டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

மலர் மன்னன்


(எச் ஐ வி / எய்ட்ஸ் தொடர்பான கல்வி, ஆய்வு, ஆலோசனை, பரிசோதனை மற்றும் மருத்துவ சேவையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஒய் ஆர் ஜி கேர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சுனிதி சாலமன், எம். டி., மற்றும் டாக்டர் சுனில் சுஹாஸ் சாலமன், எம் பி பி எஸ், எம் எச் பி ஆகிய இருவரும் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)


டாக்டர் சுனிதி சாலமன்

டாக்டர் சுனில் சுஹாஸ் சாலமன்

எச் ஐ வி தொற்றுள்ளவர்கள் இந்தியாவிலும் உள்ளனர் என்பது 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப் பட்டதிலிருந்து, எச் ஐ வி ஒரு கொள்ளை நோய்க்குரிய தீவிரத்துடன் இந்தியாவில் பரவி வருகிறது. 2006 ல் தனியார் அமைப்புகள் வாயிலாகத் தெரிய வந்துள்ள தகவலின்படி இந்தியாவில் எச் ஐ வி தொற்றினால் பதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐம்பது லட்சம் என்று கூறப்பட்ட போதிலும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் இந்தியாவில் இருபது முப்பது லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற புள்ளி விவரத்தை அளித்துள்ளது. இது எவ்வாறாக இருப்பினும், எச் ஐ வி தொற்று உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எதிர்ப்படும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான் இப்போது கவனத்திற்குரிய பிரச்னையாக உள்ளது.

சிகிச்சையில் புரட்சி

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அபிவிருத்தி செய்து, அதன் மூலமாகவே எச் ஐ வி தொற்று தீவிரமடையாமல் ஒரு கட்டுக்குள் நிறுத்தி வைப்பதில் நன்கு பலன் தரக்கூடிய ஹார்ட் (எச் ஏ ஏ ஆர் டி ஏஅஅகீகூ) எனப்படும் வீரிய கூட்டு மருந்து சிகிச்சை 1996 ல் கண்டறியப்பட்டு, அதனை அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அறிமுகப்
படுத்தியதன் மூலம்எச் ஐ வி / எய்ட்ஸ் சிகிச்சையில் ஒரு புரட்சியே விளைந்தது எனலாம். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மூன்று வகை மருந்துகளின் கூட்டான இதனை ஆறு மாத காலத்திற்குத் தொடர்ந்து அளிப்பதன் பயனாக,எச் ஐ வி தொற்று உள்ளவரின் ரத்தத்தில் எய்ட்ஸ் நோயாக முற்றிவிடச் செய்யும் எச் ஐ வி வைரஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட, தற்சமயம் அவரது உடலில் எச் ஐ வி வைரஸின் எண்ணிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வழக்கத்தில் உள்ள வியாபார ரீதியான பரிசோதனைக் கூடங்களில் செய்யப்படும் சோதனைகளின் மூலம் கண்டறியமுடியாத அளவுக்கு ஆகிவிட்டது. இதனால் அந்த நபர் எச் ஐ வி தொற்றிலிருந்து முற்றிலுமாகக் குணமடைந்து விட்டார் எனக் கருத முடியாது. ஆனால் அந்த நபர் எச் ஐ வி தொற்றின் பாதிப்பு இல்லாதவர் போலக் காணப்படுவார். காரணம், நோய் தடுப்புச் சக்தியைக் குன்றிப்போõச் செய்யும் வைரஸ்கள் தமது தாக்கத்தைக் காண்பிக்காத அளவுக்கு ரத்தத்தில் எணிக்கையில் குறைந்து போய்விடுவதும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் அணுக்களின் எண்ணிக்கை கூடுவதும்தான். வைரஸ்களின் எண்ணிக்கை எவ்வளவுதான் குறைந்து போனாலும் இக்கூட்டு மருந்து சிகிச்சையை விடாமல் தொடர்ந்து பெற்றுவருவதுதான் எச் ஐ வி தொற்று உள்ளவர் நீண்ட காலம் அதன் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதற்கான வழியாகும்.

