வண்டிக் குதிரைகள்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

ஷைலஜா


பாதித்தூக்கத்தில் மனைவியை எழுப்பினான் சாரங். அந்தக்கணம்

அவனது மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளத்

தோன்றியது. ஆப்த நண்பன் ஆதித்யாவிடம் சொல்லலாம் என்றால் அவன் ஊரில்

இல்லை

சுமதியை விட்டால் இப்போது அவனுக்கு வேறுயாருமில்லை.சுமதிக்கு கண்டிப்பாய்

சந்தோஷமாக இருக்குமென்று நம்பினான். பல

நாட்களாக அவளும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறாள். ‘ எத்தனை

நாளைக்கு இப்படி

குறும்படம் வெறும்படம்னு எடுத்துட்டே இருப்பீங்க என்னதான் இதுல நீங்க அவார்ட்

வாங்கினாலும் ஒரு பிசி

ஸ்ரீராம் மாதிரி ஒரு பாலுமகேந்திரா மாதிரி சினிமாக்கு காமெராமேனாப்

போயி பேர்வாங்கணும்..அதான் என் ஆசை ‘

‘சுமதி..உன் ஆசை நிறைவேறப்போகுது! ‘ என்று சொல்ல

ஆரம்பிக்கும்போதே

திக்குமுக்காடினான் சாரங்..

அவன் எதிர்பாராத வகையில் சற்றுமுன் அந்த பிரபல இயக்குநர் அவனுக்கு

‘செல் ‘லில் சொல்லிய

வார்த்தைகள் இன்னமும் அவன் காதில் ஒலிக்கின்றன

‘சாரங்! என்னோட புதுப்படத்துக்கு நீங்கதான் காமெரா மேன். நீரஜ்

ஹீரோ. ஹீரோயினாக ஒரு புதுமுகம்,

பேரு ஸ்படிகா, பம்பாய் இறக்குமதி. அடுத்தவாரம் பூஜை . மற்றவை மெயில்ல

மானேஜர் அனுப்புவார்..ஓக்கே ? ‘

‘த்..த.. தாங்க்யூ டைரக்டர் சார்! ‘

அவ்வளவுதான், இயக்குநர் அதிகம் பேசமாட்டார் ஆனால் அவரது படம்

பலரால் பேசப்பட்டுவருகின்றன

அவரது இயக்கத்தில் பணிபுரிய எனக்கு ஒரு வாய்ப்பா ?

சாரங்கால் இன்னமும் நம்பமுடியவில்லை.

சுமதி சட்டென எழுந்து உட்கார்ந்தவள், ‘ என்னங்க…என் கசின் ரம்யாவோட

குழந்தை ராகுலை நாம தத்து எடுக்கலாம்னு நான்

சொன்னதை இப்போவாவது ஏத்துக்கிட்டாங்களா ? பதினெட்டு வருஷமா நான்

தவிச்சதவிப்பு போதுங்க…வயசு நாப்பது எனக்கும் ,உங்களுக்கு

நாப்பத்திமூணும் ஆகுது….இனிமே குழந்தைபாக்கியமெல்லாம் கண்டிப்பா எனக்கு

கிடைக்கபோறதில்ல..கடவுள்மனசு கல்லுன்னு நல்லா தெரிஞ்சிபோச்சு.

அதனால காதும் காதும் வச்ச மாதிரி வீட்டோட வச்சி தத்து

எடுத்துக்கிடலாம்….சரிதானே ? ‘

என்று ஆவலும் அதட்டலுமாய் கேட்டாள்

அவரவர் கவலை அவரவர்க்கு.

பெருமூச்சு விட்டான் சாரங்

குழந்தை இல்லாதது சமூகத்தில் பெரியகுற்றமா என்ன ? திரும்பத் திரும்ப

என்மனைவி என்குழந்தை என்றே

சுயநல வாழ்க்கைதான் வழவேண்டுமா ? மனசை உற்சாகப்படுத்திக்கொள்ள

மாற்றுவழிகள் எவ்வளவோ இல்லையா என்ன ?

இல்லாததற்கு ஏங்குவதே இயல்பாகித்தான் போகுமோ ?

சாரங்கின் முகம் போனபோக்கைப்பார்த்து

‘விஷயம் அது இல்லையா ? ‘ ஏமாற்றமாய் சுமதி கேட்டாள்

‘சரி அது உன் விருப்பம் ஆனால் நான் சொல்லவந்தது…. ‘ என்று

ஆரம்பித்தான். ஆனாலும் அவளை எழுப்பும்போது இருந்த வேகம் இப்போது

இல்லையெனினும் நிதானமாய் சொல்லிமுடித்தான்

‘இதுவும் நல்ல விஷயம்தாங்க…உடனே ஊருக்கு உங்கப்பாக்கு போன் போட்டு

சொல்லுங்களேன் ‘

‘வேணாம் ‘

‘இன்னமும் உங்கப்பா பேர்ல வருத்தமாக்கும் ? உங்க காதலை பலி

கொடுக்கவைத்து என்னை அன்னிக்கு உங்கதலையில கட்டினது மகாபாவம்

தாங்க.. ‘

‘ஹலோ ? அம்மாதாயே! பதினெட்டுவருஷம் முன்பு நடந்த கதையை நீ இப்போ

கிளறாதே.நான் உன்கிட்ட உண்மை சொல்லிட நினைத்து சொன்னேனே தவிர

இழந்த காதலையே நினைச்சி மருகிப்போகலை..கடந்துபோறமேகம் மாதிரி

வாழ்க்கையில் அதுவும் ஒண்ணுனு என்னை நானே தேத்திட்டேன். அந்தப்பொண்ணும்

வேற யாரையோ கட்டிக்கப் போவதாய் எனக்கு கல்யாணப்பத்திரிகையும்

அனுப்பிட்டா..

