மணவை முஸ்தபாவின் கண்டுபிடிப்பு: ஆதாமும் ஏவாளும் பச்சைத் தமிழர்கள்

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

மஞ்சுளா நவநீதன்


தமிழ் நாட்டைச் சேர்ந்த சேஷன் தான் சேசுவாகி பின்னர் ஏசுவானார். ஆதியே ஆதாம். ஆதி தன் மனைவியை ‘இவளே ‘ என்றழைப்பார். இது தான் மருவி ‘ஏவாள் ‘ ஆகிவிட்டது. யூதர்களின் புனிதப் புத்தகமான ‘தல்முட் ‘ உண்மையில் ‘தமிழமுது ‘ ஆகும். இதுதான் மருவி ‘தல்மூட் ‘ ஆகிவிட்டது..

தமிழ் நாட்டில் இது மாதிரி உளறிக் கொட்டினால் அறிஞரும் ஆகிவிடலாம். ‘தினமணி ‘ போன்ற பெருமை மிக்க பத்திரிகைகளில் மையப் பக்கத்தில் இடமும் பிடிக்கலாம். பைத்தியக் காரனைச் சுற்றிப் பத்து பேர் என்பது தமிழ் பழமொழியாயிற்றே.

*****

சமீபத்தில் தினமணியில் ஒரே நாளில் (செப்டம்பர் 18, 2002) இரண்டு கட்டுரைகளை படிக்க நேர்ந்தது.

முதல் கட்டுரை மலையமான் எழுதிய ‘முனை முறியாத மூட நம்பிக்கை ‘. இதில் அருமையாக தமிழ்நாட்டில் இருக்கும் மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவியற்பூர்வமான சிந்தனை எப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு வரும் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். இதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். அறிவியற் பூர்வமான சிந்தனை தமிழ்நாட்டில் பரவ பத்திரிக்கைகளும் ஒத்துழைக்க வேண்டும். பருவ மழை பொய்த்த காரணம் என்ன என்பதைப் பற்றியும், ஏன் சுற்றுச்சூழல் நசிவு ஏற்படுகிறது என்பதைப் பற்றியும், காடுகள் அழிவதின் நீண்டகால பாதிப்புப் பற்றியும், ஏரிகள் அரசியல்வாதிகளால் கைப்பற்றப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்பு பற்றியும் தமிழ்ப் பத்திரிக்கைகள் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு மக்களிடையே அறிவியல் அறிவைப் பரப்பியிருந்தால், பல மூட நம்பிக்கைகளுக்கு விளைநிலமாக தமிழ்நாடு ஆகியிருக்காது. நம் பத்திரிக்கைகளோ, நடிகைகளின் இடுப்பு அளவைத் தாண்டி வெளியே செல்வதில்லை. என்ன செய்வது. ?

அடுத்த கட்டுரை, மணவை முஸ்தபா எழுதிய ‘தாய் மொழி போற்றும் இஸ்லாம் ‘ என்ற கட்டுரை.

மணவை முஸ்தபா யுனெஸ்கோ கூரியர் என்ற உலகளாவிய ஐக்கியநாடுகள் பத்திரிக்கையின் தமிழ் வெளியீடு ஆசிரியராக வெகுகாலம் இருந்தவர். யுனெஸ்கோ கூரியர் உண்மையிலேயே சிறப்பான இதழ். தமிழில் வந்த இதழ்களிலேயே தரமான இதழாக இருந்தது. தமிழர்களுக்கு பல கலாச்சார ஜன்னல்களைத் திறக்கவும் துணை செய்தது.. (இன்னும் வருகிறதா, அதன் ஆசிரியராக மணவை முஸ்தபா இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது)

இவர் எழுதிய கட்டுரையில், கீழ்க்கண்ட வரிகள் காணப்படுகின்றன.

