விமோசனம்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

சுப்ரபாரதிமணியன்


லண்டனுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஒடிவிட்டன . விசா காலம் ஆறு மாதங்கள் . இப்போது கூட ஊருக்குத் திரும்ப ஆசைதான். லண்டன் வர விசா பெற்றதும் வந்ததும், பாஸ்போர்ட் தொலைந்ததும் தனிக்கதை .

லண்டன் அலுத்துவிட்டதென்றால் வாழ்க்கை அலுத்துவிட்டது என்று அர்த்தம் என்றார் நண்பர். நண்பர் இன்னும் இங்கிலாந்துப் பிரஷையாகி விடவில்லை. அகதி அந்தஸ்த்தில் வாழ்கிறவர்.நண்பர் வேலையில்லாத இளைஞர் என்ற அடைமொழியிலான ஒருவகை உதவித்தொகையைப் பெற்று வந்தார்.அது தினமும் ஒருவேளைச் சாப்பாட்டையும் தட்டிப்பறித்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேலைக்குப் போவது பற்றித் தீர்மானித்திருந்தேன்.

பேப்பர் போடும் வேலை, விடுதிகளில், பேக்கரிகளில் ,கட்டிட வேலைகள் , சன்னல் கண்ணாடி சுத்தம் செய்வது என்று பட்டியலிட்டார். எனெக்கென்னவோ பேக்கரி வேலை பிடித்தமானதாகப் பட்டது. நம்மூர்களில் சாக்லெட்டுகள் என்றாலே பணக்காரர்கள் வஸ்து என்றிருந்தது.ஆனால் லண்டனில் பால் சம்பந்தமான பொருட்களின் விலை மலிவாக இருந்தது. சிலேட்டுகளின் அகலத்திற்குச் சாக்லேட்டுகள் சர்வ சாதாரணம் . லண்டனை விட்டு வெளியெ போனபோதெல்லாம் ஆடு, மாடுகளை ஆசையுடன் பார்த்திருந்தேன். செப்டம்பர், டிசம்பர் என்று மாறுபடும் குளிரையெல்லாம் தாங்கிக் கொள்ளும் படியானவை . இறைச்சிக் கடைகளில் கொழுப்பு தனியே அறுத்து அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். மிதமிஞ்சிய கொழுப்புதான் அந்த வகைக்குளிரைத் தாங்கிக் கொள்ளும்படியான கவசங்கள் என்றார்கள் . சுத்தமான பால், விதவிதமான கேக்குகள், சாக்லெட்டுகள் இவை ஒவ்வொரு வீட்டிலும் மதுபான வகைகள் இருப்பது போல் சாதாரணம். பேக்கரிகளில் வேலை செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்பது மனதில் ஊறிப்போயிருந்தது.

பேக்கரியில் வேலை செய்வது அவ்வளவு சுலபமல்ல,கடினமான வேலை . திடமான உடம்பு வேண்டும் . அடுப்புகளில் கிடந்து உழல வேண்டும் என்றார் நண்பர். பெட்ரோல் பங்குகளில் ஈழத்தமிழர்கள் நிரம்பப் பேர் வேலை செய்து வந்தனர். நல்ல வருமானமும் கூட. தினம் இருபது மணிநேரம் கூட உழைக்கலாம் . இந்திய நாட்டின் பிரதமரை விட இரண்டு மடங்கு சம்பளமாய் பெறலாம். ஆனால் வேலை கிடைப்பது கஷ்டமாக இருந்தது.

லண்டனை விட்டு வெளியே சென்றால் கிராமப்புறங்களில் பசுமையுடனும் , கொழுத்த பிராணிகளுடனும் சுகமாக இருக்கலாம் என்பது என் கற்பனையாக இருந்தது. லண்டனில் இருக்க நாள் தேர்வு செய்ததற்க்குக் காரணம் என் கறுப்பு நிறம்.ஏகதேசம் கறுப்பன் என்று தொனிக்கிற உருவம் . லண்டனில் வெள்ளையர்களுக்கு ஈடாக சம அளவில் கறுப்பர்கள் இருக்கிறார்கள். ஆசியர்களில் இந்தியா ,பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாட்டைச் சார்ந்த மாநிறத்தினரையும் சுலபமாகப் பார்க்க முடியும். லண்டனுக்கு வெளியே பர்மிங்ஹோம், மான்செஸ்டர், என்று போயிருந்த போது வெகுவாகக் கூச்சப்பட்டுக் கொண்டேன். அங்கெல்லாம் பெரும்பாலும் வெள்ளையர்கள்தான்.