சரிசரி இப்போ நான் திரைப் படத்துக்கு காமெரா மேனா நிச்சயமாகி

இருக்கிற விஷயத்தை நீயாரிடமும் சொல்லகூடாது, படம்பூஜைமுடியட்டும்,அதுவரை

கப்சிப்புனு இருக்கணும் இந்த சினி ஃபீல்டுல கடைசிவரைக்கும் எதுவுமே

நிச்சயமில்லை ‘

‘ஆமாம் .நான் யார்ட்டயும் சொல்லமாட்டேங்க.. நாளைக்குக் கோயிலுக்கு

போயிட்டு கடவுளுக்கு மட்டும் மெளனமா என் நன்றியை

சொல்லிட்டு வரேன்.. ‘

‘கொஞ்சமுன்னாடிதான் கடவுள் மனசு கல்லுன்னு திட்டினபோல இருக்கே ? ‘

‘ அதனால் என்ன, உங்கமேல இப்போ கருணை காட்டி இருக்காரே ? ‘

சுமதி தன் வயதைமீறி சின்னப்பெண்போலதுள்ளிக் குதித்தாள்

மறுநாள் விவரமான மின்னஞ்சல் கண்டு அதன்படி சாரங் இயக்குநரின்

இருப்பிடத்திற்குச் சென்றான்

‘வாங்க சாரங்… ‘ வரவேற்றார் இயக்குநர். இதமான அன்பான அவரது

வரவேற்பில் குளிர்ந்தான் சாரங்.

‘வணக்கம் …ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு… ‘ என்றான் சாரங்.

உதவி இயக்குநர் ஒருவர் சாரங்கின் அருகில் நின்றவர் அவன் காதோரம் ‘

சாரங்! உங்களோட லேடஸ்ட் குறும்படம் ‘உனதுவிழியில் எனதுபார்வை ‘ பார்த்து

டைரக்டர் அசந்துபோட்யிட்டார். ‘என்னடா காமெரால

பேசறான்..ஓவியம்மாதிரி காட்சிகளை அள்ளிட்டுவந்திருக்கான்! எப்படி

இவனைப்பத்தி நீங்க யாருமே என்கிட்ட சொல்லலே ? ‘னு

சத்தம்போட்டார்…சாரங்..நீங்க இந்தபடத்துக்குள் நுழைவதின் மூலம் எங்கயோ

போகப்போறீங்க அது நிச்சயம் ‘ என்றார் கிசுகிசுப்பான குரலில்

சாரங் புன்னகையுடன் தலை அசைத்தான். எல்லாம் கனவுமாதிரி இருந்தது.

வாழ்க்கையில் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் மழைமாதிரி

எதிர்பாராத தருணங்களில் தான் வருமோ ?

அந்த ஐந்துநட்சத்திர ஹோட்டலில் மேல்தளத்தின் பிரத்தியேக ஹாலில்

பேச்சு வார்த்தைகள் நடந்துமுடிந்ததும் டைரக்டர் அனைவரிடமும் சில

புகைப்படங்களைக் காட்டினார்

‘இதான் நம்ம படத்து ஹீரோயின் …பம்பாய்ல வளர்ந்த பொண்ணு. ஆனாதமிழ்

பேசுது..நல்ல முகவெட்டு .பாருங்க அந்த நாள் சரோஜாதேவிமாதிரி

எக்ஸ்ப்ரஸிவ் ஐய்ஸ்! எடுப்பானமூக்கு..மும்பாய்ல மாடலிங்

பண்ணுது,…பதினேழுவயசுதான். சாவித்திரிமாதிரி துறுதுறுன்னு

இருக்கு..கண்டிப்பா இந்தபொண்ணு தமிழ் நாட்டை ஒருகலக்கு கலக்கப்போகுது! ‘

எல்லாரும் ஆர்வமாய் அந்தப்புகைபடங்களை கையில் வாங்கிப் பார்த்துவிட்டு

தலை அசைத்து ஆமோதித்தனர்

சாரங் இயக்குநரின் முகத்தையே பார்த்து பிரமிப்புடன் அமர்ந்திருந்தான்

அடேயப்பா, போட்டோவைப்பார்த்து எதிர்காலத்தைச் சொல்லும் அளவுக்கு

அனுபவம் வாய்ந்த டைரக்டரின் கீழ் பணிபுரிவது எனக்கும் பெருமைதான்.

‘என்ன சார்ங்..நீங்கதான் போட்டோவை முக்கியமாபாக்கணும்… உங்க

காமிரா கண்ணுல தான் குத்தம் குறையெல்லாம் கரெக்டா தெரியும்.. ‘ என்றார்

இயக்குநர் சிரித்தபடி அதற்குள் அவருக்கு மொபைலில் யாரோ அழைக்க

காரிடாரில் ஓரமாய் நடந்துசென்று பேச

ஆரம்பித்துவிட்டார்

சாரங் நிதானமாய் அந்த போட்டோக்களில் ஒன்றை கையில் எடுத்தான்.

அடுத்தகணம் விழி குத்திட நின்றான்

. ‘வசுதா ? ‘

மனசு கூவியது .

நல்லவேளை யாரும் அவனது முகமாற்றத்தை கவனிக்கவில்லை

‘ஸ்படிகா ! புதுமுகம்! . சொந்தப்பேரே நல்லாஇருக்குன்னு டைரக்டர் அதையே

ஒக்கேபண்ணிட்டார் ‘

உதவி இயக்குநர் திலக் சொன்னார்

சாரங் நெற்றிவியர்வையைத்துடைத்துக்கொண்டான்.

‘சாருக்கு ஏசிலகூட வியர்க்குது டைரக்டர்கிட்ட முதல் அனுபவம் அதான்னு

நினைக்கிறேன் டோண்ட் ஒர்ரி மிஸ்டர்சாரங். ரொம்ப ஃப்ரீயா இருக்கலாம்.

செட்டுக்கு வந்துட்டா மனுஷர் பம்பரமா சுத்துவார்.நல்ல கலைஞர்களை என்கரேஜ்

செய்வார் நம்ம டைரக்டர் ‘

‘அதனால்தான் உயரத்திலிருந்து அவர் இறங்காமல் இருக்கிறார்..

கர்வமோ,தலைகனமோ இல்லாத அற்புத மனிதர் நம்மடைரக்டர் ‘

‘அடுத்தவர்களை மதிக்கத்தெரிந்தவர் ‘

ஆளாளுக்குப் புகழ்ந்தார்கள்,பிறகு

அனைவரும் டின்னர்மேஜை நோக்கிவிரைந்தார்கள்

சாரங் ஸ்படிகாவின் போட்டோவைப் பார்த்ததுமே அது வசுதாவின் வாரிசு

என்பதை உணர்ந்துகொண்டுவிட்டான்.

அந்தப் பெரியவிழிகளும் கூரிய நாசியும் கதுப்புக் கன்னங்களும்

குறும்புப்புன்னகையும் வசுதாவிற்கே உரிய சிறப்பு அம்சங்கள்.

