‘சொல்’’

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

மு.பழனியப்பன்


தெரியாமல் செய்யும் சின்ன சேட்டைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன, ஸ்ரீராமன் தெரியாமல் செய்த சின்ன சேட்டைதான். வில் வளைக்கும் வயதில், கூனி முதுகில் அவன் விட்ட அம்பு, சொல்லம்பாகி சோகம் தந்தது, நினைக்க, நினைக்க இதுபோல் பல கதைகள் தோன்றும், என்றாலும் இன்று காலையில் என் வாய் தவறி வந்த சொற்களுக்கு வலிமை இருக்குமா என்ன ?

சொல்லியிருக்கக் கூடாது, வார்த்தைகள் என்னை அறியாமல் விழுந்துவிட்டன,

அலுவலகத்திற்கு சைக்கிளில் போகும் வழக்கம் என்னுடையது, இந்த சைக்கிள் பயணத்தால் பல பயன்கள் உண்டு, ஒன்று பெட்ரோல் மிச்சம், யாரும் அலுவலகத்தில் கடன் கேட்க இயலாது, கேட்டாலும் ‘காற்று இல்லை,டியூப் வீக் ‘ என பல பதில்கள் தயார்,

மோட்டார் சைக்கிள் பயணம் என்றால் கடன் கேட்பவர் ‘பெட்ரோல்தானே போட்டாப்போச்சு ‘ என்று இருக்கிற ரிசர்வையும் உறிஞ்சு விட்டு, ஊர் சுற்றி விட்டு வந்து ‘இல்ல பாஸ், நேரம் ஆயுடுச்சி, கோபிச்சுக்காதிங்க,, இந்தாங்க பணம் ‘ என்று தந்தும் தராமலும் வழிவார், ‘அவரிடம் பணம் பெறுவது அவ்வளவு நல்லா இருக்காது ‘ என நாமும் பணத்தை வாங்க மறுப்போம், அடுத்த முறையும் அவர் கூச்சமின்றி வண்டி கேட்டு வந்து நிற்பார், இந்தத் தொல்லைகளுக்குப் பயந்துதான் என் பயணம் சைக்கிள் பயணம்,

மேலும் என் எடையில் குறிப்பிட்ட அளவைக் குறைக்கச் சொல்லி மனைவி தினம் துதி பாடுகிறாள், அவள் எதற்காக எடை குறைக்கக் கூறுகிறாள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விசயம், உங்களுக்குத் தெரிந்து இருந்தால், உங்கள் மனைவியும் துதி பாடுகிறார் என்று அர்த்தம், அந்த எடை குறைப்பு நடவடிக்கையின் ஒரு பங்காகவும் இந்த வெற்றிப் பயணம் தொடர்கிறது,

அலுவலகத்திற்குச் சைக்கிளில் போவது என்பது எளிதான செயல் அன்று, அதுவும் சென்னை போன்ற மா,,,,நகரங்களில் இது சற்று இம்சைக்கு உரிய அல்ப விசயமே, மோட்டார் சைக்கிளில் போகும், நம்மைவிட அழகான பெண்கள் நாம் ஏதோ குறைந்தவர்கள் போல வேகமாகக் கடந்து போவார்கள், அவர்களின் கழுத்தாடை, நமக்கு டா,,டா, சொல்வது போல் இருக்கும், கார் கனவான்கள் நம்மை ஜந்துவாகப் பார்ப்பார்கள், பேருந்துப் பயணிகள் சாய்ந்து தூங்கி நம்மைக் கிண்டல் செய்வார்கள்,

சைக்கிளிலில் போகும் நம்மை ஆட்டோவின் பையிங்,,,, பையிங் ஒலிப்பான் ஓசை மிரளச்செய்யும், சாலையை அடைத்துப்போகும் நகரப் பேருந்து நம்மை கடக்கவும் விடாது, தயங்கி நிற்கவும் விடாது, வளைவுகள் எதிரிகளாகும்,, ஏனெனில் எதிரில் வருபவர் என்ன நினைப்பில் வருகிறார் என்பது நமக்குத் தெரியாதல்லவா ?