‘முதல் மனிதரும் முதல் நபியுமானா ஆதம் (அலை) தோன்றியது ‘லெமூரியாக் கண்டம் ‘ என்றழைக்கப்படும் குமரிக்கண்டமாகும் என்பது ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும்.. இலங்கையில் ஆதம் மலை( ஆடம் மெளண்ட்) இருப்பது, அவரின் இரு ஆண் மக்களின் அடக்கத்தலம் இராமேஸ்வரம் இரயில் நிலையத்தின் எதிரேயுள்ள காட்டுப்பகுதியில் இன்றும் காணப்படுவதும் இதற்குச் சான்றாகும். எனவே, ஆதம் (அலை) அவர்களும் அவர்தம் சந்ததியினரும் தமிழ் மொழியே பேசியிருக்க வேண்டும். தமிழிலேயே இறைச் செய்தி ஆதமுக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்ற இரு கருத்து ஆய்வாளர்களால் வலுவாக நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது ‘

மணவை முஸ்தபா குறிப்பிடும் இந்த ஆய்வாளர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அதுவும் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து வேறு. மாறுபாடே இல்லாமல் ஒருமித்த கருத்துக் கொண்ட இந்த ஆய்வாளர்கள் யார் ?

ஆதாம் ஏவாள் கதை மூட நம்பிக்கை இல்லையா ? இன்று அறிவியல் ஆதாம் ஏவாள் கதையை ஒப்புக்கொள்கிறதா ? அறிவியற்பூர்வமாக ஆதாம் ஏவாள் கதை மறுக்கப்பட்டுவிட்டது என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

உலகில் உள்ள ஒவ்வொரு இனக்குழுவும் உலகம் எப்படித் தோன்றியது என்பதற்கும், உலகின் முதல் மனிதர்களிடமிருந்து தாங்களே தோன்றினார்கள் என்பதற்கும் ஆதாரமாகப் பல புராணக் கதைகளைக் கூறுகிறார்கள்.

யூதர்கள் என்ற பழங்குடியினரின் பூமி தோன்றிய கதை தான் பழைய ஏற்பாட்டில் உள்ளது.

இது போல, ஒவ்வொரு பழங்குடியினரும் ஒரு கதையைச் சொல்கிறார்கள். எஸ்கிமோ பழங்குடியினர் ஒரு கதை சொல்கிறார்கள். ஆப்பிரிக்கப் பழங்குடியினர் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். தென் அமெரிக்காவின் இன்கா பழங்குடியினர் 4 ஜோடி சகோதர சகோதரிகளை விராக்கோசா என்ற தலையாய கடவுள் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது. அதிலிருந்து காற்றும், தண்ணீரும், திடப்பொருளும் உருவாயின. இதன் மீது பேரண்ட முட்டை மிதந்தது. அதிலிரிந்து பூமியும் வானமும் தோன்றின. இரண்டும் சேர்ந்து சூர்யன், சந்திரன் நட்சத்திரன் ஆகியவை தோன்றின என்பது கிரேக்க தோற்றக் கதை.

வட அமெரிக்காவில் வாழும் நவஹோ Navajo பழங்குடியினரின் கதை பார்ப்போமா ? ஆரம்பத்தில் புனிதமான மக்கள் இருந்தார்கள். அவர்கள் 12 கீழ் உலகங்களில் வசித்து வந்தார்கள். பெரும் வெள்ளம் வந்ததில் அவர்கள் பூமிக்கு மேலே வரும்படி ஆயிற்று. மேலே வந்து இந்த பூமியை உருவாக்கினார்கள். மாறும் பெண் தைரியமான இரட்டைப் பிள்ளைகளுக்குத் தாயானாள். இவர்களது பெயர்கள் ‘பூதம் கொல்பவன் ‘, ‘தண்ணீரின் மகன் ‘ இவர்கள் பல வீரசாகசங்கள் செய்தார்கள். இவர்களே பூமியில் வாழும் மக்களைப் படைத்தார்கள். முதல் ஆண் வெள்ளைச் சோளத்தின் கதிரிலிருந்து பிறந்தான். முதல் பெண் மஞ்சள் சோளத்தின் கதிரிலிருந்து பிறந்தாள். (சோளக் கதிர்கள் அமெரிக்கப் பூர்வகுடிகளின் முக்கியமான பயிர்.)