எத்தனைமுயன்றும் சாரங்கிற்குத்தனது பழைய நினைவுகளை நோக்கி மனம்

திரும்பிப்போவதைத் தடுக்க இயலாமல் தவித்தான்

பழையவிஷயங்கள் எல்லாவற்றையும் மனம் மறந்துவிடுவதில்ைலை. மறக்கச்சொல்லி

மனதிற்கு ஆணை பிறப்பித்தாலும் அது பல நேரங்களில் எதிர்விளைவைத்தான்

ஏற்படுத்தும். இப்போது அந்த நிலைகுத் தள்ளப்பட்டான் சாரங்.

வசுதா!

அவளைப்பார்த்து பேசும்வரை சாரங்கனுக்கு(அப்போது சாரங்கன் என்றமுழுபெயரில்

தான் அழைக்கப்பட்டான். பிறகு குறும்படங்களுக்கு பணிபுரியபோனபோது சாரங்

என்றானது) பெண் என்றாலே அலர்ஜி. அம்மாவைத்தவிர அதிகம் வேறு

பெண்களூடன் பேசிபழக்கமில்லாதவனாய்

அதை விரும்பாதவனாயும் இருந்தான்.

பெண்ணுடன் நட்பு கொள்வதற்கு அழகுமட்டும் போதாது வேறு ஏதோ ஒரு ஈர்ப்பும்

தேவை என்பதை உணரவைத்தவள் வசுதா.

கரூர் அருகே அமராவதி நதி பாயும் அந்த கிராமத்தின் பசுமைக்காட்சிகளை

தனது காமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தான்

சாரங்கன்.. கல்லூரி நாளிலிருந்தே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம்

கொண்டவன். அப்போதெல்லாம் வாரவிடுமுறைகளில் தோளில் காமிராவை

மாட்டிக் கொண்டு ஊர் ஊராக புறப்பட்டுப் போய்விடுவான் சென்னையில் ஒரு

கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு மாதத்தில்

ஒரிரு முறைமட்டுமே அப்படிப்போகமுடிந்தது. நண்பன் ஆதித்யா உறவினர்

வீட்டுக் கல்யாணத்திற்கு கரூர் போய்வந்தவன் அருகிலிருந்த ஒருகிராமத்தின்

பெயரைச் சொல்லி சாரங்கனிடம் அதை அவசியம் அவன் போய்ப்பார்த்து அங்கு

உள்ள இயற்கை காட்சிகளை ரசித்து புகைப்படங்கள் எடுக்கலாமென்று சொல்லி

இருந்தான்.

தோப்பு ஒன்றில் ராணுவவரிசையாய் நின்றிருந்த தென்னைமரங்களை எல்லாம்

ரசித்துப்பார்த்தபடி வந்தவன் சட்டென பாதிவளர்ச்சியிலேயே ஊஞ்சல்போல

இறங்கி வளைந்து மறுபடி மேலே சென்று கொண்டிருந்த ஒருமரத்தின் கீழ்

வளைவின் மீது அமர்ந்தபடி ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த அந்தப்

பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்தான்.

தன்னந்தனியாய் யாருமில்லாத இடத்தில் அழகான இளம்பெண் மும்முரமாய் புத்தகம்

படிப்பது வினோதமாய் இருந்தது. அந்த வளைந்தமரத்தை புகைப்படம் எடுக்க

விரும்பியவன் அதன் மீது அவள் அமர்ந்திருக்கவும் தயக்கமாய் அவளையே

ஏறிட்டான்.

மஞ்சளில் அரக்குபூக்கள் போட்ட பாவாடையும் அரக்கு தாவணியும் மஞ்சள்

ஜாக்கெட்டும் அணிந்திருந்த அவள் அந்த அந்திவானச்

சிவப்பின் கீழ் தேவதையாய்த் தெரிந்தாள்

சாரங்கன் வந்ததையே அறியாதவளாய் புத்தகத்தில் மூழ்கி இருந்தாள் அவன்

நினைத்திருந்தால் அவளுடைய அழகை அவள் அறியாமலேயே தனது காமெராவில்

கவர்ந்திருக்கமுடியும். ஆனால் அது அவனது சுபாவம் அல்ல

கல்லூரியிலேயே சகமாணவிகளால் மிகவும் மதிக்கப்பட்டவன் சாரங்கன்

படிப்பு உண்டு தனது காமெரா உண்டு என்றுதானிருப்பானே

தவிர எந்தக் குறும்பும் செய்யாதவன்..முக்கியமாய் இளம் பெண்களை சீண்டி

விளையாடுவதை விரும்பாதவன்

நண்பர்கள் அவனை ரிஷி என்பார்கள் செல்லமாக

காமெராவுடன் அவளைக்கடந்து நடந்தவனை. ‘ஹலோ ? ‘ என்று ஒரு குயில்

அழைத்தது.

அழகான பெண்களுக்கெல்லாம் குரலும் அழகாய்த்தான் இருக்குமோ ?

திரும்பினான் சாரங்கன்.

‘ஊருக்கு புதுசா ? ‘ கேட்டாள் குறும்புச் சிரிப்புடன்.

தலை ஆட்டினான்

‘காமெரா வச்சிட்டு சுத்தறீங்க.இயற்கை அழகை படம்பிடிக்க வந்தீங்களா ? ‘

‘ஆ ஆமாம்.. இந்த கிராமம்பத்தி சென்னைல என் ஃப்ரண்ட் சொன்னார்

அழகான இயற்கைக்காட்சிகள் இருக்கிறதாமே, அதான் படம்

பிடிக்க வந்தேன் ‘

‘அதென்ன எல்லா புகைப்படக்காரர்களுமே அழகைத்தான் படம்பிடிப்பீர்களா ? ‘

வம்புக்கு இழுப்பதுபோல அவள் தன்னைக் கேட்பதாய்

சாரங்கன் நினைத்தான் .

