முள்பாதை 38

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

சில்லென்ற மாலை வேளையில் வெண்மை நிற நூலாடைகளை அணிவது எனக்குப் பிடிக்கும். அதனால் பெயிண்டிங் செய்யப்பட்ட வெள்ளை நிற ஆர்கண்டி புடவையை உடுத்திக் கொண்டேன். “நான் ரெடி.” முன் அறைக்கு வந்து கொண்டே சொன்னேன். சித்திபாட்டி இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
கிருஷ்ணன் பேப்பரை பக்கதில் வைத்துவிட்டு காபி டம்ளரை வாங்கிக் கொண்டான். அவன் கண்கள் என்னை, என் அலங்காரத்தைக் கூர்ந்து கவனிப்பது என் பார்வையிலிருந்து தப்பவில்லை. அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்குத் தெரியும். எதிரே இருப்பவளின் அழகை தலை முதல் கால் வரையில் பரிசீலிக்கும் பார்வை அது. சாரதியும் சில சமயம் என்னை இந்த விதமாக பார்த்தது உண்டு. ஆனால் அவனுடைய பார்வையைப் போல் கிருஷ்ணனின் பார்வை என்னை சங்கடப் படுத்தவில்லை. கிளுகிளுப்பு மூட்டுவது போல் இருந்தது. இன்னும் கொஞ்சம் நளினமாக, ஒய்யாரமாக நிற்க வேண்டும் என்று தோன்றியது.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்றேன் அதட்டுவது போல்.
“உன் புடவை ரொம்ப அழகாக இருக்கு” என்றான் காபியைக் குடித்துக் கொண்டே.
என் மனம் ஒரு நிமிடம் ஏமாற்றமடைந்தது. “புடவைகளைப் பார்க்கணும் என்றால் அடுத்த முறை சென்னைக்கு வரும்போது சொல்லு. பாண்டி பஜாருக்கு அழைத்துப்போகிறேன். அங்கே அழகான புடவைகளை பொம்மைகளுக்குக் கட்டி வைப்பார்கள். ஆசை தீர பார்த்துக்கொள்.” வெடுக்கென்று சொன்னேன்.
கிருஷ்ணன் பக்கென்று சிரித்துவிட்டான்.
“இதில் சிரிக்க என்ன இருக்கு?”
“ஒன்றுமில்லை. நான் டாக்ஸியை அழைத்து வருகிறேன்.” காபி டம்ளரை கீழே வைத்துவிட்டு வெளியே போய்விட்டான்.
பத்து நிமிடங்கள் கழித்து டாக்ஸியுடன் வந்தான். நான் போய் டாக்ஸியில் அமர்ந்து கொண்டேன். கிருஷ்ணன் என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு “கிளம்பலாம்” என்றான் டாக்ஸிகாரனிடம்.
“சூட்கேஸ்களை எடுத்துக் கொள்ளவில்லையே?” வியப்புடன் கேட்டேன்.
“நாம் இப்போ ஊருக்குப் போகவில்லை.”
“பின்னே எங்கே போகிறோம்?”
“பெரிய கோவிலுக்கு.”
பிரமிப்புடன் அவன் பக்கம் பார்த்தேன்.
“அபூர்வமாக வந்திருக்கும் மாமன் மகள் இல்லையா? ஆசைப்பட்ட இடத்திற்கு அழைத்துப் போகவில்லை என்றால் எப்படி?”
அவன் பார்வையில் என்ன மகிமை இருந்ததோ தெரியவில்லை. அவன் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. கிருஷ்ணனிடம் படிப்பு இல்லை. பணம் இல்லை. ஆனால் உலகத்திலேயே எந்தக் கல்லூரியும் கற்றுத் தர முடியாத உயர்ந்த பண்பு இருந்தது. எதிராளியை நட்பு என்ற கயிற்றில் கட்டிப்போடும் சரளம் இருந்தது. டாக்ஸி பெரிய கோவில் முன்னால் போய் நின்றது. கீழே இறங்கிய பிறகு கிருஷ்ணன் அர்ச்சனைத் தட்டை வாங்கி வந்தான். “இப்படிக் கொடு. நான் பிடித்துக் கொள்கிறேன்” என்றேன்.