மேற்கத்திய நாடுகளில் எச் ஐ வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எச் ஐ வி யால் வரும் காசம் போன்ற நோய்களுக்குப் பலியாகாமல் நீண்ட காலம் செயலாற்றும் திறமையுடன் வாழ்ந்து, இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற வேறு காரணங்களால் மரணமடையும் நிலை உருவாகியிருப்பதற்குக் காரணம் அவர்கள் இவ் வீரியக் கூட்டு மருந்துகளைக் குறித்த நேரப்படி விடாமல் உட்கொண்டு வந்ததுதான் எனலாம். டயப்பட்டீஸ் எனப்படும் சர்க்கரை நோய், ஹைப்பர்டென்ஷன் எனப்படும் தீவிர ரத்த அழுத்தம் ஆகியவற்றை நிரந்தரமாகத் தவறாமல் மருந்து சாப்பிடுவதன் மூலம் எப்படி ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறதோ அதேபோல, எச் ஐ வி தொற்றும் விடாமல் மருந்து உட்கொள்வதன் மூலம் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியதுதான் என்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது.

மருந்து பலன் தரத் தவறும் அபாயம்

இந்தியாவைப் பொருத்த வரை சர்க்கரை நோய், தீவிர ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு தினசரி மருந்து எடுத்துக் கொள்வதற்கும் எச் ஐ வி தொற்றுக்கு விடாமல் உரிய நேரப்படி மருந்து எடுத்துக்கொள்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. முதலில் குறிப்பிட்ட உடல் நலக் குறைவுகளுக்கு பகிரங்கமாக மருந்து உட்கொள்வது சமூகத்தில் எவ்வித இழிவையும் ஏற்படுத்துவதில்லை. ஒரேவித மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துவருவதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் எச் ஐ வி தொற்றுக்கான வீரியக் கூட்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவது வெளியே தெரிந்தால் இழிவாகக் கருதப்படும் நிலை இப்போதும் நீடித்து வருகிறது. இதனால் எச் ஐ வி தொற்று உள்ளவர் விடாமல் மருந்து சாப்பிட்டு வருவதில் தொய்வு ஏற்படுகிறது (இதன் காரணமாகவே காச நோய்க்கான மருந்தைச் சாப்பிட்டு வருவதாகப் பிறரிடம் கூறுமாறு எச் ஐ வி தொற்று உள்ளவர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது). மேலும், எச் ஐ வி தொற்று உள்ளவர்களில் சிலருக்கு,
எச் ஐ வி வைரஸ்கள் பெருகுவதைக் குறைக்கும் வீரிய கூட்டு மருந்துகள் காலப் போக்கில் அந்த வைரஸ்களுக்குப் பழக்கமாகி, அவற்றால் வைரஸ்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத நிலைமை உருவாகி, மருந்துகள் பலன் தராமல் போய்விடுகிறது.

வீரிய கூட்டு மருந்துகள் எச் ஐ வி தொற்றுள்ளவர் உடலில் வேலை செய்யாமல் செயலற்றுப் போய்விடுவதற்கு முக்கிய காரணம், அவர் தமக்கு அளிக்கப்பட்ட மருந்துகளைக் குறித்த நேரத்தில் விடாமல் உட்கொள்ளத் தவறிவிடுவதுதான்.

இந்தியாவைப் பொருத்தவரை, எச் ஐ வி தொற்று உள்ளவர்கள் தமக்கு அளிக்கப்படும் வீரிய கூட்டு மருந்துகளை விடாமல் உட்கொள்ளத் தவறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