‘அழகு ஒரு நிறைவு அது, மனசுக்கு சந்தோஷம் தருவதால் அழகை

ரசிக்கிறோம் ‘ என்றான்

‘சந்தோஷம் தான் எதற்குமே எல்லையா ?சந்தோஷம் என்றால் நிறைவுன்னா பிறகு

தேடல் தொடருமா ? தேடல் இல்லைன்னா புதுமைகளை சாதிக்கத்தான்முடியுமா ? ‘

சாரங்கனுக்கு அந்தப்பெண்ணின் பேச்சு வித்தியாசமாய்பட்டது.அவள்

தொடர்ந்தாள்

‘தோல்வியிலும் சோகத்திலும் தாக்கம் ஏற்பட்டு சிந்திக்கமுடிகிற அளவுக்கு

மகிழ்ச்சியில் அது சாத்தியமா சொல்லுங்க ? ‘

நீங்க சொல்வது உண்மைதான்..இப்படி ஒரு கோணத்துல நான் சிந்திக்கவே

இல்லை. ‘

‘தப்பா நினைக்காதீங்க… என் சுபாவம் எதையும் வெளிப்படையா

சொல்லிடுவேன்… ‘

‘பராவாயில்லை ‘

‘.ஆனாலும் போலித்ததனமாய்ப் பேச எனக்குபிடிக்கறதில்ல…ஆமா உங்க

பேர் என்ன ? ‘

‘சாரங்கன் ‘

‘ப்ருந்தாவன சாரங்கா ராகம் நினைவுக்கு வருகிறது! என் பெயர் வசுதா.இந்த

சின்ன கிராமத்துல ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின்

ஏகபுத்திரி.

‘வசுதா! பேரும் அழகாய்த்தான் இருக்கு! ‘ மனசுக்குள்

சொல்லிகொண்டவன், ‘அதென்ன புத்தகம் கையில் ? பாடபுஸ்தகமா ? ‘

என்றுகேட்டான்

‘ பாடம்படிக்கத்தான் தோப்புக்குவரணுமா ? நான் பிஏ இலக்கியம் போனவருஷம்

கரூர்காலேஜில் படிச்சிமுடிச்சிட்டேன்..இது கதை புத்தகம். ‘

‘வாசிப்பதில் உங்களுக்கு விருப்பம் அதிகமோ ? ‘

‘வாசிப்பது சுவாசிப்பதுபோலத்தான்.ரொம்பப் பிடிக்கும் ‘

‘எனக்கு போட்டோகிராஃபி போல உங்களுக்கு ரீடிங் ஹாபி போல இருக்கு ? ‘

‘ஆமாம் அவரவர்களுக்கென்று ஏதோ சிலவிஷயங்கள் பிரத்தியேகமாய்ப்

பிடித்துப்போய் விடுகிறது இல்லையா ? அப்படிபிடித்த

விஷயங்களை தனிமையில் அசை போடுவது எனக்குப் பிடிக்கும் ஆனால்

தனிமையே நிரந்தரமென்று ஒதுங்கி நின்று

போய்விடக்கூடாது என்பார் என் அப்பா.மனசை நதிபோல ஓடவிட்டுட்டே

இருக்கணும் என்பார்.அதை தேக்கி நிறுத்திக் குளமா

மாற்றீட்டா பாசி படியும் நாற்றமடிக்க ஆரம்பிக்கும் ஓடிக் கொண்டிருக்கும்

வரையில் நதிக்கு இருக்கும் சிறப்பு தனித்துத்

தேங்கும் போது நீங்கிவிடுகிறது என்பார்.அதனால் அப்பப்போ இப்படி

தோப்பு ,தனிமை, புத்தகம்… ‘ சிரித்தாள் இயல்பாக.

‘இலக்கியமாணவி என்பதை நிரூபிக்கிறீங்க நல்லாப் பேசறீங்க

வசுதா..நான் அதிகம் புக் படிக்கற தில்ல பாரதி கவிதைகள்மட்டும்

ஓரளவுமனப்பாடம். இப்போ நீங்க வாசிக்கிறது என்ன புத்தகம்னு நான்

தெரிஞ்சிக்கலாமா ? ‘

‘இரும்புக்குதிரைகள்..பாலகுமாரனின் நாவல்…பத்தாவது தடவையா விரும்பி

ரசிச்சிப் படிக்கறேன் ..பிடிச்ச பாடலை டேப்பில திரும்பத்

திரும்ப போட்டுக் கேட்கிற மாதிரிதான் இதுவும் ‘

‘இரும்புகுதிரைகள் பற்றி இந்த நொண்டிக்குதிரைக்கு எதுவும் தெரியாது

வசுதா ‘ சாரங்கன் சிறுவயதில் போலியோ பாதிப்பில் சூம்பிப் போன

தனது வலது காலைக் காட்டியபடி இப்படிச் சொல்லவும் கண்களில் கோபம் பொங்க

அவனைப் பார்த்தாள் வசுதா

‘ தயங்கித் தயங்கி நீங்க பேசும்போதே நான் நினச்சேன்..எதை

நினச்சி நீங்க ஒதுங்கிப்போகக்கூடாதுன்னு நானே வலிய அழைச்சிப்

பேசினேனோ அதையே நினைச்சிக் குமைந்து போறீங்க…இருளைக்கூட ‘

குறைந்த ஒளி ‘அப்படின்னு பாரதி சொல்கிறார். இருட்டைக் கண்டு மிரண்டு

போகிறவங்க கண்டிப்பா கோழைங்கதான்..உடல் ஊனம் வெளியே தெரியுது

எத்தனைபேர் மன ஊனத்தோடு இருக்காங்க அவங்களோடப் பழகி அடிபடுகிறவரை

நம்மால் எதையும் உணரமுடிவதில்லை .சாரங்கன், உங்களைமாதிரி

நம்மைபத்தி என்ன நினப்பாங்களோன்னு மத்தவங்களை கவனிக்கறது உடல்

ஊனமுள்ளவங்க கிட்ட இருக்கிற கெட்டபழக்கம்.

