பிக்கை நம்மில் பலருக்கு உள்ளது.
இந்த முட நம்பிக்கை அகற்றப்பட வேண்டும் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும்
பார்வையற்ற சகோதரர்களின் இன்னல்களை பார்வையுள்ள நாம் பத்து நிமிடங்கள்
கண்ணைக் கட்டி கொண்டு நடந்தால் துன்பத்தை உணர முடியும். எனவே “பார்வையற்ற
சகோதரர்களுக்கு இறந்த பின் பார்வையாக இருப்பதைப் போன்ற நல்ல செயல் உலகில்
எதுவுமில்லை” என்பதை அனைவரும் உணர்வோம்.மதுரை அகவிழி பார்வையற்றோர்
விடுதி நிறுவனர் பார்வையற்ற எம்.பழனியப்பன் தலைமையில் 25பேர் ரத்ததானம்
வழங்கி கண்தான விழிப்புணர்வு விதைத்தனர்.விபத்தில் முளைச்சாவு நேர்ந்தால்
இனி பிழைக்க வழி இல்லை என்பதை மருத்துவர் அறிவித்தால் உடன் உடல் தானம்
தரும் துணிவான முடிவை எடுக்க முன் வர வேண்டும். பகுத்தறிவு பெற்ற இனம்
மனித இனம். எனவே பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்து பிறருக்கு உதவும் மனித
நேயத்தையுப் பெற வேண்டும். இதயேந்திரனின் இதயம் மட்டுமல்ல இரண்டு
விழிகள்,இரண்டு சிறுநிரகம், கல்லீரல், எலும்புகள் என பல்வேறு உறுப்புகளை
தானமாக வழங்கி உலக மனிதர்கள் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்து
இருக்கிறார்கள். முன் மாதிரியாக அவர்கள் செய்த அரிய செயலை எல்லோரும்
செய்யும் மனநிலை பெற வேண்டும்.

இறந்தவுடன் மருத்துவ ஆராச்சி மாணவர்களுக்கு உடலைத் தரும் உயர்ந்த
முடிவுக்கும் மனித சமுதாயம் வர வேண்டும். இந்த ஆராய்ச்சியின் காரணமாக
மனிதனின் இறப்பைக் கூட இல்லாது செய்யும் நிலை வரலாம். பிறப்பை தடுக்க
விஞ்ஞானத்தால் கற்றோம். இறப்பையும் தடுக்க விஞ்ஞானத்தில் முடியும்,
முடியாதது உலகில் எதுவுமில்லை. மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மனித
இனத்தின் உச்ச நிலைக்கு வளர நாம் எல்லோரும் சிந்தனையை செலவிடுவோம். விலை
மதிப்பற்ற மனித உயிர்களைச் காப்போம் மனிதநேயம் போற்றுவோம். சாதிமத
வெறிகளை மாய்ப்போம்.


eraeravi@gmail.com

Series Navigation

கவிஞர் இரா.இரவி

கவிஞர் இரா.இரவி