Pope John Paul II

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

புஷ்பா கிறிஸ்ரி


மரணம்: இது இந்த உலகில் பிறந்த ஜீவராசிகள் ஒவ்வொருவர்க்கும் பொதுச் சொத்து.

இது ஒரு பஸ் வண்டி. அவரவர்க்கென நாள் வைத்து இறைவன் அழைக்கும் போது, நாம் நிச்சயம் இந்த வண்டியில் ஏறியே தான் தீரவேண்டும். வாழ்க்கைப் பயணம் நீட்சியானது நாம் இந்த உலகில் வாழும்வரை. நாம் இந்த உலகில் எதைக் கொண்டு வந்தோம் ? கையில் ஒன்றுமில்லையே! ஆனால் மனிதம் என்னும் மகத்துவம் நம்மோடு கூடப் பிறக்கின்றதல்லவா! அதனைக் கொண்டு இந்த உலகை ஆளலாமே! நாம் ஆள்கிறோமா ? வாழ்வை ரசிக்கின்றோமா ? அழுது வடிக்கின்றோமா ?

இறைவன் மனிதனை மண்ணால் படைத்தான். அந்த மண்ணினால் பிறந்தவனே! நீ மண்ணுக்கே திரும்பி வரவேண்டும் என்று தான் இறைவன் படைத்தான். அந்த நல்ல நாள் தான் இன்று இந்த தெய்வ மகனுக்கு வந்திருக்கிறது…அவர் மண்ணுக்குத் திரும்பும் நேரம் வந்து விட்டது..அவரின் இந்த உலக வாழ்க்கைப் பாதையில் அவர் நடந்து வந்த பாதைகள் முடிந்து, பயணங்களும் முடிந்து, நித்திய யாத்திரையை நோக்கி புறப்படுகிறார் நமது அன்புக்குரிய பாப்பரசர். இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்.

ஒரு தாயின் கருவறை, மனிதனுக்கு கற்றுத் தரும் பாடங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. ஆனால், நாம் அந்தக் கறுப்பறையில் இருக்கும் போது, எதைக் கற்றுக் கொண்டோம் ? என்று கேள்வி கேட்டால், நிச்சயம் அதற்கான பதில் நமக்குக் கிட்டுவதில்லை. ஆனால் உண்மையில் நாம் கற்கிறோம். அதனால் தான் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் நல்ல அறிவுள்ள புத்தகங்களை படித்து, நல்ல விடயங்களைப் பேசி, நல்ல விடயங்களைச் சிந்தித்தும் வருகின்றார்கள். அதன்படியே தான் குழந்தைகள் பிறந்தவுடனேயே அறிவு மிளிர்ந்து, காணப்படுகிறார்கள். இந்தக் குழந்தையும் அப்படித்தான்.. அன்னையை மறக்காமல் வாழ்கிறார். அன்னையில் ஆசைப்படியே தான் ஒரு குருவாக நியமனம் பெற்றார். அத்துடன் அவர் நிற்காமல், மோட்ச நாயகனின் அன்னையாம் ‘அன்னை மரியாளின் அன்பு மகனாகவும் ‘ தன்னை அடிமைப் படுத்திக் கொண்டார். தன் ஒவ்வொரு முன்னேற்றதிலும், ‘அன்னையே! நான் உனது அடிமை. யாவும் உனது சித்தம் ‘ என்று சொல்லிக் கொண்டார். அவர் பாத யாத்திரை தொடர்ந்தது..

சிறுவயதில் தாயை இழந்து, அன்பு காட்டி வந்த அண்ணனை இழந்து, இறுதியில் தந்தையையும் இழந்த போது, அநாதையாக நின்ற போது, வேறு ஒரு மகனாக இருந்திருந்தால், தான் தோன்றித் தனமாக மாறி, இந்த உலக ஆசைகட்கு அடிமையாகி, தன்நிலை மறந்து, இன்றைய உலக இச்சைகட்டு அடிமைப் பட்டு தன் வாழ்வை இழந்திருக்கலாம். ஆனால், இந்த பாப்பரசர் உள்ளத்தில், அடிமனதின் ஆழத்தில், அன்றே இறைவனின் அருள் பிரகாசித்தது. எனவே தான் அநாதையாக இருந்த போதிலும், தன் தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டார்.