அலாஸ்காவில் வாழும் டிலிங்கிட் மக்கள் காகம் தான் முதல் மக்களை உருவாக்கியது என்று நம்புகிறார்கள். ஏன் அத்தோடு சந்திரன், சூரியன் பூமி, நட்சத்திரங்கள் அனைத்தையும் உருவாக்கியது காகமே என்று நம்புகிறார்கள்.

ஆதாம் ஏவாள் கதையோடு மேற்கண்ட கதைகளையும் உண்மையென்று நம்ப என்ன பிரச்னை ? வேண்டுமென்றால், நவஹோ பழங்குடியினர் குறிப்பிடும் அந்த 12 புனிதர்களில் இருவர் இராமேஸ்வரம் இரயில் நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள காட்டில் புதைக்கப்பட்டிருப்பதாக சொல்லலாம்.

தினமணி, இது அறிவியலுக்குப் பொருந்தாதது, நிரூபிக்கப்பட்ட பரிணாம அறிவியலின் படி, இது சரியல்ல என்று மணவை முஸ்தபா கட்டுரையை – அல்லது அந்தக் கட்டுரையில் உள்ள இந்தப் பகுதியை – பிரசுரம் செய்ய மறுத்திருக்க வேண்டும்.

***

ஆதாம் ஏவாள் கதையைவிட உண்மைக்கு மிக அருகில் இருப்பது விராக்கோசா கடவுள் உருவாக்கிய 4 ஜோடி சகோதர சகோதரிகள் கதை. நமது மூதாதையர்கள் ஒருவர் அல்ல. பலர். நமது உடலில் இருக்கும் டி.என்.ஏவில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் பல ஆதாம் அல்லது பல ஏவாள்கள் இருக்கிறார்கள்.

***

யூதர்களது புனிதப்புத்தகத்தில் வரும் கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தது, கடவுள் சொன்ன கட்டளையைக் கேட்காமல் பாவம் செய்ததால், ஏடன் தோட்டத்திலிருந்து அவர்களைத் துரத்தியதெல்லாம் யூதர்கள் என்ற பழங்குடியினர்களின் தோற்றக்கதைகள். அவர்களது தோற்றக்கதைகளை நான் மதிக்கிறேன். அவர்களது நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஒப்புக்கொள்ளும் கிரிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பிறரும் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை மதிக்கிறேன். ஆனால், அது அறிவியற்பூர்வமானது அல்ல என்பதை நான் வலியுறுத்திச் சொல்லவேண்டும்.

நம்பிக்கைகள், அவை நம்பிக்கைகள் என்பதாலேயே மதிக்கப் பட வேண்டியவை. நான் பின்பற்ற வேண்டும் என்று எவரும் என்னை வற்புறுத்தாத வரையில் எந்த நம்பிக்கையையும், எவரும் கொண்டிருப்பதில் பிரசினை இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று ஒரு குழு நம்பலாம். சஞ்சீவி மலையை அனுமன் சுமந்து பறந்து சென்றதாய் ஒரு குழு நம்பலாம். தம்முடைய புனிதப் புத்தகம் கடவுளால் அருளப் பட்டது என்று ஒரு குழு நம்பலாம். பூமி தட்டையானது என்று வேறு சிலர் நம்பலாம். சோதிடத்தில் சிலர் நம்பிக்கை வைக்கலாம். பேய் பிசாசு என்று வேறு சிலர் நம்பலாம். நம்பிக்கைகள் நம்பிக்கைகளாக மட்டும் இருக்கும் வரையில் யாருக்குமே அதில் பிரசினை இல்லை . இருக்கவும் கூடாது. அது சரி , தவறுக்கு அப்பாற்பட்ட , பொய், உண்மை க்கு அப்பாற்பட்ட நம்பிக்கை , மத நம்பிக்கையகவும், இனக் குழுக்களின் நம்பிக்கையாகவும், புராணங்களாகவும், ?தல புராணக்களாகவும், ஐதீகங்களாகவும் புழங்கி வருகின்றன. சொல்லப் போனால் இப்படிப்பட்ட கற்பனைத் திறன் வாய்ந்த புராணக் கதைகள் தாம் மனித இனத்தை மனித இனமாய் வைத்திருக்கின்றன.