எதையுமே.கற்பனை செய்து கவலைப்படுவதைவிட வெளிப்படையாபேசி

நேருக்குநேர் சண்டைபோடறதுல தப்பு இல்லே என்பதுஎன் அபிப்பிராயம். அதனால

நொண்டிக்குதிரையா இருக்கலாம் தப்பில்ல நம்பினவங்களுக்கு

மண்குதிரையாகத்தான் இருக்ககூடாது…தெரியுமில்லையா பழமொழி,

‘மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின மாதிரி ‘ அப்படான்னு ? ‘

‘தாங்க்ஸ் வசுதா!வாழ்க்கை சொல்லித்தரும் வலியை மனிதன் புரிஞ்சிட்டா

வலியையும் பொறுத்துக்கமுடியும்னு நான்

கேள்விப்பட்டிருக்கேன்.வலியிலிருந்து பிறப்பதுதான் வலிமை. ஆனாலும்

சமூகத்தின் அனுதாபப் பார்வையினாலே நாங்கள் சில நேரங்களில்

பரிகாசமாய் காயப்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லையே ? அதனால்தான் ஒரு

தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது. அவர்களாய் எங்கள் ஊனம்

தெரிந்து பேசுமுன்பாய் நாங்களாக இப்படி முந்திக் கொள்கிறோம் ‘

‘இங்கதான் தப்பு. முதல்ல நாம் நம்மை நேசிக்கப் பழகணும்.நம்மை நாமே

வெறுத்தால் அது மத்தவங்களுக்கு சாதகமாய் போய்விடும்.

..ஸாரி..அதிகமாய்ப்பேசறேன்னு நினைக்கிறேன்..விட்டாங்கன்னா

சொற்பொழிவே செய்துடுவேன்… ‘ சிரித்தபடி அவன் அருகில் வந்து

நின்றுகொண்டாள்.பிறகு, ‘ சரி, .எங்கள்கிராமத்துக்கு

விருந்தாளியாய் வந்திருக்கிற உங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிப்போனால்

என் அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார். புகைபடக்கலைஞர் என்றால் இன்னமும்

மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா என்கூட வீட்டுக்கு

வரலாமே ? ‘

சாரங்கன் , ‘எனக்கும் இப்படி ஒரு புத்திசாலிப்பெண்னைப் பெற்ற

தகப்பனாரைப்பார்க்கணும்தான் ‘ என்றான்.அவனுக்கே வியப்பாயிருந்தது தனது

பேச்சில் தெரிந்தமாற்றம்.

அது வீடாஅல்லது நூலகமா என்று வியக்கும் அளவிற்கு வீட்டில் புத்தகங்கள்அழகாய்

அடுக்கப்பட்டு அந்த சிறு வீட்டின் எல்லா அலமாரிகளிலும் நிறைந்திருந்தன.

நிகண்டு,அபிதான சிந்தாமணி, தேவாரம் திருவாசகம் பைபிள் குர்ரான்

பெளத்தமத சாரங்கள் தாகூர் டால்ஸ்டாய் ஷேக்ஸ்பியர் கம்பன் ரூஸ்வெல்ட் ரஸ்கின்

வால்டேர் பாரதி என்று புத்தகவரிசைகள்.

உன் நண்பர்களைச் சொல்லு உன்னைபற்றி சொல்கிறேன் என்பது போல படிக்கும்

புத்தகங்களை வைத்தும் அவர்களைப்பற்றிக்

கணிக்கலாமென சாரங்கன் தான் கேள்விப்பட்டதை நினைத்துக் கொண்டான்.

வசுதாவின் அப்பா தன் மகள் அறிமுகம் செய்ததும் சாரங்கனை அன்போடு

வரவேற்று, ‘ என் பெண் எல்லாருடனும் வலியபோய் பேசிவிடமாட்டாள் அவளே

உங்களிடம் பேசி வீடுவரை அழைத்து வந்திருக்கிறாள் என்றால் கண்டிப்பாய்

சாரங்கன் வித்தியாசமான ஒரு இளைஞராயிருக்கவேண்டும். ‘:என்றார்

சாரங்கன் பணிவும் வெட்கமுமாய் புன்னகைத்தான்

அந்தச் சிறுவீட்டில் டிவீ யைத்தவிர வேறு டெலிபோன்,.ஃப்ரிட்ஜ் இன்னபிற

நவீன சாதனங்கள் எதுவுமே இன்றி எளிமையாய் காட்சி

அளித்தது.

வசுதா உள்ளே சென்று காபியோடு கைமுறுக்கும் தேங்காய்பர்பியும் கொண்டுவந்து

வைத்தாள்

‘சாப்பிடுங்க தம்பி..அடிக்கடி வாங்க நம்மூருக்கு..நம்ம வீட்ல தங்கிக்குங்க

..அருகில் பல இடங்கள் பார்ப்பதற்கு இருக்கு நான் கூட்டிப்போகிறேன்

வாங்க,.ஒண்ணும் கூச்சப்படவேண்டாம் ‘

அன்பில் அவனை ஆட்கொண்டார் வசுதாவின் அப்பா பரசு.ஐம்பது வயதிருக்கும்.

மெலிந்த தேகம்.வெள்ளைக் கதர்வேஷ்டி கதர் சட்டையில்

எளிமையாய்த் தெரிந்தார். பேச்சிலும் செய்கையிலும் நிதானம் நிழலாய்ப்

பரவி இருந்தது. உன்னதங்கள் எல்லாமே அமைதியானவை

தானோ ?

சாரங்கன் அடுத்த சில நாட்களில் மறுபடி அந்த கிராமத்திற்குவந்தான்.

பரசுவும் வசுதாவும் அவனை கிராமத்தின் வித்தியாசமான பகுதிகளுக்கு

அழைத்துச் சென்றனர். அங்கே அவன் எடுத்த சில புகைப் படங்களை

பத்திரிகையில் போட்டிக்கு அனுப்பினான்

ஒரு பழுத்த கிழவி ஒலை முடைந்துகொண்டிருந்த காட்சியை அவன் படம் பிடித்து

‘சருகு முடையும் ஓலை ‘என்ற தலைப்பில் அனுப்பி இருந்தான் அதற்கு முதல்பரிசு

கிடைத்ததில் பரசுவும் வசுதாவும் மிகவும் மகிழ்ந்துபோயினர்.

மெல்லமெல்ல சாரங்கனின் வருகை அதிகரித்தது எந்தக்கணத்திலும் அவன்

வசுதாவிடம் எல்லைமீறாமல் கண்ணியமாகவே நடந்து

கொண்டதை பரசுவும் கவனித்தார். அன்று அவனிடம் தன் விருப்பத்தை

கேட்டுவிட்டார்.

சாரங்கன் திகைப்புடன், ‘ என்னைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டுதான்

இப்படிக்கேட்கிறீர்களா சார் ? ‘ என்றான்.சாரங்கனுக்கு அவனது

கால் ஊனம் பற்றிய கவலை நிறையவே உண்டு.