இத்தனை இன்னல்களுக்கிடையில் மழை வந்தால் இன்னும் தொந்தரவு, வெயில் அடித்தால் மயக்கம் ஆட்கொள்ளும்,, மழை வந்தால் எருமை மாடாக வேண்டும், இப்படி இப்படி கடந்து வந்து அலுவலகம் சேர்ந்தால் நமக்குப் பணப்பட்டுவாடா செய்யும் கணக்குத்துறை உதவியாளர், மாருதி 800 ல் வந்து இறங்கிக் கேட்பார் ‘ சார் லேட்டாகவில்லையே ? ‘ என்று,,,, நேரந்தான், அவர் மாமியார் வீடு வாங்கித் தந்த கார் அது, இண்டேன் காஸ்ஸில் தண்ணீராய் ஓடுகிறது,, நமக்கு ஏது பாக்கியம், கார் நிறுத்தக் கூட இடமில்லை,

இராமாயணக் கதை நினைவுக்கு வந்தாலும், சைக்கிள் சோகம் கூறினாலும்,,,,

அந்த வார்த்தைகளை என் மனம் கூறியிருக்கக் கூடாது, எப்படி என் மனம் இத்தகைய வார்த்தைகளைக் கூறியது ? அந்த அளவுக்கு அது துன்பப்பட்டதா ?

‘அவன் பொண்டாட்டி தாலி அறுக்க’’ இது கூறும் அளவிற்கு ஒன்றும் பெரிய தவறு நிகழ்ந்து விடவில்லை,

என்றும் போல் அன்றும் சைக்கிள் சவாரி, அலுவலகம் நோக்கி,,,,சரியாக 20 நிமிடத்தில் அலுவலகம் அடைந்து விடலாம், எனினும் அன்று சோதனை, நான் கிளம்பியதே நேரம் கழித்துத்தான், பத்து நிமிடங்கள் மட்டுமே கையில்,. சாலை முழுவதும் ஊர்திகளின் திக்குமுக்காடல், நேற்று பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர்க் குட்டைகள்

இடம் கிடைத்த இடைவெளியில் நுழைய முற்பட்டேன், வேகமாக முன்னேறினேன், ஊர்திகளும் தடைபட்ட வெள்ளம் திறந்து விட்டதுபோல விரைந்தன, ஒன்றன் பின் ஒன்றாய்ப் போனபின் நிதானம் வந்தது,

இன்னும் பத்து நிமிடங்களில்,,,, அலுவலகக் கட்டிடம் தென்பட்டுவிட்டது, ஐயோ,,,, என் வெள்ளைச்சட்டையில் பேருந்து ஒன்றின் சக்கரத்திலிருந்து புறப்பட்ட சேற்றுநீர்த் தெறிப்புகள்,,,, மெல்ல நுழைந்து பரவி உலகப்படம் வரையப் பெற்றிருந்தது,, ஆஸ்திரேலியா எனது வேட்டியிலும் தெரித்தது,

மனத்திலிருந்து பீறிட்ட சொற்களின் வேகம் ‘அவன் பொண்டாட்டி தாலி அறுக்க’’

தெரியாமல் செய்யும் சின்ன சேட்டைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன, ஸ்ரீராமன் தெரியாமல் செய்த சின்ன சேட்டைதான். வில் வளைக்கும் வயதில், கூனி முதுகில் அவன் விட்ட அம்பு, சொல்லம்பாகி சோகம் தந்தது, நினைக்க, நினைக்க இதுபோல் பல கதைகள் தோன்றும், என்றாலும் இன்று காலையில் என் வாய் தவறி வந்த சொற்களுக்கு வலிமை இருக்குமா என்ன ?

வார்த்தைகளுக்கு வலிமை இருந்து பேருந்து ஓட்டுநர் மனைவி தாலி அறுத்துவிடுவாளோ ?, பேருந்து ஓட்டுநர் இறந்தே போவாரோ ?

ஒருவேளை அவர் மனைவியை இழந்தவராக இருந்தால்,,,, இந்த சிந்தனை இன்னும் மோசம், கைப்பையில் வைத்திருந்த குடிநீர் கொண்டு சட்டையில் இருந்த உலகப்படத்தை அழித்தேன், சேறு போனது,, ஆனால் தேசங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடுகள் மறையவில்லை,

—-

muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்