இரண்டாம் கட்டக் கூட்டு மருந்துகள்

எச் ஐ வி வைரஸ் பெருகுவதைத் தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்புச் சக்தியை அபிவிருத்தி செய்யும் இம்மருந்துகளைக் குறிப்பிட்ட காலம் தொடர்ந்து உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வதால் நோய்க்கான அறிகுறி ஏதும் இல்லாமல் தாம் முற்றிலும் குணமடைந்து விட்டதாகக் கருதும் நோயாளி, அம்மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறார். இதனால் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் எச் ஐ வி வைரஸ்களின் எண்ணிக்கை பெருகி, அவர் மறுபடியும் வீரிய கூட்டு மருந்துகளைச் சாப்பிட வேண்டியதாகிறது. ஆனால் அவர் இதற்காக முதலில் சாப்பிட்டு வந்த மருந்துகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அபிவிருத்தி செய்யும் ஆற்றலை இழந்து, எச் ஐ வி வைரஸ்கள் எவ்விதத் தங்கு தடையுமின்றித் தமது வேகத்தைக் காட்டுவதும், எண்ணிக்கையில் அதிகரிப்பதும் நீடிக்கிறது. இந்நிலைமையைச் சமாளிக்க அவருக்கு முன்பு அளிக்கப்பட்ட கூட்டு மருந்துகளைவிட அதிக வீரியமுள்ள இரண்டாம் கட்ட கூட்டு மருந்துகளை அளிக்க வேண்டியதாகிறது. இந்த இரண்டாம் கட்ட வீரிய கூட்டு மருந்துகளை முந்தைய முதல் கட்ட வீரியக் கூட்டு மருந்துகளைவிடக் கூடுதலான விலையில்தான் வாங்கியாக வேண்டும். முதல் கட்ட கூட்டு மருந்துகளை உட்கொள்வதால் ஒரு மாதத்திற்கு ஆகும் செலவு ரூ. 800 தான். ஆனால் இரண்டாம் கட்ட கூட்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதானால் மாதம் ஒன்றிற்கு ரூ. 5000 முதல் ரூ. 8000 வரை செலவழிக்க வேண்டியதாகிவிடும். நம் நாட்டில் எச் ஐ வி தொற்று உள்ளவர்களுள் மிகப் பெரும்பாலானவர்கள் அந்த அளவுக்கு அதிகச் செலவில் சிகிச்சை பெறும் வசதி உள்ளவர்கள் அல்ல.

முதல் கட்ட வீரிய கூட்டு மருந்து ஒருவரின் உடலில் செயல் இழந்துவிடுவதால் அவை உரிய வேலை செய்வதில்லை என்பது தெரிய வருவதற்கு இரண்டு முதல் மூன்று மாத காலமாகிவிடும். அதனால் மருந்து சாப்பிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்ற விரக்தியான முடிவுக்கு எச் ஐ வி தொற்று உள்ளவர் வந்துவிடுவார்.

செலவு கூடுதலான பரிசோதனை

இவ்வாறு முதல் கட்ட கூட்டு மருந்துகளை விடாமல் உட்கொள்ளத் தவறி, எச் ஐ வி தொற்றின் பாதிப்பு மீண்டும் தெரிய ஆரம்பித்து மறுபடியும் மருந்து சாப்பிட்டு சிகிச்சையைத் தொடர வரும் நபரின் உடலில் தற்சமயம் எச் ஐ வி வைரஸ்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்து, அவரது நோய் எதிர்ப்புச் சக்திக்கான ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை எவ்வலவு குறைவாக உள்ளது என்பதைக் கண்டறிந்த பிறகுதான் அவருக்கு உரிய மருந்துகள் எவை என்று தீர்மானிக்க இயலும். ஆனல் இதற்கான பரிசோதனைச் செலவும் மிக மிகக் கூடுதலாகும். பரிசோதனை முறைகளும் பரிசோதனைக்கான சிறப்பு உபகரணங்களும் அதிக விலையுள்ளவையாக இருப்பதே இதற்குக் காரனம். தற்சமயம் இப்பரிசோதனைக்கு ஆகும் செலவு ரூ.4000 ஆகும். எனவே இவ்வளவு அதிகச் செலவுள்ள பரிசோதனையை நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு அளிப்பது சாத்தியமாக இல்லை. எனவே முதல் கட்ட கூட்டு மருந்துகள் ஒருவரின் உடலில் வேலை செய்யும் சக்தியை இழந்த பின்னரும் அவற்றையே அவர் உட்கொள்வது தொடர்கிறது. இரண்டாம் கட்ட கூட்டு மருந்துகள் அதிக விலையுள்ளவை மட்டுமல்ல, அவை மிகவும் சிக்கலானவையுமாகும்.

எச் ஐ வி தொற்றுக்கான கூட்டு மருந்துகள் ஒவ்வொரு நபரின் உடலிலும் உள்ள எச் ஐ வி வைரஸ்களின் எண்ணிக்கை, நோய் எதிர்ப்பு அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும், அளவுகளிலும் அளிக்கப்படுபவையாகும். இதை அறியாமல் கணவன், மணைவி, குழந்தை ஆகிய அனைவருக்கும் எச் ஐ வி தொற்று உள்ள கும்பங்களில் ஒருவருக்குரிய மருந்துகள் மற்றவர்களாலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இதனாலும் மருந்துகள் வேலை செய்யாமல் போய்விடும் நிலை உருவாகிவிடுகிறது.