‘ என் நம்பிக்கைக்கு பாத்திரமான நபராக நீங்கள் இருக்கிறீர்கள்

சாரங்கன். உங்களைவிட என் பெண்ணுக்குப்

பொருத்தமான துணைவர் யாரும் கிடைக்கமுடியாது. பழகின சில நாட்களிலேயே

ஒரு சிலரால் தான் மனசை அடையமுடியும்.மனசு ஒரு கோட்டை.அதற்கு

நம்பிக்கையின்மை,சந்தேகம் இன்னபிற தடைகளாய் பலகதவுகள்

இருக்கும்.அதையெல்லாம் தகர்த்து நீங்கள் என்மனசின் உள்ளே

வந்திருக்கீங்க…தடைகள் விலகினால்தான் மகிழ்ச்சி புகுந்துகொள்கிறது

மகிழ்ச்சி மனதுக்கு உறுதியைக் கொடுக்கிறது.மனதில் உறுதி வேண்டும் என்று

பாரதி கேட்டது இதற்குத்தான்.மனதில் உறுதி வந்துவிட்டால் வாக்கினிலே

இனிமை வரும் ‘ நினைவு நல்லதாகும் நெருங்கிய பொருள் கைவசப்படும் ‘

பரசு பேசப்பேச வசுதா மெளனமாய் அவனையே பார்த்தாள் இப்போது அவளது

பார்வையில் இனந்தெரியாத நாணம் கவிழ்ந்திருந்ததை

சாரங்கன் கவனித்தான்.

அந்தமெளனம் ஆயிரமாயிரம் வார்த்தைகளை அவனுக்குக் கண்வழியே அஞ்சல்

செய்தது.

சாரங்கன் புன்னகையுடன் தலை அசைத்தான்

சென்னை சென்றதும் பெற்றோரிடம் சொல்ல அவர்களின் சம்மதம்

கிடைத்துவிட்டதாயும் விரைவில் நிச்சயதாம்பூலம் செய்யவருவதாயும் கடிதம்

போட்டுவிட்டான்

வசுதா அப்போதுதான் அவனுக்கு முதன்முதலாக ஒரு கடிதம் எழுதினாள்.தன்

காதலைக் கொட்டி கவிதையாய் எழுதி அனுப்பினாள்

சாரங்கனும் அவளது நேசத்திற்கு நன்றிகூறி பதில்போட்டான்.இடையில் அலுவலக

விஷயமாய் சென்னையிலிருந்து அவன் டில்லிக்கு மூன்று மாதங்கள்

போகவேண்டிவந்தது. அப்போதெல்லாம் அவனால் கிராமத்திற்கு வர இயலாமல்

போனது. அந்த நாட்களில் வசுதாதான் மிகவும்

அவஸ்தைபட்டாள்.

‘மாறும் கன்னிமனம் மாறும்

கண்ணன் முகம் தேடும்.. ‘

பரசு தன் மகள் சினிமாப்பாட்டை அதிசியமாய் முணுமுணுப்பதை ரசித்தார்.

நல்ல சிநேகிதத்தை காதலாய் மாற்றி அதற்கு உரமிட்டவர் பரசு

.

அன்று பெரியாழ்வார் மகளுக்கு அரங்கனைப் பற்றிச் சொல்லி அவள் மனசில்

ஆழ்ந்த காதலை ஏற்படுத்தியமாதிரியான உணர்வில் இன்று

திளைத்துபோனாள் வசுதா. நெஞ்சமெல்லாம் அவனது முகம் அடைத்துக்கொண்டு

சுவாசத்தையே நிறுத்தியதுபோலத் திண்டாடினாள்.

.காதல்வசப்படும்வரை எந்த ஒரு பெண்ணும் நிலை தடுமாறமாட்டாள். அந்த

நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டால் மீண்டு எழுந்துவரவும் இயலாதவளாகிவிடுவாள்.

கடிதங்கள் காதல் பாலங்களாயின.

அன்று பரசுவின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது.

பிரித்துப் படித்தார்.

சாரங்கனின் அப்பாவிடமிருந்து வந்த அந்தக் கடிதம் அப்படி ஒரு அணுகுண்டைத்

தூக்கிப் போடுமென இருவருமே எதிர்பார்க்கவில்லை

அதிகம் பாதிக்கபட்டவராய் பரசு தான் புலம்பினார். ‘அம்மாடி வசுதா.

தாயில்லாப்பெண்ணா வளர்த்த உன் மனசுல ஆசைத்தீயை

கொழுந்துவிட்டு எரியவச்ச பாவிம்மா நான்.கடைசில இப்படி ஆகும்னு நான்

நினைக்கவேஇல்லையே அம்மா ? யாருக்கோ ஜாயிண்ட் கையெழுத்துபோட்டு இருந்த

சொற்ப சொத்து பணமெல்லாம் இழந்து ஜெயிலுக்குப் போகவேண்டி இருந்த

நிலைமையில் உதவினவரின்

மகளுக்கு சாரங்கனைக் கல்யாணம் செய்யபோவதாயும் நடந்தவைகளுக்கு மன்னிப்பு

கேட்டும் கடிதம் எழுதி இருக்காரேம்மா மனுஷர் ?

வெறும் வார்த்தைகளில் வாழ்க்கையைத் தீர்மானித்துவிட்டார் வசுதா. சாரங்கன்

எதுவுமே எழுதவில்லை, அவன் சாது. அவனால் அப்பாவின் பேச்சைத் தட்ட

முடிந்திருக்காது… ‘ என்று கதறினார்.

தனக்குக் கொடுப்பினை இல்லையென்பதைத் தெரியப்படுத்தி சாரங்கனின்

அப்பாவிற்கு பதில் கடிதமும் எழுதிபோட்டார்.

அடுத்த சில நாட்களில் வசுதாவிடமிருந்து அவளது திருமண அழைப்பிதழ்

சாரங்கனுக்கு வந்துசேர்ந்தது.அதில் சின்னதாய் ஒரு கடித இணைப்பில், ‘ இது

இன்ஃப்ர்மேஷன் தான் இன்விடேஷன் அல்ல ‘ என்று ஆங்கிலத்தில் ஒரே வரியில்

கைப்பட எழுதி இருந்தது அதில் வசுதாவின் கோபம் சாரங்கனுக்குப் புரிந்தது

,அதன் நியாயமும் புரியவே அவன் வேறுவழியின்றி அமைதியாகிப் போனான்.