அவன் ஆட்சேபணை சொல்லவில்லை. இருவரும் சேர்ந்து நடந்து கொண்டிருந்தோம். நான் அதிகமாக கோவில்களுக்குப் போனதில்லை. அப்படியே போனாலும் காரில்தான் போவோம். போன இடங்களில் எங்களைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வார்கள். தனக்கு அப்படிப்பட்ட கவனிப்பு கிடைக்காத இடங்களுக்கு அம்மா போகவும் மாட்டாள். எந்த இடத்திற்குப் போனாலும் எங்களைச் சிறப்பாக நடத்துவார்கள். அந்த மரியாதைகளைக் கண்டால் எனக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கும்.
இங்கே அப்படி எதுவும் இல்லாமல் மற்ற எல்லோரையும் போல் சாதாரணமாக நடந்து போவது எனக்கு வேடிக்கையாக இருந்தது. இங்கே நான் கிருஷ்ணவேணியம்மாளின் மகள் என்று யாருக்கும் தெரியாது. புதிதாக சிறகு முளைத்த பறவை காற்றில் பறப்பது போல் உற்சாகமாக, சந்தோஷமாக இருந்தது. இதற்கெல்லாம் கிருஷ்ணன்தான் காரணம் என்ற நன்றி உணர்வு என் மனதில் நிரம்பிது.
இருவரும் கோவிலுக்குள் சென்றோம். கூட்டம் அதிகமாக இல்லை. கிருஷ்ணன் என் பெயரில் அர்ச்சனை செய்ய வைத்தான். குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்ட போது கோணலாகி விட்டதென்று கிருஷ்ணன் சரி செய்தான். அர்ச்ககர் அவனிடம் கொடுத்த பூச்சரத்தைக் கேட்டு வாங்கி தலையில் சூடிக் கொண்டேன்.
“இந்தக் கோவில், இந்தச் சூழ்நிலை எல்லாமே ரொம்ப அழகாக இருக்கு இல்லையா?” என்றேன்.
“தாங்க்ஸ்!”
“எதுக்கு?”
“உனக்குப் பிடித்திருந்ததற்கு.”
“இன்னிக்கு ஏனோ ரொம்ப சந்தோஷமாக உணருகிறேன். நினைவு தெரிந்த நாள் முதல் இவ்வளவு சந்தோஷமாக என்றுமே இருந்தது இல்லை. நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது உண்மை.”
என்னையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
“காரணம் என்னவென்று கேட்க மாட்டாயா?”
“எனக்குத்தான் தெரியுமே.”
“என்ன தெரியும்?
“கட்டுப்பாடு என்ற பெயரில் ஒவ்வொரு நிமிடமும் உன் அம்மாவின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு இருந்திருப்பாய். அந்தச் சூழ்நிலையில் வளர்ந்த உனக்கு இன்று சுதந்திரமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்.”
எவ்வளவு நன்றாக அனலைஸ் செய்திருக்கிறான்? அதுதான் உண்மையா? “நீ சொன்னது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் இன்று நான் சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம் நீதான்” என்றேன்.
வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் என் பக்கம் திரும்பினான். அந்த நிமிடம் அவன் கண்களில் தென்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. அவன் பார்வை என்மீதே நிலைத்து விட்டது. அந்தப் பார்வைக்குக் கட்டுண்டவள் போல் ஒரு நிமிடம் உலகத்தையே மறந்து போய்விட்டேன். “உண்மையைச் சொல்லட்டுமா? இந்த நிமிடம் இந்த இடத்தில் நின்று கொண்டு யோசித்துப் பார்க்கும் போது உன்னைவிட பிரியமான நபர் வேறு யாரும் இல்லை என்று தோன்றுகிறது” என்றேன்.
