சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

தியாகு


சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி ‘சங்கர ‘ மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்துக்குப் பதில் வீதிமன்றத்தில் வழக்கு நடத்த பாஜக தலைவர் அத்வானியும், விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலும், இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலனும், இவர்களை ஒத்தவர்களும் முனைந்துள்ளனர்.

காவல்துறையினரையும், நீதிபதிகளையும், வழக்கில் சான்றளிக்க வேண்டியவர்களையும், வழக்குரைஞர்களையும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும், எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களையும் திகைக்க வைத்துக் குழப்புவதே இந்தக் காவிக் கூட்டத்தின் நோக்கம்.

ஜெயேந்திரர் எவ்வளவு பெரிய துறவி! எவ்வளவு பெரிய ஞானி! அவர் போய் கொலை செய்வாரா ? சதி செய்வாரா ? தடயங்களை அழிப்பாரா ? இந்தக் கேள்விகள் நேரடியாகவும் சுற்றடியாகவும் எழுப்பப்படுகின்றன. இவர் இப்படியெல்லாம் குற்றம் புரியக் கூடியவர் என்று நினைப்பதே பாவம் என்ற எண்ணம் உண்டாக்கப்படுகிறது. ஜெயேந்திரரின் புகழைப் பரப்பக் காஞ்சி மடமே நாளேடுகளில் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள் கொடுக்கிறது – இதற்காகப் பெருந்தொகை செலவிடுகிறது.

பரப்புரைப் பேரொளியில் நம் கண்களைக் கூசச் செய்து உண்மைகளைக் காண விடாமல் குழப்பும் இந்த முயற்சியின் இன்னொரு முனை – காஞ்சி மடத்தின் பெருமை பேசுவது!

காஞ்சி மடம் 2500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று சொல்லிக் கொள்கிறார்கள். 2000 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்தது என்றும் சில நேரம் சொல்கிறார்கள். எப்படியும் அது தொன்மை மிக்கது என்று காட்ட விரும்புகிறார்கள்.

காஞ்சி மடத்தைச் சங்கர மடம் என்கிறார்கள். இது ஆதி சங்கரராலேயே நிறுவப்பட்டது என்றும் உரிமை கொண்டாடுகிறார்கள். இந்தப் பரப்புரைகளில் ஒரு முரண்பாடு இருப்பதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை – ஆதிசங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அதாவது சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் நிறுவிய மடம் எப்படி 2,500 அல்லது 2,000 ஆண்டுப் பழமை வாய்ந்ததாக இருக்க முடியும் ?

காஞ்சி மடம் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்றால் அது ஆதிசங்கரரால் நிறுவப்பட்டிருக்க முடியாது. ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது என்றால் 2,000 ஆண்டு என்ன, 1,500 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகக் கூட இருக்க முடியாது.

காஞ்சி மடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதல்ல; 2000-2500 ஆண்டுப் பழமை வாய்ந்ததும் அல்ல என்பதே உண்மை.

வைதிக மதத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய ஆன்மிக ஞானியாக ஆதிசங்கரர் போற்றப்படுகிறார். குறுகிய ஆயுள் காலமான 32 வயதுக்குள் இந்தியத் துணைக் கண்டமெங்கும் ‘சஞ்சாரம் ‘ செய்து வேதத்தை எதிர்த்தவர்களை வாதத்தால் வென்று வைதிகத்துக்குப் புத்துயிர் அளித்த ஆதிசங்கரர் நான்குத் திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவி, ‘ஆம்னாய பீடங்கள் ‘ என்ற பெயரில் அவற்றை ‘பிரதிஷ்டை ‘ செய்தார் (அதாவது புனிதப்படுத்தினார்).

‘ஆம்னாயம் ‘ என்றால் வேதம். வேதங்கள் நான்கு! திசைகளும் நான்கு! ஆதிசங்கரரின் தலைமைச் சீடர்களும் நால்வர்!

ரிக் வேதத்தைக் கொண்டு கிழக்குத் திசையில் ஜெகன்னாத் பூரியில் கோவர்த்தன பீடம் – அதாவது பூரி மடம். இந்த மடத்துக்குத் தலைவராக ஆதிசங்கரர் தன் சீடரான ஹஸ்தாமலகர் என்பவரை நியமித்தார். சங்கர மடத் தலைவர் என்பதாலேயே அவர் ‘ஜகத்குரு ‘ எனப்பட்டார்.

யஜுர் வேதத்தைக் கொண்டு தெற்குத் திசையில் சிருங்கேரியில் சாரதா பீடம் – அதாவது சிருங்கேரி மடம். இந்த மடத்துக்கு ஆதிசங்கரர் தன் சீடரான சுரேஸ்வர் என்பவரை ‘ஜகத்குரு ‘வாக நியமித்தார்.

சாம வேதத்தைக் கொண்டு மேற்குத் திசையில் துவாரகையில் காளி பீடத்தை நிறுவி, பத்மபாதர் என்பவரை ‘ஜகத்குரு ‘ ஆக்கினார்.