‘சார்ங்..டின்னர் சாப்பிடப் போகலயா கமான்.. ? ‘ இயக்குநர் உரத்த குரலில்

கேட்கவும் சாரங் வசுதவின் நினைவுகளிலிருந்து மீண்டான்.

அவர் தனது மொபைல் போனை ஷர்ட் பாகெட்டில் வைத்தபடி சாரங்கனின் தோள்

தொட்டு

மேஜை அருகே அழைத்துக் கொண்டு போனார்.

சாப்பிடும்போது அவர், ‘சாரங்..நீங்க ஸ்படிகாவை கொஞ்சம் ஸ்னாப்ஸ்

எடுக்கணும்…நாளைக்கு விஜயாகார்டனில் பூஜை முடிச்சதும்

ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறேன்..எந்தப்பத்திரிகை மீடியாவையும் நான்

பூஜைக்கு அழைக்கப்போகிறதில்லை..போன தடவையே என்படத்தில் நடிச்ச

புதுமுகம்கிட்ட நிருபர்கள் ஏதோ கேள்விகேட்டு குடைஞ்சிட்டாங்க,அதனால

இந்தமுறை நான் யாரையும் புதுமுகத்தை போட்டோ எடுக்கவோ பேட்டி எடுக்கவோ

அனுமதிக்கப் போவதில்லை..நீங்க எடுக்கபோகும் போட்டோக்களை மட்டும்

அவங்களுக்கு அனுப்பிடலாம்

டிஜிடல்காமெரால பத்து ஸ்னாப்ஸ் தட்டி கம்ப்யூட்டர்ல லோட் பண்ணி அதை

அப்படியே பத்திரிகைக்காரங்களுக்கு அனுப்பிடலாம்.காலைல

ஹோட்டல் பத்மால ஸ்படிகாவைபோய்ப்பார்த்து போட்டோஸ் எடுதுமுடிச்சிடுங்க

..மானேஜர் நீங்க வருவதுபத்தி அவங்களுக்கு தெரிவிச்சிடுவாங்க ஓகே ? ஆல்

த பெஸ்ட் சாரங்! ‘ என்று படபடவெனப்பேசிவிட்டு கைகுலுக்கி விடை பெற்று

நகர்ந்தார்.

சாரங்கிற்கு பழம் நழுவிப்பாலில் விழுந்தமாதிரி இருந்தது .நாளை

ஸ்படிகாவைபார்த்ததும் சொல்லிவிடவேண்டும், ‘ இது பருந்துகள் இருக்கும் கூட்டம்

இங்கே கிளிகள் எல்லாம் இரையாகும் ‘ என்று ‘

வசுதாவின் பெண் என்பதால் அவளும் கெட்டிக்காரியாகத்தான் இருப்பாள்

புரிந்துகொள்வாள்.

மறுநாள் சாரங் சரியான நேரத்திற்கு அங்கு சென்றுகதவைத்

தட்டினான்,திறக்கப்பட்ட கதவிற்குப்பின்னே நிலா ஒன்று நின்றுகொண்டு

‘ஹாய் நான் ஸ்படிகா..டைரக்டர் நேத்திக்கே சொல்லி இருந்தார்..படத்தின்

காமெராமேன் ஷாரங் என்பவர் இன்னிக்குவருவார்ன்னு…ஆக்ட்சுவலி ஐயாம்

வெயிடிங் ஃபார் யூ சார்! வாங்க.. ‘ என்று வரவேற்றாள். பழகும் பண்பில்

அழகுகூடும் என்றால் என்றால் அது இந்தப் பெண்ணிற்குப் பொருந்துமென சாரங்

நினைத்துக் கொண்டான்.

வசுதாவைபோலவே ஹிப்போக்ரசி இல்லாத பேச்சு!

பதினெட்டுவருட முன்பு சந்தித்த கிராமத்துப் பெண் வசுதா இன்று மாடர்ன்

உடையில் அதே சிரிப்பும் வெளிப்படையான பேச்சுமாய் தன் எதிரே நிற்பது

போலத் தோன்றியது

எப்படிக்கேட்பது இவளிடம் உன் அம்மா பெயர்வசுதாதானே என்று ?

அவன் தயங்கும்போதே , ஸ்படிகா, ‘ சார்..அம்மா இங்கே பக்கத்துல கடைக்கு

ஏதோ தமிழ்ப்புத்தகம் வாங்கப் போயிருக்காங்க,ஷி ஈஸ் ஃபாண்ட் ஆஃப் புக்ஸ்!

பம்பாய்ல அதிகம் தமிழ் புக்ஸ் கிடைக்காதா அதான் சென்னை வந்ததும்

அள்ளிட்டுவரக் கிளம்பிட்டாங்க.. திரும்பி வரும் நேரம்தான்… இருந்து

பார்த்து பேசிட்டுப் போங்க சார் ப்ளீஸ் ? ‘ என்று அவன் சந்தேகத்தை

உறுதிபடுத்தினாள்.

வசுதா அடுத்த சில நிமிஷங்களில் உள்ளே நுழையும்போது, சாரங் அந்த

ஹோட்டல் அறையை ஒட்டிய

பால்கனியில் நின்று ஸ்படிகாவை அங்கே நிறுத்திவைத்து புகைப்படம் எடுக்கக்

கோணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஹாய்ம்மா!..காமெரா மேன் வந்து ஏழெட்டு ஸ்னாப்ஸ் எடுதுட்டார்மா..இன்னும்

ரண்டு எடுக்கணுமாம் பால்கனில… ‘ என்று குழந்தை

போலக் குதித்தபடி கூவினாள் ஸ்படிகா.

‘சரி..முடிச்சதும் நீ ஜிம்முக்குப் போகணும் மறந்துடாதே ஸ்படிகா.. ‘

வசுதாவின் குரல் பால்கனியில் நின்ற சாரங்கின் செவியைத்தழுவியது.

‘சார்.! ஆங்கிள் பாத்துட்டாங்களா ?.ரெடியா ? ‘

ஸ்படிகா கேட்டபடி அருகில் வந்தாள்

சாரங் சொன்ன கோணத்தில் நின்றாள்

‘ஆச்சும்மா ‘ என்று சாரங் சொன்னதும், ‘தாங்க்ஸ் சார்..நான் ஜிம்முக்குப்

போகணும் அம்மாவும் ‘புக் ‘கடைலிருந்து வந்துட்டாங்க நீங்க அவங்ககிட்ட

பேசுங்க…பைபை ‘ என்று கை அசைத்து விடை பெற்று வெளியேறினாள்.