என் கறப்பு நிறம் வெள்ளையர்களிடமிருந்து சுலபமாக என்னைப் பிரித்துக் காட்டிக் குறுகவைத்தது. அங்கெல்லாம் போய் என்னை அன்னியமாய்க் காட்டிக்கொள்வதை விட லண்டனிலேயே இருக்க முடிவு செய்தேன்.

லண்டனில் பெரும்பாலும் பாஸ்போர்ட், விசா பரிசோதனை இல்லை. முக்கிய இடங்களிலும், சுரங்கப் பாதைகளிலும் ,டெ¢ரோ ஸ்டேசன்களிலும் போலீசு காரர்கள் இருந்தாலும் சகசமான புன்னகையுடன் பார்ப்பார்கள் . மதர்த்த நாய்களைப் பக்ககலமாகக் கொண்டு ஓரிரு முறைதான் கேள்விகள் கேட்டிருந்தனர் . மெட்டிரோ ஸ்டேஜனில் இரவு பனிரெண்டு மணியை கடந்து விட்ட நேரத்தில் ஒரு நாள் அப்படி பிடி பட்டேன். சுட்டு விரலைக்காட்டி வா என்று அழைக்கிற அவசியம் இல்லாதபடிக்கு நானே அவர்கள் முன்னால் போய் நின்றிருந்தேன். அவர்கள் டே¢ட முதல் கேள்வி என்னவென்று புரியாததால் சிரித்தபடி இருந்தேன் . பாஸ்போர்ட் ப்ளீஸ் என்ற போது சற்று சுதாரித்தேன்.

பாஸ்போர்டின் முதல் நாலைந்து பக்கங்கள் ,விசா பகுதி ஷெராக்சு நகல் மட்டுமே இருந்தது.பர்சில் மடித்து வைக்கப்பட்டிருந்ததை எடுத்து நீட்டினேன். ஒருவன்

என் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான். குளிருக்கு அடக்கமாக இருந்த ஷெர்கினை இன்னொருவன் தடவினான். அவர்கள் ஏதோ சொல்லிச்

சிரித்தார்கள்.ஏளனமகாத்தான் இருக்க வேண்டும். பேண்ட் பாக்கெட்டிலிருந்து

மெட்ரோ டிக்கெட்டுகள் பஸ் டிக்கெட்டுகள், ஓரிரண்டு ஸ்டேர்லிங் நாணயங்கள், போன் கார்ட் ஆகியவை இருந்தன. அவற்றை எடுத்து நீட்டினேன். ஒரிஜினல் பாஸ்போர்ட் எங்கே ? என்று கேட்டது விளங்கியது. தேவையாயின் நீங்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டு வந்து நாளை காட்டுவேன் என்றேன் பள்ளி ஆசிரியர் போல் ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக பிளாக்கி என்றபடி ஒருவன் சிரித்தான். இன்னொருவன் என் தோளைத்தட்டி போகலாம் என்றான் . திமிரான நாய் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கண்களில் தெரிந்த குரூரம் பயமுருத்தியது. சட்டென ஒரு முறை குரைத்து என் பயத்தை அதிகமாக்கியது. பாக்கி என்பது டெ¢ட வார்த்தை போல ஒருவனிடமிருந்து வந்தது. பொதுவாக மாநிறம் உள்ளவர்கள் பாகிஸ்தானியர் என்பதால் இந்தியர்களைப் பார்க்கும் போதும் அதை வசை சொல் போல் தான் பயன்படுத்துவார்கள் என்று நண்பர் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. அல்லது அவன் என் பெயரை மனதில் வைத்துக் கொண்டு மற்ற நண்பர்கள் உபயோகிப்பது போலச் சுருக்கி பாக்கியநாதன் என்பதை பாக்கி என்று உச்சரிக்கிறானோ என நினைத்தேன்.