“இந்த நிமிடத்தில் …. இப்போ… இந்த இடத்தில்?” கிருஷ்ணன் ஒவ்வொரு வார்த்தையை அழுத்தி உச்சரித்தான்.
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தேன்.
“இங்கிருந்து கிளம்பிப் போய்விட்டால்?” என்றான்.
“எங்கே போனாலும் மாறாது.”
கிருஷ்ணனின் முகம் திடீரென்று சீரியஸாக மாறியது. சுற்றிலும் பார்த்துவிட்டு “நேரமாகவிட்டது. கிளம்புவோம்” என்று சொல்லிக் கொண்டே வேகமாக நடக்கத் தொடங்கினான். அவன் தோரணையைப் பார்த்தால் சீக்கிரமாக அங்கிருந்து போய் விட வேண்டும் என்று அவசரப்படுவது போல் தோன்றியது. திடீரென்று அவனிடம் ஏதோ மாறுதல் வந்து விட்டது. காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. காலை முதல் கலகலவென்று பழகியவன் திடீரென்று சீரியஸாக மாறுவானேன் என்று புரியவில்லை.
காலையில் ரயில் கம்பார்ட்மெண்டில் “யெஸ் மேட்ம்!” என்று சொன்னபோது அவன் கண்களில் மின்னிய குறும்பை, பிரகாசத்தை என்னால் மறக்க முடியுமா? ஓரிரு முறை பேச்சு கொடுத்துப் பார்த்தேன். ஏதோ யோசனையில் இருப்பவனைப் போல் பட்டும் படாமல் ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தான். இருவரும் டாக்ஸியை நெருங்கிக் கொண்டிருந்தோம்.
கிருஷ்ணனின் கையைப் பற்றிக் கொண்டே “ஏன்? என்ன ஆச்சு? என்னவோ போல் இருக்கிறாயே?” என்று கேட்டேன்.
“நானா? எப்படி இருக்கிறேன்?”
அவன் வேண்டுமென்றே குரலில் வியப்பைக் காட்டுவது எனக்குப் புரிந்துவிட்டது.
“சற்று முன் கோவிலில் இருந்தாற்போல் இல்லை.”
“அதுவா? கோவிலை விட்டு வெளியே வந்து விட்டோம் இல்லையா. அதுதான்.” சிரிக்க முயன்றான். அந்தச் சிரிப்பு மனப்பூர்வமாக இருக்கவில்லை.
“வேண்டாதது ஏதாவது பேசி நான் உன் மனதை நோகடித்து விட்டேனா?”
“நீயா? அப்படி என்ன பேசிக்கொண்டு விட்டோம்.”
நான் அவன் கையை விட்டுவிட்டேன். என் மனம் அடிப்பட்ட பறவையாக துடித்தது. உதட்டைக் கடித்தபடி அந்த இடத்திலேயே நின்று விட்டேன்.
“என்ன இங்கேயே நின்று விட்டாய்? நேரமாகி விட்டது. வா… போகலாம்.” கிருஷ்ணன் அவசரப்படுத்தினான்.
“ஊஹ¤ம். நான் மெலட்டூருக்கு வரப் போவதில்லை. என் பயணத்தை கான்சல் செய்து கொள்கிறேன். இன்று இரவே ஊருக்குத் திரும்பி விடுகிறேன்.”
“என்ன?” அவன் குரலில் உண்மையிலேயே வியப்பு வெளிப்பட்டது.
“உண்மையாகத்தான் சொல்கிறேன். நீ திடீரென்று சீரியஸாக மாறிய காரணத்தைச் சொன்னால் தவிர நான் மெலட்டூருக்கு வரப் போவதில்லை. இது சத்தியம்.”
கிருஷ்ணன் உடனே பதில் சொல்லவில்லை. நானும் அவனை எதையும் கேட்கவில்லை. கொஞ்சநேரம் கழித்து அவன் சொன்னான். “ஒருவிஷயம் சொல்லட்டுமா மீனா!” அவன் குரல் வித்தியாசமாக ஒலித்தது.