சமாளிக்கும் வழி

எச் ஐ வி தொற்று பரவாமல் தடுப்பதற்கும், எச் ஐ வி தொற்று உள்ளவர்கள் அதனால் பாதிப்பிற்குள்ளாவதைக் கட்டுபடுத்துவதற்காகவும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் முதல் கட்ட வீரிய கூட்டு மருந்துகளை தொடக்கக் கட்டமாக ஒரு லட்சம் பேருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டு ஏராளமான அளவில் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

முதல் கட்ட கூட்டு மருந்துகளைக் குறித்த நேரத்தில் விடாமல் உட்கொள்ள வேண்டியதன் அவசியம், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் ஒவ்வொருவரும் அவரவருக்கு உரிய கூட்டு மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே பலன் கிட்டும் என்கிற உண்மை ஆகியவை குறித்து மிகவும் தீஎவிரமாகப் பிரசாரம் செய்வதன் மூலமே விலை குறைவான முதல் கட்ட வீரிய கூட்டு மருந்துகளைக் கொண்டே எச் ஐ வி தொற்று பரவுவதைத் தடுப்பதும், எச் ஐ வி தொற்று உள்ளவரின் உடலில் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதும் இந்தியாவில் சாத்தியமாகும்.

சென்னை தரமணியில் வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவ மனை வளாகத்தில் இயங்கிவரும் தொண்டு நிறுவனமான ஒய் ஆர் ஜி கேர் மையம், வீரியகூட்டு மருந்து சிகிச்சையானது பொருளாதார வசதியில் எந்த நிலையில் இருப்பவர்களுக்கும் கிடைக்கச் செய்ய ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் படி ஒருவர் தனது பொருளாதார நிலைக்கு ஏற்ப முற்றிலும் இலவசமாகவோ, தமது சக்திக்கு ஏற்ப முக்கால் விலை, பாதி விலை, முழு விலை எனச் செலுத்தியோ இம்மருந்துகளைப் பெற்றுப் பலன் பெற இயலும்.

1949 ல் பெனிசிலின் மருந்து கண்டு பிடிக்கப்பட்ட போது அது காசம் முதலான நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக அனைவர் உடலிலும் வேலை செய்து தக்க பயனைத் தந்தது. காலப் போக்கில் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் பெனிசிலின் மருந்துக்குப் பழக்கப்பட்டு, இன்று மூன்றாவது, நான்காவது கட்ட அதி வீரிய பென்சிலின் வகை மருந்துகளும் பயன் அளிக்காத நிலை உள்ளது. தற் சமயம், எச் ஐ வி தொற்று உள்ள ஒருவரின் உடலில் புகுந்துவிடும் ஒருவகையான அதி தீவிரக் காச நோய்க் கிருமி இவ்வாறு எவ்வித மருந்துக்கும் கட்டுப்படுவதில்லை என்று கண்டறியப் பட்டுள்ளது. இவ்வகைக் காச நோய்க் கிருமிகள் பெருகினால் எச் ஐ வி தொற்று இல்லாதவர்களுக்கும் அவற்றால் அத் தீவிரக் காச நோய் பீடிக்கும் ஆபத்து ஏற்படும்.

(ஒய் ஆர் ஜி கேர் தொண்டு நிறுவன இயக்குநர் டாக்டர் சுனிதி சாலமன் சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகையில் 1986 ஆம் ஆண்டு பாலியல் தொழிலாளர் பலரைப் பரிசோதித்து, இந்தியாவிலும் எச் ஐ வி தொற்று இருப்பதை முதன் முதலில் கண்டறிந்தார். அதனால் தமது பேராசிரியர் பணியிலிருந்து விலகி, எச் ஐ வி தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தொண்டு நிறுவனம் ஒன்றைத் தம் குடும்பப் பெயரில் தொடங்கினார். அவருடைய மகன் டாக்டர் சுனில் சுஹாஸ் சாலமனும் அவருக்குத் துணையாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று அனைத்துலக அடிப்படையில் எச் ஐ வி / எய்ட்ஸ் குறித்து விரிவான அளவில் அறிந்துள்ள நிபுணர்களில் சுனிதி சாலமனும் ஒருவராகக் கருதப்படுகிறார்.)

( மலர் மன்னன், ஊடக ஆலோசகர், ஒய் ஆர் ஜி கேர் தொண்டு நிறுவனம்)


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்