ஆனால் விஞ்ஞான பூர்வமாய் என் நம்பிக்கை நிரூபிக்கப் பட்டுவிட்டது என்று ஒருவர் சொன்னால், அது முற்றிலும் வேறு தளத்திற்குப் போய் விடுகிறது. இந்தத் தளத்திற்கு ஒரு கருத்து வந்தவுடன் ‘ இது என் நம்பிக்கை ‘ என்ற பாதுகாப்பு வளையத்திலிருந்து அந்தக் கருத்து வெளியே வந்து விடுகிறது. இந்தப் பொது வட்டத்தில் அது அறிவியலின் தர்க்கத்தை ஏற்றாக வேண்டும். அப்படி ஒரு அறிவியல் வட்டத்தில் ஒரு கருத்தை வைக்கும் போது அது அறிவியல் பூர்வமான நிரூபண விதிகளுக்கு இணங்காவிடில் தூக்கிப் போட்டு விடுவேன் என்பது அப்படி நம்பிக்கைகளை விஞ்ஞான பூர்வமாய் உரசிப் பார்ப்பவர்களின் நடைமுறையாய் இருத்தல் வேண்டும். அப்படி ஏற்காவிடில் அது தூக்கியெறியப்படும் – பட வேண்டும். ஆராய்ச்சி விதிகளுக்கும், அதன் நடைமுறைகளுக்கும் அது ஆட்பட்டாக வேண்டும்.

அடிப்படையான பல அறிவியல் கருதுகோள்களும், பரிணாமத் தத்துவத்தைத் தான் நிரூபிக்கின்றன. எலட்க்ரானிக்ஸ் என்னும் மின்னணுவியலின் அடிப்படைக் கதிரியக்கம். அதுவே எக்ஸ்-ரேயாகவும், அணுசக்தி-மின்சார நிலையங்களாகவும் நமக்குப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த கதிரியக்கத்தின் மூலமாகத்தான் உலகம் எவ்வளவு காலம் பழையது என்பதை ஆராயவும் முடிகிறது. அதே மூலக்கூறு அறிவியலின் மூலமாகத்தான் நம் டி.என்.ஏவில் இருக்கும் மூலக்கூறுகளை ஆராயவும் முடிகிறது. அதே மூலக்கூறு அறிவியலின் மூலமாகத்தான் நமது டி.என்.ஏவுக்கு குரங்குகள், அரிசி போன்றவைக்கு இருக்கும் டி.என்.ஏவுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராயவும் முடிகிறது. அதனால்தான், ஒரு எலிக்கு கொடுத்து பரிசோதிக்கப் படும் மருந்து மனிதனுக்கும் உபயோகமாகிறது. அதே கோட்பாடுதான், நமது மூதாதையர்கள் 12 புனிதர்கள் இல்லையென்றும், முதல் ஆண் வெள்ளைச் சோளத்திலிருந்தும், பெண் மஞ்சள் சோளத்திடமிருந்தும் வரவில்லை என்றும், நம் மூதாதையர்களின் வம்சாவளி குரங்கு வழியாக அமீபா வரைச் செல்கிறது என்றும் நிரூபிக்க உதவுகிறது. நம் அறிவியலின் பயனாக தொலைக்காட்சியை ஒப்புக்கொள்வேன், அணுசக்தி மின்சார நிலையங்களை ஒப்புக்கொள்வேன், ஆனால் பரிணாமத்தத்துவத்தை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றால் என்ன செய்வது ? ஏனெனில் தொலைக்காட்சி என்று ஒன்றுமே கிடையாது, அணுசக்தி மின்சாரநிலையங்கள் என்பது கற்பனை சமாச்சாரம் என்று சொன்னால், சொல்பவனைப் பார்த்து நகைப்பார்கள். ஆனால், அதே அறிவியலான பரிணாமத்தத்துவம் பொய் என்று சொல்லும் மணவை மு ?தபாவுக்கு தினமணி ஒரு பக்கம் இடம் கொடுத்து கட்டுரை வெளியிடுகிறது. இதுதான் அறிவியலுக்கு தினமணி செய்யும் சேவை.