நான் தேர்வு செய்தேன் என்பதைவிட எனக்குக் கிடைத்த உத்தியோகம் கட்டிட வேலைக்கு உதவியாள் என்று சொல்லலாம். தொடர்ச்சியாக வேலை இருக்கும் என்பதை விட கட்டிட வேலை நடக்கம் இடங்களில் ஏதாவது அறையில் தங்கிக்கொள்ளலாம் என்பது சொளகரியமாக இருந்தது கட்டிட வேலைக்கு ஏற்றபடியான கையுறை,காலுறைகள் கனத்த சூக்கள் உடம்பை கதகதப்பாக வைத்திருக்க உதவின. இரவு நேரத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்தது. உடம்பைச் சூடாக்கும் மதுபானங்களைப் போலவே என் உடம்மைச் சூடாக்க இவை பயன்படும் என்பதும் நண்பருக்கு என் தரப்புத் தொல்லைகளிலிருந்து விடுதலை தந்தேன் என்பதும் ஆசுவாசமளித்தது.

கொஞ்சம் கடினமான வேலைதான். ஊரில் இருந்து கொண்டு இப்படி கடினமான வேலையைச் செய்யத் தனி மனித , குடும்ப கொளரவம் இடம் தராது என்றாலும் முகம் தெரியாத ஊரில் இப்படி வேலை செய்வது ஆனந்தமாகத்தான் இருந்தது. கட்டிட வேலைசெய்ாவர்களில் பல நாட்டவர்கள் இருந்தனர் . பாகிஸ்தான், அல்ஜீரியா, பங்களாதேஷ், போர்ச்சுகீஸியர் என எனக்குத் தலையாளாக இருந்தவன் பாகிஸ்தானி. மிதமான வெளுப்பு நிறத்தில் இருந்தான். இன்னும் ஐந்து வருடங்கள் இங்கிலாந்தில் இருந்து விட்டால் போதும். என் தோலும் இளம் வெளுப்பாகி விடும் . நானும் வெள்ளைக்காரன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்பான். அவனுக்கும் எனக்கும் பெரிதாய் முரண்பாடுகள் எதுவும் தோன்றியதில்லை. நம் நாட்டு எல்லைகளில் எவ்வித பெரிய சச்சரவும் இல்லை . அவ்வப்போது எச்சரிக்கையாக வெடிக்கப்படும் குண்டுகளைத் தவிர வேறு அசம்பாவிதங்கள் இல்லை. இனியொரு போர் மூள இரு நாட்டின் பொருளாதார நிலைகளும் இடம் தராது. இடிக்கப்பட்ட பாபர் மசூதிகள் இல்லை. இனியும் மசூதிகள் இடிக்கப்படாமல் காப்பதற்க்குத் தற்காலிக தீர்மானங்கள் உள்ளன. எனவே, அதுவரைக்கும் நாம் நண்பர்களாக நீடிப்பதில் எந்த சிரமமும் இல்லை என்பான்.

வால்தம்ஸ்டவ்வில் கட்டிட வேலை ஒன்று நடந்து கொண்டிருந்த போது என்னை நிலை குலைய வைத்துவிட்டான் அவன் . அந்தப் பகுதியில் கணிசமான அளவில் பாகிஸ்தானியர்கள் இருந்தனர் . கோஜா போடாமல் பாகிஸ்தான் பெண்களை அடிக்கடி காண நேரிட்டது. கட்டிட தலைமையாளனைத்தேடி நுறைய பாகிஸ்தான் பெண்கள் வர ஆரம்பித்தனர். அவன் இருக்கிறான் இல்லை கட்டிடச் சாமான்களை வாங்கிச் சென்றிருக்கிறான் . அவனுக்குப் பிடித்தமான

இட்டாலியன் பீட்சா சாப்பிடச் சென்றிருக்கிறான். ஜேவ் செய்யச் சென்றிருக்கிறான் என்ற ரீதியிலான தகவல்களை நான் தர வேண்டியிருந்ததால் அவர்களுடன் பேசும் சந்தர்ப்பங்கள் வெகுவாக அமைந்தன. ஒவ்வொரு முறையும் நான் இந்தியக்காரன் என்பதை எப்படியோ ஞாபகப்படுத்தியும் வந்தேன். உனது நிறத்தைப் பார்த்து ரொம்ப தூரத்து , வெயில் தேசத்துக்காரன் என்று நினைத்துக்கொண்டிருந்தோம் . ரொம்பப் பக்கம் வந்துவிட்டாய் . பூண்டு,மசாலா போட்டு மாட்டுக் கறி செய்யத் தெரியுமா என்ற ரீதியில் பேச ஆரம்பித்தார்கள். அவர்களின் வெயில்படாத மேனி என்னை வெகுவாக இம்சிக்க ஆரம்பித்தது.சிரமப்பட்டேன்.