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தது ‘ என்ற ஆன்றோர் மொழியை தன்னுள் நிலை நிறுத்தினார்.

‘நாடென்ன செய்தது நமக்கு ? என்று கேள்விகள் கேட்காதே! நீ என்ன செய்தாய் என்று உன்னை நீயே கேட்டுக் கொள் ‘ என்னும் அன்றைய அமெரிக்க தலைவர், கென்னடியின் உரை போன்று, தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டதனால் தான், அவரால் தொடர்ந்து தன் தாய் நாட்டைக் காக்க முடிந்தது..அடிமைத் தளையிலிருந்து, தன் தாய்நாட்டைக் காத்த தனி மனிதனாக இவர் திகழ்ந்தார். சரியான நேரத்தில் இவர் தலைநிமிர்ந்து நின்றதனால் தான், போலந்து என்ற நாடு தலைநிமிர்ந்தது.

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே-அவன்

நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே ‘ என்கிறது நமது பாடல். ஒரு மகன் பிறந்த போது அவரை வைத்தியராக்க கனவு கண்ட அந்தத் ஆசிரியைத் தாயுள்ளம், இரண்டாவது மகனான karol Wyjtyla வை ஒரு குருவாக்க கனவு கண்டது. அந்தத் தாய், இருந்து வளர்த்தெடுக்க முடியாத போதும், அவரது ஆசை, இந்த மகனின் கனவானது. குருத்துவத்தை ஏற்றுக்கொண்டார். ஒரு நாடக நடிகனாக, ஒரு கவிஞனாக, ஒரு எழுத்தாளனாக, ஒரு படை வீரனாக, ஒரு குருவாக, ஒரு கர்தினாலாக, ஒரு பாப்பரசராக உருவெடுத்த இவர், பயணங்கள் தொடர்ந்தது.

கிறீஸ்து போதித்துத் திரிந்த காலங்களில், கிறீஸ்து பீற்றரைப் பார்த்துச் சொன்னார், ‘நீ பாறையாய் இருக்கிறாய், நான் உன் மேல் என் இராட்சியத்தைக் கட்டுவேன் ‘ என்று. அது போல், பீற்றர் வழி வந்த இந்த பாப்பரசரும் கிறீஸ்துவின் இராட்சியத்தைக் கட்டி ஆண்டார்.

அன்புதான் இன்ப ஊற்று, அன்பு தான் இன்ப வழி, அன்பு தான் ஒளி, அன்பு தான் உலக மகாசக்தி என்று பாடம் சொன்ன பெரியவர்கள் பலர் இந்த உலகில், தம் வழி இந்த உலகை நடத்திச் சென்றனர். இந்த பாப்பரசரர் சென்ற இடங்களிலெல்லாம், நிலத்தில் வீழ்ந்து, அந்நாட்டு மண்ணை முத்தமிட்டு, தன்னை, தனது அன்பை காட்டி நின்ற ஒரு உத்தம மனிதர் இவர். மாற்ற முடியாத ‘பாக்கின்சன் ‘ நோய் வந்த பின், நிலத்தில் வீழ்ந்து, முத்தமிட முடியாத காரணத்தால், தான் போன நாடுகளின் மண்ணை, ஒரு மண் பிரம்புக்கூடையில் கொண்டு வரச் சொல்லி, அந்த மண்ணை முத்தமிட்டு, அந்த மண்ணின் மீது, தன் ஆசீர்வாதமிட்டு, இந்த பூமியின் காலடியில் நாம் அனைவரும் ஒன்றே மாந்தர் குலம் என்று கூறித், தன் அன்பைக் கொடுத்தார். அன்பினால் உலகத்தை ஆளலாம் என்ற நல்ல தத்துவத்தை வாழ்ந்து காட்டியவர் இந்த அற்புத மனிதரே! இதனை அவர் இலங்கை சென்ற போது, எம் இலங்கை மக்களுக்கு எடுத்துக் காட்ட எண்ணிய போதும், கிறிஸ்துவர், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று தலைவர்கள் ஒன்று கூடி வந்து, அவரை வணங்கி வாழ்த்தியபோதும், புத்தமதத்துத் துறவிகள் அவரை புறக்கணித்தனர். இருப்பினும் தாம் அவர்களையும் அன்பு செய்வதாக அவர் கூறினார். அவர்களையும் சேர்த்து தனது கூட்டத்தை நிகழ்த்தினார் மானசீகமாக. அவர்களுக்காக, அவர்கள் மனமாற்றத்திற்காக வேண்டுதல் செய்தார். அதே புத்தமதத் துறவியான, Dala Lama வைச் சந்தித்தார்.