“சொல்லு.”
“அன்று சென்னையில் பணம் வாங்கிக் கொள்ள நான் மறுத்து விட்டதற்கு என்மீது கோபித்துக்கொண்டு நீ போய் விட்டாய் இல்லையா. அதற்குப் பிறகு என் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. உன் மனம் வருத்தப்படும் விதமாக நடந்து கொண்டு விட்டேனே என்று வேதனையாக இருந்தது. வீட்டுக்கு வந்த பிறகும் என் மனம் அமைதி பெறவில்லை. நீ செய்ய நினைத்த உதவியை என்னால் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தை விவரித்து உனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று ஓரிரு முறை முயற்சி செய்தேன்.”
“பின்னே எழுதவில்லையே? ஏன்?”
“எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. கடிதம் எழுதுவதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கும் என்றும் தோன்றவில்லை. மேலும் கடிதத்தைப் படித்துவிட்டு நான் அந்தப் பணத்தை மறுத்துவிட்டு வருத்தப்பட்டுக் கொள்வதாக நீ நினைத்துக் கொள்ளக்கூடும் என்று தயக்கமாகவும் இருந்தது. மீனா! வெட்கத்தை விட்டு உண்மையைச் சொல்லட்டுமா? நீ வரப் போவதாக மாமாவின் டெலிகிராம் வந்த போது நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. ஒரு நபரை பார்க்கப் போகிறோம் என்பதில் இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றோ, ஒரு நபரின் வருகை இவ்வளவு உவகையை ஏற்படுத்தும் என்றோ இதுநாள் வரையில் எனக்குத் தெரியாது. தந்தி வந்ததும் பாபநாசம் கிளம்பிக் கொண்டிருந்தவன் தஞ்சாவூருக்கு வந்து விட்டேன். இந்த சந்தோஷம் ஏன் என்று எனக்கு நானே நேற்று முதல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”
அவன் குரலுக்குக் கட்டுண்டவள்போல் அவன் பக்கம் திரும்பி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். கிருஷ்ணன் என்னைப் பார்க்கவில்லை. அவன் குரல் தொலைவில் எங்கேயோ நிலைத்திருந்தது.
“பதில் கிடைத்ததா?” ஆர்வத்துடன் கேட்டேன்.
“ஊஹ¤ம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் திரும்பத் திரும்ப தோன்றுகிறது. வேறு ஏதாவது வழியில் அந்தப் பணம் கிடைத்தால் சுந்தரியைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடலாமே என்ற நினைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. சுந்தரி என்று இல்லை. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் என்னுள் நசிந்து விட்டது. என்னைப் போன்றவன் பிரம்மசாரியாக இருப்பதில் பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்.”
“திருமணத்தின் மீது இவ்வளவு வெறுப்பு ஏற்படுவானேன்?”
“என் கண்ணோட்டத்தில் திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் உயிருக்கும் மேலாக நிறைவேற்ற வேண்டிய கடமை. நீ சொன்னது போல் என்றைக்காவது சுந்தரிக்கு என் மனதில் இருக்கும் உண்மையான எண்ணம் தெரிந்துவிட்டால் நரகம்தான். திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணுடன் குடித்தனம் நடத்துவது வெறும் நடிப்பாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.”
“போகட்டும். அந்தப் பணத்தை நான் தந்து விடுகிறேன். அந்தத் தோட்டத்தை நீயே வாங்கிக் கொண்டு விடேன்.”
“ஊஹ¤ம். நம் இருவரின் நடுவில் இருக்கும் நட்புக்கு களங்கம் வருவதில் எனக்கு விருப்பம் இல்லை.”
“இதில் களங்கம் என்ன இருக்கிறது? நெருங்கியவர்கள் ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து கொள்ள மாட்டார்களா?”
“எல்லோருடைய விஷயம் வேறு. நாம் வேறு.”
“அப்படி என்றால்?”
“இனி போகலாமா? நேரமாகிவிட்டது.” பேச்சை மாற்றினான்.
