பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

கோபால் ராஜாராம்


உங்களுக்கும் எஸ் ராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த மனக்கசப்பையும், அதைத் தொடர்ந்து கச்சை கட்டிக் கொண்டு முன்வந்த ஆண் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன் மீது நடத்திய மோசமான தாக்குதல்களையும் பற்றிப் படித்தபோது எனக்குத் தோன்றியது இது தான் : தமிழ்ச்சமூகம் மெள்ள மெள்ள சகிப்பின்மை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மையை வளர்க்கவேண்டியவர்களும், தம்முடைய சகிப்பின்மைக்கு நீதிகோருதல் என்ற பூச்சை அளித்து கட்சிகட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பெண்களைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை உதிர்ப்பது ஒன்றும் எஸ் ராமகிருஷ்ணனின் சினிமா நுழைவிற்குப் பிறகு வந்ததல்ல. தொன்றுதொட்டு வருவது தான். ரேவதி என்ற பெயரை ரேவதிக் குட்டி என்றும், குட்டி ரேவதி என்று செல்லப்பெயர் இட்டு வீட்டில் அழைப்பதும் , அதுவே எல்லாராலும் வழங்கப்படுவதும் ஒன்றும் புதிய விஷயமல்ல. பெயர்களை வைத்ததனாலேயே, அது உங்களைக் குறித்து என்று எண்ணினால் , எந்தப் பெயரையும் எந்த கதாபாத்திரத்திற்கும் வைக்க முடியாது. அந்தக் கதாபாத்திரம் கவிதை எழுதுவதாய்ப் படத்தில் சொல்லப்படவும் இல்லை. அப்படி சொல்லியிருந்தாலும் அதில் கோபப்பட ஒன்றுமில்லை. அப்படி கோபத்தைக்காட்டத்தான் வேண்டுமென்றால், ‘எட்டேகால் லட்சணமே ‘ என்று விளித்து வசைபாடிய ஒளவையாரின் மரபு இருக்கிறது. இல்லையென்றால் உங்கள் அடுத்த கவிதையில் எஸ் ராமகிருஷ்ணனின் வழுக்கைத் தலையை நீங்கள் கிண்டல் செய்யலாம் – தீர்ந்தது பிரசினை.

ஒரு கதாபாத்திரத்தின் கருத்து கதாசிரியனின் கருத்து என்ற பாமரத்தனமான புரிதல் தம்மை பெரும் இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்கிற ஜாம்பவான்களுக்கு இருப்பது வியப்பை அளிக்கிறது. அப்படிப் பார்க்கப் போனால் உங்களுக்கு ஆதரவாய்க் கொடி உயர்த்தியிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளிலிருந்தே கதாபாத்திரங்கள் உதிர்க்கும் ஒவ்வாத கருத்துகளைப் பட்டியலிட முடியும். அதற்காக அவர்களுக்கு எதிராய்க் கொடி பிடிப்பீர்களா ? இனி யாரும் பிரேம், ரமேஷ், மாலதி என்ற பெயர்களைக் கதாபாத்திரங்களுக்கு இடவேமுடியாதா ? கொல்லிப்பாவையில் சுந்தர ராமசாமியையே கதாபாத்திரமாக்கி கதை வெளிவந்ததாய் நினைவு. தமிழ்ப்படம் ஒன்றில் ஜீவா என்ற பெயரில் பெண் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு காதல் பாட்டும் கூட வந்தது. அதற்காக ஜீவா அன்பர்கள் திரண்டு எழ வேண்டும் என்பது இதன் பொருளா ? எஸ் எஸ் சந்திரன் அ தி மு கவில் சேர்வதற்கு முன்பு, நெடுஞ்செழியனையும், பிறரையும் சினிமாவில் கிண்டல் செய்ததும் உண்டு. அதன் பின்பு தொலைக்காட்சியில் திமுக தலைவர் பற்றி என்னவெல்லாம் பேசினார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான். பிரபு தன் உருவத்தைக் கிண்டல் செய்கிற காட்சிகளில் நடிக்கிறார். பார்த்திபன், முரளி, வடிவேலு போன்றோர் தம் நிறத்தைக் கிண்டல் செய்கிற காட்சிகளில் நடிக்கின்றனர். அதனால், குண்டானவர்கள், கறுப்பானவர்கள் எல்லாம் திரண்டு எழ வேண்டும் என்பது உங்கள் போராட்டத்தின் பொருளா ? உடல் ஊனமுற்றவர்களை சினிமாவில் எப்படி கிண்டல் செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