உலகில் மூன்றில் ஒரு பகுதி கத்தோலிக்க இளைஞர்களைக் கொண்டது. இந்த இளைய சமூகத்தினரிடம் அதாவது 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கட்கு, இவர் ஒருவரே பாப்பரசர். நாளைய கத்தோலிக்க சமூகம் உங்கள் கையில் என்று, அவர்களிடம் எடுத்துக் கூறாமலே, நாளைய சமூகத்தைக் கட்டிக் காக்கும் பணியில், அத்திவாரக் கற்கள், செங்கற்கள், சாந்துக் குழையல் அவர்கள் என்று அணி திரள வேண்டும் என்று இளைஞர் படை திரட்டினார் இந்த அன்புத் தந்தை உலக இளைஞர் தினத்தை அறிமுகப் படுத்தி வைத்து,. இளைஞர்களிடம் நட்பு, அன்பு, பாசம், நேசம், கருணை என்று இவர் காட்டிய போது, அவர்கள், இவரை ஒரு பொப் இசைப் பாடகர் போல் திரண்டு கொண்டனர். இவரது வழிகாட்டலில் கீழ், ஆளுமையின் கீழ், கண்காணிப்பின் கீழ், இவரைக் காணவும், இவரை முத்தமிடவும், இவர் அமர்ந்து எழுந்த நாற்காலியைத் தொட்டு உணரவும் இளைஞர் கூட்டம் அணிதிரண்டது. வேறு எந்த ஒரு நாட்டுத் தலைவனின் கீழும் இல்லாது அபார இளைஞர் படை, இந்த வயோதிபக் கிழவனின் கீழ் வரக் காரணம் என்ன ? இன்னும் கம்யூனிச நாடுகளினுள்ளும் சென்று நட்பை வளர்த்து வந்த ஒரு நல்ல நண்பன் இந்த பாப்பரசர் தான். ஒரு கம்யூனிச வாதியான Cuba தலைவர் Fidol Castro வை கத்தோலிக்க தேவாலயத்தினுள் அழைத்துச் சென்றதும் இந்த நல்ல மனிதனின் மனித நேயமுள்ள நட்புத் தான்.

இளமை நாட்களில் தான் பட்ட துன்பங்கள், தன் நாட்டின் அடிமைத் தனம், அதனால் ஒளித்து வாழ்ந்த வாழ்க்கை.. இப்படியான துன்பங்களை இளைஞர் அனுபவிக்க வேண்டியதில்லை என்னும் ஆதங்கம்..இந்த வயதான காலத்தில், தொலைந்து போன ஆடுகளைத் தேடி, நடந்து, அலைந்து திரிந்து தேடிய நல்ல ஆயனாக வலம் வந்த எம் அன்புத் தந்தை, ஒரு நல்ல நண்பனான யேசுவைப் போல், இளைய இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவர் உடுத்திய உடை, அவர் நடத்திய வழிபாடு, அவரது புரிந்துணர்வு, அரவணைப்பு, முன்மாதிரிகை என்பன இந்த வயதான மனிதனின் பின் இளைஞர்களை நடந்து வரச் செய்தன. நாம் அன்றாடம் கண்கூடும் சினிமாக்கள், மாணவர் புரட்சி பற்றி கதைகள் சொல்வது போல், ‘ஆதன்ஸ் நகர இளைஞர்களை சாக்ரட்டாஸ் அழைத்தது போல், இந்தத் தனி மனிதனின் ஆளுமை, இளைஞர்களுக்கு உற்சாகம் தந்தது. ஒரு தலைவன், தன் கூட்டத்தை வழிநடத்திச் செல்வது போல், நடத்திச் சென்றார்.

பாரதியார், தன் பாடலில், மன உறுதியையும், மனத்துணிவையும் மனிதர்கள் நெஞ்சில் நிலைநித்த இப்படிப் பாடுகிறார்.