“கிளம்புவோம்” என்றேன்.
டாக்ஸியில் ஏறும்போது கேட்டான். “எங்கே போகணும்? ரயில் நிலையத்திற்கா இல்லை பஸ் ஸ்டாண்டிற்கா?”
“பஸ் ஸ்டாண்ட்தான்.” கம்பீரமான குரலில் சொன்னேன்.
இருவரும் டாக்ஸியில் அமர்ந்துகொண்டோம். கிருஷ்ணன் என்னுடைய கேள்விக்கு நேராக பதில் சொல்லவில்லையே ஒழிய ஏதோ பதில் கிடைத்துவிட்டது போல் இருந்தது. அந்த பதிலும் என் மனதிற்கு இதமாக இருந்தது.
டாக்ஸி வேகமாக போகத் தொடங்கியது. கையை நீட்டி கிருஷ்ணனின் கையை என் கையில் எடுத்துக் கொண்டேன். விடுவித்துக் கொள்ளப்போனான். ஆனால் நான் விடவில்லை.
“காலையில் நான் சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்” என்றேன்.
என்னவென்பது போல் பார்த்தான்.
“நீ ஸ்டேஷனுக்கு வந்ததால் என் இனிய கனவு நாசமாகி விட்டதென்று உன்னைக் கோபித்துக் கொண்டேன் இல்லையா. அந்தக் கனவு நாசமாகவில்லை. நீ வந்ததால் இனியதொரு அனுபவத்தை இன்று நான் அடைந்தேன். இந்த நாளை என் வாழ்நாளில் மறந்து போக மாட்டேன்.”
கிருஷ்ணன் என் உள்ளங்கையில் மெதுவாக கிள்ளினான்.
“பார்த்தாயா, ஆறுமாதம் சேர்ந்து பழகினால் ஒருவருடைய சுபாவம் மற்றவருக்கு தொற்றிக்கொள்ளுமாம். என்னுடைய கிள்ளும் பழக்கம் உனக்கும் வந்து விட்டது” என்றேன்.
கிருஷ்ணன் வாய்விட்டுச் சிரித்தான். டாக்ஸி வீட்டின் முன்னால் வந்து நின்றது. பஸ் ஸ்டாண்டுக்கு போவதற்காக டாக்ஸியை நிறுத்தி வைத்தான் கிருஷ்ணன்.
“ஆன நேரம் ஆகிவிட்டது. ஒரு வாய் சாப்பிட்டுப் போகலாமே கிருஷ்ணா!” சித்திபாட்டி சொன்னாள்.
“வேண்டாம் சித்தி! நேரமில்லை. லேட்டாக போனால் பஸ் கிடைக்காது” என்றான் கிருஷ்ணன். அவசர அவசரமாக மறுபடியும் டாக்ஸியில் ஏறிக் கொண்டோம்.
“இன்று டாக்ஸிக்கே நிறைய செலவாகியிருக்கும்இல்¡லயா?” என்றேன்.
“இப்போ அதைப் பற்றி என்ன யோசனை?”
“என்னால் உனக்கு நிறைய செலவு.”
“அப்படிச் சொல்லாதே. உனக்காக நான் செலழிக்கவில்லை. என் சந்தோஷத்திற்காகத்தான் செலவழித்தேன். நான் சம்பாதிக்க ஆரம்பித்து இத்தனை வருடங்களாகிவிட்டன. எனக்காக நான் செலவழித்தது இந்த ஒரு நாள்தான்.”
டாக்ஸி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தது. கிருஷ்ண் சொன்னது போலவே கடைசி பஸ் புறப்படத் தயாராக இருந்தது. ஓட்டமும் நடையுமாகப் போய் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். நாங்கள் ஏறியதும் பஸ் புறப்பட்டது.
“அப்பாடா! ஒரு நிமிடம் தாமதமாகியிருந்தாலும் பஸ்ஸை தவற விட்டிருப்போம்.” நிம்மதியாக மூச்சை எடுத்துக் கொண்டேன்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்