அதர்வண வேதத்தைக் கொண்டு வடக்குத் திசையில் பத்ரிநாத்தில் ஜ்யோதிர் மடத்தை நிறுவி தோடகர் (ஆனந்தகிரி) என்பவரை ‘ஜகத்குரு ‘ ஆக்கினார்.

இந்த நான்கு ஆம்னாய பீடங்களின் அதிபதிகளாகப் பொறுப்பேற்கும் துறவிகளுக்கு மட்டுமே ‘ஜகத்குரு ‘ என்னும் ‘பிருது ‘(பட்டப்பெயர்) உண்டு.

ஆதிசங்கரரே நிறுவிய இந்தச் சங்கர மடங்களின் வரலாற்றுக்குச் சான்றாக இருப்பது ‘மடாம்னாய ஸ்தோத்திரம் ‘. இது பழமையான ஏட்டுப் பிரதி வடிவில் பூரி, துவாரகை, காசி, சிருங்கேரி ஆகிய திருத்தலங்களில் பாதுகாக்கப்படுகிறது. அண்மைக் காலத்தில் அச்சுப் படிகளாகவும் வந்துள்ளது.

காஞ்சி மடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதன்று என்பதால், அம்மடத்தின் தலைவருக்கு ‘ஜகத்குரு ‘ என்ற பட்டம் பொருந்தாது. ஆக, பெரியவர் ஜெயேந்திரர் ஜகத்குரு அல்லர். பால பெரியவர் விஜயேந்திரரும் ஜகத்குரு அல்லர். நூறாண்டு வாழ்ந்து மறைந்த மகாப் பெரியவரும் கூட ஜகத்குரு அல்லர்.

காஞ்சி மடமும் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டது என்றால், மொத்தம் ஐந்து மடங்களாகின்றன. மற்ற மூன்று திசைகளுக்கும் மூன்று மடங்களே. தென்திசைக்கு மட்டும் இரு மடங்களா ? சிருங்கேரி, காஞ்சி இரண்டில் எது அசல், எது நகல் ? இந்தச் சர்ச்சை குறித்து ‘அனைத்திந்திய சங்கரபகவத்பாத சிஷ்யர்கள் ‘ ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். புத்தகத்தின் தலைப்பு: தட்சிணாம்நாய பீடம் சிருங்கேரியா ? காஞ்சியா ? தட்சிணம் என்றால் தெற்கு. ஆம்நாயம் என்றால் வேதம். தென்திசைக்கான வேத மடம் எது ? சிருங்கேரியா ? காஞ்சியா ? சிருங்கேரிதான், காஞ்சியல்ல என்று இப்புத்தகத்தை எழுதியவர்கள் ஆதாரங்களுடன் அடித்துச் சொல்கிறார்கள்.

இந்தச் சர்ச்சை குறித்து நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடரப்பட்டது. தீர்ப்புகளும் தரப்பட்டன. 1936 நவம்பர் 19ஆம் நாள் பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ‘ஆதிசங்கரர் தோற்றுவித்தவை நான்கு மடங்களே, காஞ்சி மடம் அவற்றில் ஒன்றல்ல ‘ என்று தெளிவுப்படுத்தியது.

பம்பாய் உயர் நீதிமன்றம் ஒரு முறை இந்தச் சிக்கல் குறித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களை (பத்ரிநாத், சிருங்கேரி, துவாரகை, பூரி) எடுத்துக்காட்டியதோடு, சங்கராச்சாரியார் என்ற பெயர் ஆதிசங்கரருக்கு மட்டுமே என்றும் கூறியது. அவர் மறைந்த பின் அவரைப் பின்பற்றியவர்களில் சிலர் தங்களை ஆதிசங்கரரின் அவதாரமாகக் கருதி, சங்கராச்சாரியார் என்று அழைத்துக் கொண்டனராம். ஆதிசங்கரரின் உபதேசங்களைப் பரப்புவதற்காகவும், அவரை கெளரவிப்பதற்காகவும் பிற்காலத்தில் நிறுவப்பட்ட புதிய மடங்கள் தங்களையும் சங்கர மடங்கள் என்று சொல்லிக் கொண்டனவாம்.

காஞ்சி மடம் இப்படித்தான் பிறந்தது. அது தன் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக ‘ஆதிசங்கரரே தோற்றுவித்த மடம் ‘ என்று சொல்லிக் கொண்டது. இந்தப் பொய்யை மெய்யாக்குவதற்கு வரலாற்றையே திருத்தி மோசடி செய்தது.

காஞ்சி மடம் மூலச் சிறப்புள்ள சங்கர மடமும் அல்ல, ஜெயேந்திரர் சங்கராச்சாரியாரும் அல்லர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

1972இல் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் ஆதிசங்கரர் நான்குத் திசையிலும் நிறுவிய நான்கு மடங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் காஞ்சிக்கு இடமில்லை.