‘ ‘நெஞ்சிற் கவலைதனை நித்தம் பயிராக்கி

அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை ‘ ‘ என்றும்;

‘ ‘மனத்தில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை ! ‘ ‘

என்றும் பாடுகிறார்.

இந்த அருட்தந்தை தனது பதவி ஏற்ற முதல் வைபவத்தின் போது, கூறிய வார்த்தைகள்… Be not affraid.

‘இரட்சிய யாத்திரிகம் ‘ பாடிய ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணபிள்ளை அவர்கள், இயேசுவைத் தொழுது

ஒரு பாடல் பாடுகிறார். அதில்

‘பின்னித் திகழ் என் பிழை அத்தனையும்

மன்னித்து இலகும்படி வாழ்வு அருள்வாய் !

என்று மன்னிப்பு வேண்டி நிற்பது பற்றி அழகாக எழுதுகிறார்.

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் இதயம் மாணிக்கக் கோவில் என்கிறது தமிழ்ப்பாடலொன்று..இதனால் தான் இந்த பாப்பரசர், தன்னை சுட்டு காயப்படுத்திய அந்த துருக்கிய நண்பனையும், 77 நாட்கள் வைத்திய ஓய்வின் பின் சிறைச்சாலை சென்று, பார்த்து, அவன் பாவங்களை மன்னித்து, அவனுக்கு நல்ல மனஸ்தாபம் வரச் செய்து, ஆசீரும் அளித்தார். அதே போன்று, யூதர்கட்கு, முன்னைய நாட்களில், கத்தோலிக்க சமூகம் செய்த தவறுகட்காக ‘செனகாட் ‘ சென்று, தன் கைப்பட மன்னிப்பு மடலும் எழுதி வைத்து வந்தார். முஸ்லிம் இன பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது நின்ற ஒரே கத்தோலிக்க பாப்பரசரும் இவரே. இதனால் முஸ்லிம் சோதரகள் இவரைத் தமது சொந்தமாக இன்று இனம் காண்கின்றனர்…

இளைஞ்ர்கள் மட்டுமின்றி, இந்த மனிதர் பின்னே, குழந்தைகளும் தொடர்ந்தனர்.

‘சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள். ‘ என்று கிறிஸ்து மொழிந்தது போல், சிறுவர்களை அணைத்து முத்தமிட்டு தன் அன்பைக் காட்டினார். இன்று அதோ Pope John Paul II என்று இவரை அடையாளங்காட்டும் இளம் சிறார்கள், இவர் தம்மை முத்தமிட்டிருக்கலாமே! ஏன் இன்னுக் கொஞ்சக் காலம் வாழ்ந்திருக்கலாமே! என்று ஏங்குகின்றனர். இவருக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது. சிறுவயது முதலே, தன் அண்ணன், மற்றும் அயல்வீட்டு யூத நண்பர்கள், கூட விளையாடி மகிழ்ந்ததில், அந்த நட்பே அவரது, இறுதிக்காலத்தும் யூதர்கள் மீது பாசம் தந்தது.