இன்று கதிரியக்கத்தின் துணை கொண்டு தேதி நிர்ணயம் செய்யும் அறிவியல் வழி கிடைக்கிறது. ஆதாமின் மக்கள் புதைக்கப் பட்ட இடத்தைத் தோண்டியெடுத்து காலக் கணக்கீடு (Carbon Dating) செய்து பார்க்கலாம். பிரசினை தீர்ந்துவிடும்.

ஒரு புறம் அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளை திட்டிய கட்டுரையை வெளியிட்டுவிட்டு, இன்னொரு புறம், மூட நம்பிக்கையை அறிவியல் போல வெளியிடும் தினமணி என்ன சொல்ல வருகிறது ? இது போன்றதொரு கட்டுரை நியூயார்க் டைம்ஸ் இதழிலோ, அல்லது பிபிஸியிலோ வெளிவருமா ? பத்திரிக்கைகளுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. அதுவும் ஏராளமான பொதுமக்கள் படிக்கும் தினமணி போன்ற செய்திப் பத்திரிக்கைகளுக்கு.

அறிவியலை முதன்மைப் படுத்துவது. எளிய மொழியில் அறிவியலை மொழிபெயர்த்து, அதன் சாரத்தை மக்கள் அறிந்து கொள்ளக் கொடுக்க வேண்டியது பத்திரிகைகளின் வேலை. அப்படிச் செய்யாவிட்டாலும் இப்படிப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்ப உதவி செய்யாமலாவது இருக்க வேண்டும்.

*****

இப்படிப் பட்ட அபத்தங்களை வெகுஜன தமிழகம் கேள்வி கேட்காமல் சுவீகரித்துக்கொண்டுள்ளது. ‘முதல் பாவம் ‘ என்ற படம் எடுக்கப்பட்டு பல காரணங்களுக்காக ஓடியது அது முற்றிலும் அறிவியலுக்கு மாறானது. அது கேள்வி கேட்கப்படவே இல்லை. பாபா படத்தில் மந்திரங்கள் வாங்கிக்கொண்டு வருவது அரசியல் காரணமாகக் கேள்வி கேட்கப்படுகிறது. (இது சரிதான்). விட்டலாச்சார்யா படங்கள் ஆபத்தற்ற அபத்தங்கள். அடிக்கடி ஜெயமாலினி நடனமாடும் ஃபாண்டஸி வகையறா. வில்லோ என்ற ஆங்கிலப்படம் இது வல்ட் டிஸ்னி படங்கள் போன்ற ஃபாண்டஸி வகையறா. அதில் பிரச்னை இல்லை. அது உண்மை என்று யாரும் நம்புவதும் இல்லை. படிக்காதவர்கள், சிறுவர்கள் ஒருவேளை நம்பலாம். ஆனால் அவர்களும் அதிலிருந்து விடுபட்டு விடுவார்கள் . ஆனால், படித்த பெரியவர்களே ஒப்புக்கொள்ளும் முதல் பாவம் , ஆதாம் ஏவாள் போன்ற அறிவியலுக்கு எதிரான அபத்தங்கள் ஆபத்தானவை. இது பற்றிய நம்பிக்கையை தயவு செய்து விஞ்ஞானமாக மாற்றிவிட வேண்டாம் என்பது நம் எல்லோருடைய கோரிக்கையாக இருக்க வேண்டும்.

*****

ஒரு புறம் அறிவு நம்பி, சுஜாதா, விஜயராகவன், கலைக் கோவன், ஜெயபாரதன் , மலையமான் என்று பலரும் விஞ்ஞானப் பார்வைகளை விளக்கும் கட்டுரைகளை மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முஸ்தபாக்கள் எதிர்த் திசையில் அஞ்ஞானத்தை விஞ்ஞானம் என்ற பெயரில் விற்பனை செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது ?

*****

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்