ஆதிசங்கரர் தோற்றுவித்த மடங்கள் நான்குதான் என ‘என்சைக்ளோபிடியா பிரித்தானிகா ‘வும் உறுதி செய்கிறது.

காஞ்சி மடம் ஆதிசங்கரர் தோற்றுவித்ததல்ல என்பதையும், அம்மடத்தின் பற்பல மோசடிகளையும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ‘சங்கராச்சாரி-யார் ? ‘ என்ற தொடர் சொற்பொழிவுகளில் தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். இது நூல் வடிவிலும் வந்துள்ளது.

காஞ்சி மடம் 2000-2500 ஆண்டுப் பழமை வாய்ந்த மடம் என்றே வைத்துக் கொண்டாலும், அது – கிறிஸ்துநாதர் பிறப்பதற்கு முன்பே – ஆதிசங்கரரால் – கிறித்துவுக்குப் பின் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரரால் – தோற்றுவிக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அம்மடத்தின் அதிபதி சட்டத்துக்கு அப்பாற்பட்டவராய் இருக்க முடியாது.

ஜெயேந்திரர் கைது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவரைச் சந்தித்த பாஜக தலைவர்கள் வாஜ்பேயியும் அத்வானியும் ‘மதத் தலைவர்களைக் கைது செய்வது, சிறை வைப்பது தொடர்பாகத் தனிச் சட்டம் தேவை ‘ என்று கேட்டார்களாம். பையிலிருந்து பூனை வெளியே குதிப்பது போல், இவர்களின் மனுதர்மப் புத்தி வெளியே வந்து விட்டது. பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பிந்தரன்வாலேயும் ஒரு மதத் தலைவர்தான்! கேரளத்தில் கைது செய்யப்பட்டுக் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானியும் ஒரு மதத் தலைவர்தான்! இவர்களுக்கெல்லாம் தேவைப்படாத தனிச்சட்டம் காஞ்சி மடத் தலைவருக்கு மட்டும் தேவைப்படுவது ஏன் ? ‘சட்டத்தின் முன் அவைரும் சமம் ‘ என்பதை வாஜ்பேயி-அத்வானி-சிங்கால்-தொகாடியா வகையறாக்களின் உள்ளம் ஏற்க மறுக்கிறது.

மடத்தின் மகிமையும் பெருமையும்( ?) ஒரு புறமிருக்க, மடாதிபதி ஜெயேந்திரர் எப்படிப்பட்டவர் ? அவர் எந்தளவுக்குப் ‘பெரியவர் ‘ ?

காஞ்சி மடத்தின் 68ஆவது பட்டம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ( ‘மகாப் பெரியவர் ‘ எனப்படுபவர்) 69ஆவது பட்டமாக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ( ‘பெரியவர் ‘) நியமித்தார். 1983இலேயே இவ்விருவருக்குள் மனக் கசப்பு வந்து விட்டது. ‘மகாப் பெரியவர் ‘ 13 வயதுச் சிறுவன் சங்கரனுக்கு விஜயேந்திர சரஸ்வதி என்று பெயர் மாற்றி 70ஆவது பட்டமாக நியமித்தார். ஒரே மடத்துக்கு ஒரே நேரத்தில் 3 சங்கராச்சாரியார்கள் என்பது வேறு எங்கும் முன் எப்போதும் காணாத வேடிக்கை!

1987 ஆகஸ்டு 22 இரவில் ஜெயேந்திரர் தன் தண்டத்தை (கையில் வைத்திருக்கும் நீண்ட குச்சி) கைவிட்டு மடத்திலிருந்து காணாமல் போய் விட்டார். மூன்று நாள் கழித்து, ஆகஸ்டு 25இல் பரமாச்சாரியார் ( ‘மகாப் பெரியவர்) விஜயேந்திரரை மடத்துக்குத் தலைவராக்கி விட்டார். காணாமல் போய் தலைக் காவிரி அருகே கண்டுபிடிக்கப்பட்ட ஜெயேந்திரர் 17 நாள் கழித்துத் திரும்பி வந்தார். ஏதோ சமரசம் நடந்து அந்தக் கதை முடிந்தது.

1994இல் ‘மகாப் பெரியவர் ‘ மறைந்த போது, காஞ்சி மடத்துக்கு இரண்டு தலைவர்கள் இருந்தனர் – ‘பெரியவர் ‘ ஜெயேந்திரரும், ‘பால பெரியவர் ‘ விஜயேந்திரரும்!

காஞ்சி மடமும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதன்று, ஜெயேந்திரர் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரும் அல்லர்! சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவரும் அல்லர்! மடத்தையும் மடாதிபதியையும் புனிதப் பசுக்களாகக் காட்டும் முயற்சி – சட்டத்தின் கண்ணிலும் மக்கள் கண்ணிலும் மண்ணைத் தூவும் முயற்சியே தவிர வேறல்ல! இம்முயற்சி குறித்துச் சட்டமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

—-

(ஆசிரியரின் அனுமதியுடன் நா திருப்பதிசாமி அனுப்பியது)

Series Navigation

தியாகு

தியாகு