மனிதனாக வாழ்க்கை வாழ்ந்த காலத்தில், தூய வாழ்வு வாழ்ந்தவர் பாப்பரசர். தலையற்ற முண்டங்களாய் மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார். காலங்கள் மாற மாற கோலங்கள் மாறி காட்சிகளும் மாறிப் போகும் போது, :காயமே இது பொய்யடா, காற்றடைத்த வெறும் பையடா ‘ என்று அறிவு சொல்லும் பெரியவர்களின் சொற்கேட்டு நடக்கும் திறமையை இழக்கிறது சமூகம். ஆனால், சில சமயங்களில், பாப்பரசரர் சொன்ன செய்திகளைக் கூட அரசாங்கங்கள் கேட்டும் கேளாமல் இருந்திருக்கின்றன. உதாரணமாக, ஒரு பால் திருமணம், மற்றும் ஈராக் போர், கருத்தடை, கருச்சிதைவு போன்றன. இருந்தாலும் கூட இவரது அரசில் தனி இராட்சியம் நடந்தது. 172 நாடுகளின் கத்தோலிக்க சமூகத்தின் தலைவனாக இருந்து, 1லட்சம் குருமாரை வழிநடத்தி வந்த பெரும் அரசு இவரின் கீழ் இருந்தது. அதிக அர்ச்சியசிஸ்டவர்களை உருவாக்கினார். திருநிலைப்படுத்தினார். இவர், 17.6 லட்சம் மக்களைச் சந்தித்திருக்கின்றார். 1995ல் மணிலாவில் நடந்த கூட்டத்தில், ஒரே கூட்டத்தில் அதிகப் படியான மக்கள் இவரைக் காண வந்தனர். சுமார் 5லட்சம் மக்கள் பார்வையாளராக வந்தார்கள். 455 வருடங்களின் பின் ஒரு இத்தாலியரல்லாத பாப்பாண்டவராக தெரிவு செய்யப் பட்டிருக்கிறார். 264 வது பாப்பரசராக வந்திருக்கிறார். புனித பீற்றர் 34 வருடங்களும், பயஸ் ஆண்டகை 32 வருடங்களும் சேவை செய்திருக்கின்றனர். 1986ல் உலக இளைஞர் தினத்தை உருவாக்கினார். உலகில் அதிக நாட் கள் சேவை செய்த பாப்பரசர்களில் 3 வது இடத்தில் இருக்கிறார்.

இவருக்கு மிகவும் பிடித்தது, அன்னை மேரிக்கு ஆராதனை செய்வது. ஜெபமாலை சொல்வது. தாயை இழந்து, தவித்த காலங்களில், விண்ணவனின் தாயை தன் தாயாக ஏற்றுக் கொண்டார். அன்னையிடன் தன்னையும், தன் பணியையும் அர்ப்பணித்தார். பாப்பரசரர் பதவி கிட்டியதும், தனது சிவப்பு அங்கியை மாற்றி வெள்ளை உடை மாற்ற வந்த போது, தனது சிவப்பு அங்கியை அன்னை மரியாளின் பாதத்தில் காணிக்கை ஆக்கும் படி கேட்டுக் கொண்டார். அடிக்கடி தனியே இருந்த காலங்களில் அன்னை மரியிடம் தனக்கு தைரியம் தரும்படி, வேண்டுதல் செய்தார். இதே வேளை, இந்து மதக் கோவிலொன்று இல்லை என்று, இந்து மக்கள் கோரிக்கையை ஏற்று, பற்றிமா அன்னையின் தேவாலயத்தை இடித்துக் கட்டி, அதே இடத்தில் ஒரு இந்து ஆலயம் கட்டித் தந்தார். இவ்வாறே முஸ்லிம் இனத்தாருக்கும் ஒரு தொழுகை இடம் கட்டித் தந்தார்.

அன்று முதல் இன்று வரை இவர் கற்றுத் தந்த பாடங்கள் பற்பல.. ஆனால் மரணத்தில் கொடூரத்திலும் கூட அவர் பாடம் புகட்டி நின்றார். வைத்திய பீடங்கள், தனியாக நின்று வைத்திய உதவிகள் செயதன.

ஆயினும் தெய்வ சக்திக்கு முன்னால், மனித சக்தி மாயமானது என்று எண்ணினார். அதை இந்த உலகுக்கு புகட்டவே, 25 வருடங்களாகத் தான் செய்து வந்த குருத்தோலை ஞாயிறு சேவை செய்ய முடியாது போனபோது, அதுவே தன் இறுதி நாட்களின் அறிகுறி என்று அறிந்து கொண்டார். தற்போதைய காலங்களில், வயோதிபம் அடைந்து, நோய்வாய்ப்பட்டிருக்கும் வயோதிபர்கள், மரணத்தை பயமின்றி அணுக வேண்டும் என்று, எண்ணியே, தானும் அதிக வைத்திய உதவியை நாடவில்லை.

வேதனையையும், துன்பத்தையும் தானே விரும்பி ஏற்றுக் கொண்டார்.

கிறிஸ்துவின் தூதனாக அவர் முன் நடக்க, தன்னைத் தொடர்ந்து வரும்படி இளைஞர்களை அழைத்து வழிநடத்திச் சென்றவர், ‘இளைஞர்களே! பயணத்தைத் தொடருங்கள். வெற்றி உங்களதே! ‘ என்றார்.