தமிழ்நாட்டில் ஏதோவொரு விதத்தில் சகிப்புத்தன்மை , வெகுஜனக் கலாசாரத்தில் இருந்து தான் வந்திருக்கிறது. கருணாநிதி என்ற பெயரில் நகைச்சுவை நடிகர் இருந்தார். என் பெயரை நீ எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று கலைஞர் அவரிடம் சண்டை போடவில்லை. திமுக ஆட்சிக்கு வருவதன் முன்பு திமுக கூட்டணித் தலைவர்கள் கழுதை மேல் சவாரி செய்வதாய் ஆனந்த விகடன் கேலிச்சித்திரம் வெளியிட்டது. ‘சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா ‘ என்று பாடல் தமிழ்ப்படத்தில் இடம் பெற்றது. சோனியா ஆதரவாளர்கள் அதற்கு எதிராய்ப் படைதிரட்டவில்லை. தெருவுக்குத் தெரு ஜெயலலிதாவும் கருணாநிதியும் தெருமுனைப் பேச்சாளர்களால் அர்ச்சிக்கப் படுகிறார்கள். அவர்களே அர்ச்சித்தவர்களின் காலடியில் சரண் அடைவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வெகுஜனக் கலாசாரத்தில் இருக்கிற ஜனநாயகத் தன்மையும் சகிப்புத்தன்மையும் மெத்தப் படித்தவர்களின் மத்தியில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

குஷ்புவிற்கு எதிராகக் கலாசாரக் காவலர்கள் கொடிதூக்கிய வன்முறைக்கும், எஸ் ராமகிருஷ்ணனுக்கு எதிராக உங்களைத் தூண்டிவிடுபவர்கள் கொடிபிடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே கருத்துகளுக்கு எதிராக அல்ல, தனிமனிதருக்கு எதிராக அச்சுறுத்தலை முன்வைத்த போராட்டங்கள். குஷ்பூவின் கருத்துகளைப் பிடிக்காதவர்கள், குஷ்பூ சொன்ன கருத்துகளிலிருந்து மக்களைக் ‘காப்பாற்ற ‘ முற்சி செய்திருக்கலாம். சேர்ந்து வாழ்வது எப்படி சமூகப் பிரசினைகளை உண்டு பண்ணும், கற்போடு பெண்மக்கள் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்படி நியாயமானது என்று மக்களிடையே பிரசாரம் செய்திருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும். அப்படி நிதானப் போக்கில் முயற்சி செய்திருந்தால், அது இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தனிமனிதத் தாக்குதலாய் ஆகியிருக்காது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு பரபரப்புத் தான் வேண்டும். கருத்துகள் இரண்டாம் பட்சம். குஷ்பூவை எதிர்த்துப் போராடினால் கிடைக்கும் விளம்பரம் தான் இவர்களுக்கு முக்கியம்.

கருத்துகளின் இடைவிடாத போராட்டம் மூலம் தம்முடைய கருத்துகளை ஸ்தாபிக்கும் முயற்சி அரசியல்வாதிகளுக்குக் கசக்கலாம். எழுத்தாளர்களுக்குமா ? துப்பட்டா போடாத பெண்ணைப்பற்றி எதிர்மறையாய் எழுதலாகாது என்று லிங்குசாமி, எஸ் ராமகிருஷ்ணன் போன்றோரையும் பிற சினிமாத்துறையினரையும் அழைத்து இந்தப் பார்வையில் உள்ள தவறுகளை எடுத்துச் சொல்லுமாறு கருத்தரங்கம் அமைத்து அவர்களின் பார்வையை விசாலப்படுத்த முயன்றால், அது ஆக்கபூர்வமான விஷயமாய் இருந்திருக்கும். இவர்கள் தகராறு செய்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த மனுஷ்ய புத்திரனிடமே கூட முன்வந்து இதை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கலாம். அதைவிட்டுவிட்டு இப்படி கட்சி கட்டுவது அழகல்ல.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரானவர்கள் ஒரு போக்குக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அந்தப் போக்குகளை அலச வேண்டும், இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அல்லாமல், ஒரு தனிநபருக்கு எதிராக, வன்முறை எதுவும் அற்ற ஒரு வசனத்தை முன்னிறுத்தி குரல் கொடுப்பதில் மோசமான அரசியல் தான் இருக்கிறது.

இந்த நாடகத்தில் நான் மதிக்கும் கிருஷாங்கினி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி போன்றவர்கள் முன்னிலையில் நிற்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்தப் போராட்டம் வன்முறைக்கு எதிரான போராட்டம் அல்ல. எஸ் ராமகிருஷ்ணன் என்ற தனிநபருக்கு எதிரான அர்த்தமற்ற வன்முறைப் போராட்டமே.

—-

gorajaram@yahoo.com

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்