சாரங்கிற்கு மனதோடு கால்களும் தயங்கின.

அதற்குள் வசுதாவே பால்கனிக்கு வந்தவள், சாரங்கைப்பார்த்ததும் ஒருக்கணம்

யோசித்தாள்

நாற்பதை நெருங்கும் வயதிலும் இளமையை அதிகம் இழக்காத அவளூடைய முகத்தை

நேருக்கு நேர் பார்க்கவே கூசினான் சாரங்.

வசுதா சட்டென அவனது வலது காலைக் குனிந்துபார்த்தவள் உடனே, ‘ ‘ஓ

நீங்கதான் டைரக்டர் சொன்ன காமெரா மேன் ஷாரங்கா ?

என்றாள் வெறுப்பான குரலில்.

‘ஆமாம் வசுதா..உன் பெண் போட்டோவை நேத்திக்குத் தான் பாத்தேன்

உடனேவே அது உன் பெண்தான்னு புரிஞ்சது.

உடனேயே எனக்கு மனசு துடிச்சது.வசுதா, நீ கெட்டிக்காரி, புத்திசாலி

.ஆனாலும் இந்தக் கனவுத் தொழிற்சாலையில் உன் பெண் காலடி வைக்க நீ

எப்படி சம்மதித்தாய் ? இங்கே இளமை ரசிக்கமட்டும்தான் ஆராதிக்க அல்ல என்று

உனக்குத் தெரியாதா ? ஆண்களின்

ஆளூமையில் இருக்கிற உலகத்தில் எந்த தைரியத்தில் உன் குழந்தையை நடிக்க

அனுமதிக்கிறாய் ? வேண்டாம் வசுதா ..ஸ்படிகாவை அழைத்துக் கொண்டு

திரும்பப்போய்விடு…. ‘

சாரங் உணர்ச்சிவசப்பட இப்படிச் சொன்னதும் முகம் சிவக்க அவனைப்பார்த்தாள்

வசுதா .

‘எங்கே போவது ? காதல் கனவை நனவாக்காமல் அப்பா சொல்கேட்டு

கோழையாய் காதலியை மறந்தவன் பின்னாடியா அல்லது அவனைப் பழி வாங்க

அவசர அவசரமாய் அந்தக் காதலி கல்யாணம் செய்து கொண்டு அவனிடம்

வெளிப்படையாய் பேசுவதாய் எல்லா உண்மயையும் சொன்னதில் சந்தேகம் கொண்டு

ஆறுமாதக் கைக்குழந்தையுடன் பெண்டாட்டியை நடுராத்திரில பம்பாய் ரயிலடில

விட்டு ஓடிப்போன

புருஷனைத் தேடிப் போவதா ? தாயில்லாப்பெண்ணாய் வளர்த்தவளின் வாழ்க்கை

தன்னால் இப்படிப் பாழாகிவிட்டதே என்று மாரடைப்பில் கண்மூடிப் போன

அப்பாவின் பின்னாடியே தற்கொலை செய்து கொண்டுதான் போவதா ?

ஆண்களுக்கு காதல் ஒரு ஆட்டொகிராஃப் புத்தகம்..அப்பப்போ

புரட்டிப்பார்க்கலாம்..மனைவிகிட்டே மனம்விட்டு அதை

பகிர்ந்துக்கலாம்…தோளில் ஒரு பைமாட்டிட்டு பழைய காதலியைத் தேடிபோய்

பார்த்துவிட்டுகூட வரலாம். ஆனா காதலனின்

ஸ்பரிசம்கூடப்படாத பெண்கள் உண்மை சொன்னால் அதை எல்லா ஆண்களாலும்

ஜீரணிக்க முடிவதில்லை…பதினெட்டுவருஷம் பம்பாயில் தன்னந்தனியா

கைகுழந்தையை வச்சிட்டு என் இளமையையும் பாதுகாத்துட்டு மானத்தோடுதான்

வாழ்ந்தேன். சகலமும் தெரிஞ்சவளாகப் பெண் இன்னிக்கு இருக்கணும்..விவரம்

தெரியாதவளாய் இருந்தால் உலகம் ஏமாற்றும் .மனதில் உரத்துடன் உடலில்

பலத்துடன்

வாழ்க்கையை ஏத்துட்டு, சிலநல்ல உள்ளங்கள் செய்த உதவியினால் மானத்தோடு

மகளையும் வாழவச்சிட்டு இருக்கேன். என் மகள் என்னைப்போல் தான்

இருப்பாள்..உங்கள் அட்வைஸ் எனக்குத் தேவை இல்லை..நீங்கள் போகலாம் ‘

என்றாள் உஷ்ணமானகுரலில்.

‘வசுதா ? ‘ கண்ணோடு வாய் கெஞ்சியது சாரங்கிற்கு. தொடர்ந்து ஏதோ பேச

வந்தவனைப் பார்த்து ‘பட் ‘ என்று இரு கை சேர்த்து

குவித்தாள் வசுதா.பிறகு வாசல்கதவு நோக்கி கை காட்டினாள்.

சாரங் மெளனமாய் நடந்தான். சற்றுமுன் வசுதா பேசிய வார்த்தைகள்

சாட்டையடியாய் நெஞ்சில் வந்து விழுந்தன.

வசுதாவின் வாழ்வில் தான் நொண்டிக் குதிரையாகவாவது உடன் செல்லாத

வேதனை சட்டெனத் தாக்கியது. மண்குதிரையாய் இத்தனை

நாளும் இருந்திருக்கிறோம் எனும் நினைப்பே அவன் நெஞ்சைப் பிழிந்தது.

இனியாகிலும் அவளது நாவிலிருந்து சவுக்கடி பெற்றாகிலும்

வண்டிக் குதிரையாய் வசுதாவின் வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாய்

முன்னேற்றிச் செல்ல மனம் தீர்மானித்தது.

ஹோட்டலைவிட்டு வெளியே வரும்போது சாரங்கின் வாய், தான் படித்த பாரதி

பாடலை முணுமுணுத்தது.

‘பெண்டுகளைத் தாய் போற் பிரியமுற ஆதரித்து

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்

பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்

எங்கிருந்தோ வந்தான்…. ‘

****

shylaja01@yahoo.com

Series Navigation

ஷைலஜா

ஷைலஜா