மரணம் தனக்கு வரும் வேளை, தன் அன்புக்காகக் காத்திருந்த இளைஞர் அணி, வத்திக்கான் சென். பீற்றர்ஸ் தேவாய முன்றலில் காத்துக் கிடந்ததை அறிந்து,

‘நான் உங்களைத் தேடி வந்தேன். இன்று நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்.. என் நன்றி ‘ என்று இறுதியாக பதில் சொன்னார் என்பதை அவரது இறுதி மொழியாக வத்திக்கான், இளைஞர்க்கு மொழிபெயர்த்துச் சொன்னது.

அன்னை மேரியின் ‘அருள் நிறை மரியே! வாழ்க, கத்தர் உம்முடனே! உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் படுவதே. அர்ச். மரியாயே! சர்வேசுரன் மாதவே! பாவிகளான எங்களுக்கு, இப்போதும் எப்போதும், எம் மரணநேரத்திலும் வேண்டிக் கொள்ளும். ஆமேன்.. ‘ என்று சொல்வது போது, தன் மரண வேளையிலும் மன்றாடி, இறுதி வார்த்தையை, ‘ஆமேன் ‘ என்று உரைத்து, இம்மண்ணக்த்து உறவை விடுத்து விண்ணேகினார், எம்மால் , பாப்பா என்று அழைக்கப்பட்ட, எமது அன்புத் தந்தை..

பாப்பரசரர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர்…

இவர் கிறீஸ்து மீது கொண்ட அன்பு தான், இறை இரக்க யேசுவின் திருவிழாக்காலங்களில் இவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்டது. அர்ச்சியசிஸ்ட பவுஸ்ரீனாவுக்கு, இறாஇரக்க யேசு சொன்ன வாக்குகள் இன்று நிறைவேறும் காலமோ ?

‘போலந்திலிருந்து ஒரு வைரம் புறப்படும். அந்த வைரத்தின் மூலம் என் சித்தம் உலகில் நிறைவேறும். அந்த வைரத்தின் மரணத்தின் பின் உலகம் பரியந்தம் அழிவை எதிர் நோக்கும் ‘ என்று ஆண்டவ்ர் சொன்ன வார்தைகள் 1930ம் ஆண்டு, அப்போது, இவருக்கு 10 வயது. இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற, தாயை இழந்த இவரை, அன்னை மரியாள் வழிநடத்தினாளோ ? இன்றும் அவரது நல்லடக்கம் நடந்த அன்றே போலந்து, மற்றும் மக்கள், உட்னே அவரை அர்ச்சியசீடர் பதவி கொடுங்கள் என்று பாதைதைகளைத் தாங்கி நின்றனர்.

இவர் தேடித் தேடிச் சென்று பன்னாட்டு மக்கள், தலைவர்களைக் கண்டு, தன் அன்பைக் கூறி, ஆதரவு காட்டி, அஞ்சாதீர்கள் என்று தேற்றி வந்ததினாலோ என்னவோ, பலநாட்டுத் தலைவர்களும், பல கோடி மக்களும், இந்த உத்தமரின் இறுதி ஊர்வலம் காண அணி திரண்டு வந்தனர் வத்திக்கான் நகர் நோக்கி.

ஒரு மனிதன் உலகில் வாழ்ந்த வாழ்வின் பவுத்திரம், அவனது மரணச் சடங்கில் வந்து சேரும் மக்கள் கூட்டத்தை வைத்து கணக்கிடலாம் என்பர். இந்த மனிதர் வாழ்ந்த வாழ்வு, உலகத் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கே ஒன்று சேர்த்தது. அது மட்டுமின்றி உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் இவரை எண்ணிக் கண்ணீர் விட்டுக் கொண்டு கதறி அழுகின்றனர்.

இதோ அந்த இறுதி ஊர்வலம் தொடங்கி, நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், இவர் ஆண்டவரின் அடியானாக, உலகில் செய்த கடமைகள் முடித்து, விண்ணுலகில், வேந்தர்களில் ஊழியனாக அமர்ந்திருக்க தனியாக செல்லும் இந்த பாத யாத்திரை… தொடர்கிறது..

(கலைப்) புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி