ஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

சு.கற்பக விநாயகம்


மொட்டை அடித்தலும் காது குத்தலும் புத்த மதத் தாக்கத்தினால் வந்திருக்கும்.

புத்தரின் நிறைய சிற்பங்களில் காது வளர்த்திருப்பார். நானறிந்த வரையில் கூட பாம்படம் அணியப் பெண்டிர் காது வளர்த்திருந்தனர்– கரிசலிலும், தாமிரபரணிக்கரைகளிலும்.புத்த பிக்குக்கள் மொட்டை அடித்திருந்தனர். சமணர்களிடம் இப்பழக்கம் இருந்ததா தெரியவில்லை.

மழித்தலும் நீட்டலும் வேண்டா – என வள்ளுவர் இப்பழக்கங்களை விட உலகு பழிப்பதை ஒழித்து வாழச் சொல்கிறார். வள்ளுவம் சமணம்தானே.

காது குத்திடும் பழக்கம் – இந்து சமய மறுமலர்ச்சியோடு தொடர்புடையதாயிருக்கலாம்.

காது குத்துவது பொதுவாய் ஆண் குழந்தை என்றால் கடுக்கனையும், பெண் குழந்தை என்றால் தோடு/கம்மலையும் செருகி அழகு பார்க்க.

வள்ளலார் நகை அணியும் பழக்கத்தைக் கண்டித்திருக்கிறார். இறைவனின் சிந்தனைக்கு இவை எதிரானவை என்றும், உண்மையிலேயே கடவுள் நாம் நகை அணிய வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் அவர் பிறக்கும் குழந்தைக்கு காதிலும் மூக்கிலும் துளை போட்டே ஏன் அனுப்பவில்லை எனக்கேட்டிருக்கிறார். பின்னாளில் பெரியார் பெண் உரிமை பற்றிப்பேசும்போது பெண்கள் நகை மாட்டும் ஸ்டேண்ட் அல்ல என்றார் .

குழந்தையை 1 வயது முடியும்போது/ அதற்குள் வந்து விடும் ஊர்க் கொடை விழாவில், தாய் மாமன் மடியில் உக்கார வைத்து

ஆசாரி/தட்டார் வந்து பிள்ளையிடம் பேச்சுக் கொடுத்தபடியே நாசூக்காக காதில் துளை போட்டு விடுவார். (நகையைச் செய்து அணிவிப்பது தாய்மாமனின் செலவு)

நம்பிக்கையை சம்பாதித்தபிறகு ஏமாற்றிச்செல்பவனை ‘காது குத்திட்டான் ‘ எனச்சொல்வது மக்கள் மரபு.

(இம்மரபு 2/3 நூற்றாண்டுகளுக்கு முன்பு பெருவழக்காய் இருந்து இலக்கியங்களிலே எங்கும் பயின்று வருகிறதா என ஆராய்ந்தால் காது குத்துவதின் வரலாறைத் தொட்டுப் பார்க்கலாம்).

விக்கிரமாதித்தன்/மதன காமராஜன் கதைகள் நாயக்கராட்சிக் காலத்தின்போதோ/பிறகோ தமிழ் நாட்டிற்குள் பரவலாகின.

(இக்கதைகளில் தலையாரி எனும் கதாபாத்திரம் வருகின்றதால்/கோமுட்டி செட்டிகள்/குதிரைகள் வருவதால் இவை நாயக்கராட்சிக்குப்

பிற்பட்டவை) ஒரு கதையில் நரபலி தர காயமே படாத ஆண்மகனைத் தேடுகின்றனர். அப்போது ஒரு இளவரசன் மாட்டுகின்றான்.

ஆனால் அவன் மாட்டுவதற்கு சற்றே முன்புதான் மாம்பழம் வெட்டும்போது விரலை வெட்டிக் கொண்டவன். இதனால் தப்பிக்கிறான்.

மக்களிடையே இவ்விதமான நம்பிக்கைகள் விரவி இருந்த சூழலும் கவனிக்கத்தக்கவை.

கத்தோலிக்கம் பரப்ப வந்த ராபர்ட் டி நொபிலி மதுரைப் பகுதியில் செய்த செய்கைகளிலிருந்து நாம் ஆரம்பித்தோமானால் தமிழ்க் கத்தோலிக்கர்கள் கலாச்சாரம் ஏன் ஏனைய இந்துக்களின் கலாச்சாரத்துடன் ஒத்தே இருக்கின்றதென்பதை உணர முடியும்.

நொபிலி தன்னை பிராமணர் என்றும் விவிலியம் என்ற ஐந்தாம் வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாயும் அறிவித்தார். சைவ உணவு

உண்டார். நால் வருணத்தை ஏற்றுக்கொண்டார். பைபிளின் கதை (மனம் திருந்திய மைந்தனின் கதை)யில் வரும் ‘கொழுத்த

கிடாரிக்கன்றை அடித்து சமையுங்கள் ‘ என்ற கதையை ‘கொழுத்த ஆட்டுக்கடாயை ‘ என மாற்றினர் அப்போதைய மிசனரிகள். (மாட்டுக்கறி

சாப்பிட்டு நம்மையும் சக்கிலியனாக்கப் பாக்குறாங்க என்ற மக்களின் அச்சத்தைப் போக்கவாம்).

ஆனால் பிராட்டஸ்டண்ட்களின் நுழைவு கன்னியாகுமரி மாவட்டத்தின் தோள்சீலைப் போரோடு ஆரம்பிக்கிறது. சாதிக்கொடுமைக்கு எதிரான முதல் அசைவு அது.

தலைச்சன் பிள்ளையை வீட்டிற்கு அருகாமையில் புதைப்பதில் உள்ள காரணம் குறித்து திருச்சியைச் சேர்ந்த ஒருவர் சொன்னது. பில்லி சூனியம் செய்யும் மந்திரவாதிகள் தலைச்சன் பிள்ளையின் மண்டை ஓட்டைத் தோண்டி எடுத்து விடுவர். (அதுவும் காயமின்றிப் புதைக்கப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்) இதைத் தவிர்க்கவே வீட்டருகில் புதைக்கின்றனர்.

—-

michaelarulabel@yahoo.co.uk (மூலமாக பெறப்பட்டது)

Series Navigation

சு.கற்பக விநாயகம்

சு.கற்பக விநாயகம்