அப்போது ஐ.ஆர்.ஏ.யின் அனுதாபிகள் சில இடங்களில் குண்டுகளை வெடித்திருந்தது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதனால் போலீஸ்காரர்கள் போகிற பக்கமெல்லாம் விசாரிக்க ஆரம்பித்திருந்தனர்.பாஸ்போர்ட் தொலைந்து திருடு போன விஜயத்தை கட்டிடத் தலைமையாளன் பாகிஸ்தான்காரனிடம் சொன்னேன் எதேச்சையாக கெடுபிடியில் வெளியே போகாதே வெளியில் போய் மாட்டிக் கொள்ளாதே . புது வர்ணங்கள் அடிக்கப்பட்ட கட்டிடத்தின் வாசனையை நன்கு முகர். ஏதாவது அறை மூளையில் ஒதுங்கு . கண்ணயர்ந்தால் போதும். குளிரான பகல் வருகிற வரை தூங்கலாம். உன் திருடுபோன பாஸ்போர்டில் இருக்கும் படத்தில் உன் தலையை வெட்டி எடுத்துவிட்டு வேறு யார் தலையையாவது ஒட்டவைத்திருப்பார்கள். உன் இந்தியப் பயணத்தில் ஒரு இலட்சத்திற்கோ ,இரண்டு இலட்சத்திற்கோ சுலபமாக விலை போகும். எலகம் முழுக்க இந்தியர்கள் சுலபமாக பரவிக் கிடக்கிறார்கள் . இந்திய பாஸ்போர்டுகளுக்கு ஏக கிராக்கிதான். … எப்போது வேண்டுமானாலும் விசாரனைக்கு தள்ளிச் செல்லப் படலாம் என்ற குற்ற உணர்வு என்னை முடங்கச் செய்தது.

கட்டிடத்திலேயே தங்க வசதி இருந்ததால் பெருதாக வெளியில் செல்ல விருப்பமும் ஏற்படவில்லை. வால்தம்ஸ்டவ் கம்யூனிடி சென்டர், பார்கிங் இடம் என்று போலீஸ் தென்படாத இடங்களில் மட்டும் சுற்றித் திரிந்தேன். கோஜா அணியாத பாகிஸ்தான் பெண்கள் ரொம்பவும் இம்சித்தார்கள். குட்டைப் பாவாடைகளுடன் தமிழ் முகங்களாய்த் தென்பட்ட பெண்கள் இலங்கையினராக இருந்தார்கள்.

எங்களுடன் இருந்த அல்ஜீரியன் அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருந்தான் பாரீஸில் பார்த்தாயா…… மெட்ரோவில் வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. குப்பைத் தொட்டிகளில் , கழிவறைகளில் கூட. சாவதற்கு முன் ஒரு தரம் பாரீஸை பார்த்து விடு என்ற அதன் அழகை அமெரிக்கர்கள் வியந்து சொல்வார்கள். ஆனால் இன்று பாரீஸ் குப்பைத் தொட்டியாகிவிட்டது எங்கள் நாட்டுத் தீவிரவாதிகள் எங்கெல்லாமோ வெடிகுண்டுகள் வைத்திருக்கிறார்கள் . ஈபில் டவரை தர்த்துவிட்டு என்ன வடிவத்தில் நிறுத்தப் போகிறோம் என்று ஒரு வரைபடம் போட்டிருந்தார்கள் பார்த்தாயா . அவர்கள் இங்கு வந்துதவிட மாட்டர்கள்தான்….. பாகிஸ்தான் மேஸ்திரி ஒரு நாள் குதூகலமாய் இருந்தான்.

எங்கள் தலைநகருக்கு அடுத்த கட்டிட வேலைக்குப் போகப் போகிறோம்.

உங்கள் தலைநகரமா.

ஆமாம். லண்டனில் இருக்கும் லம்ப் லேன் பகுதியை பாகிஸ்தான் தலைநகரம் என்போம். அப்பகுதியில் இருப்போர் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர். செளத் ஹால் பகுகதியில் எப்படி இந்தியர்கள் அதிகம் வசிக்கிறார்களோ அது மாதிரி.

சரி உன் சொந்த நாட்டின் தலைநகருக்குப் போவதாக உத்தேசம் இல்லையா….

போய் என்ன செய்யப் போகிறோம்.பூண்டும், மசாலாவும், எள் என்னையும் கலந்த உணவு. வேர்வை , புழுதி, வறுமை ,வேலையின்மை. இங்கே அடிமைத்தனம் இல்லையென்றாலும் ஒரு வகை சொகுசுத் தன்மை இருக்கிறது.எதற்கும் தட்டிக்கழித்து வெறுப்பேற்றாத வெள்ளைக்காரிகள் இருக்கிறார்கள். நம்மூர்ப் பெண்களைப் போலில்லாமல் எவ்வித கூச்சத்தையும் தகர்த்தெரிந்தவர்கள். சுலபமாக பெண்கள், கண் செருக குடிக்க வசதி. போதும் வாழ்கை….

லம்ப்லேன் பகுதிக்குச் செல்லும் போது பாகிஸ்தான் மேஸ்திரி தேம்ஸ் நதிக்கரைப் பகுதிக்கு ஒரு நண்பரைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்றான். இரவு நேரத்தில் தேம்ஸ் நதிக்கரை மினுங்கிக் கொண்டிருந்தது. நதியில் தண்ணீர் குறைவாய் இருந்தது. நதியில் வாழ்ந்து வரும் நாரைகளும் , கொக்குகளும் பெருமளவில் போதிய தண்ணீர் இல்லாததாலும், சுவாசிக்கத் தேவையான பிராணவாயு கிடைக்காததாலும் இறந்து கிடந்தன.எங்களுடன் வேலை செய்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் அதைப் பார்த்து விட்டு கதறியழ ஆரம்பித்தார். எங்கள் நாட்டில் கூட இப்படித்தான் கொத்து கொத்தாய் சடலங்கள் கிடக்கும்… மேஸ்திரி லேசாகப் புன்னகைத்தான் . லம்ப் லேனில் இரண்டு நாள் இருந்தாயென்றால் உன் சோகம் முழுவதும் கரைந்துவிடும்…..

லம்ப் லேன் மிகவும் வசீகரமாவே இருந்தது. இந்தியர்களை நினைவூட்டும் பாகிஸ்தான் பெண்கள் நிரம்பத் தென்பட்டனர். அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் பதினான்காவது மாடியை விரிவுபடுத்த வேண்டிய வேலை எங்களுக்காயிற்று. மூன்று பெரிய மசூதிகள் இருந்தன.

இது உங்கள் பகுதி என்று சொந்தம் கொண்டாடுகிறாயே.மாலை, இரவு நேரங்களில் தெருக்களில் நின்று அழைக்கும் பெண்கள் கூட உங்களவர்களா..

பாகிஸ்தான் மேஸ்திரிக்கு கோபம் வந்துவிட்டது. அவனுடைய சிவந்த முகம் தீப்பிழம்பு மாதிரியாகிவிட்டது.

இன்னொருதரம் இப்படியெல்லாம் கேட்டுவிடாதே. நம் நட்பு பாதுக்கப் பட்டு விடும் . அவர்களெல்லாம் வெள்ளைக்காரிகள்.இந்த வகை வெள்ளைக்காரிகளால்

பெரிய பிரச்சினை.மசூதி வாசல்களிலும், தெருக்களிலும் இவர்கள் வந்து நிற்பதை எங்கள் முல்லாக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் , ஆனால் அவர்கள் வேறு இடம் போகாமல் அடம்பிடிப்பது வழக்கம். மசூதிக்குச் செல்ல வேறு வழிகளும் இல்லை. எங்களுக்குப் பெரிய சிக்கல்தான்…..

போலீஸ் உபயோகப் படமாட்டார்களா.

சில சமயம் உதவுவார்கள். பெருரம்பாலும் அவர்கள் இந்தத் தெருவிற்கே வருவதில்லை. வந்தாலும் இவர்களுடைய ஏஷண்டுகள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள்.

வேலை முடிந்து மாலை நேரங்களில் கண்கள் சிவக்க எதையாவது ஊற்றிக் கொண்டு தெருக்களில் நடப்போம். உடம்பு இம்சைப்படும். அரைகுறைஆடைகளில் நிற்கும் மினுமினுத்த தோலினர் மிகவும் சிரமப்படுத்தினர். பெரிதான சேமிப்பு எதுவும் இல்லாதது எங்களை உறுத்திக் கொண்டே இருந்தது.மேஸ்திரியிடம் பெரிதாக அட்வான்ஸ் கேட்க முடியாது. எனக்கு உடம்பு முடியாமல் இருந்தபோது அவன் எனக்காகச் செலவழித்த தொகையை நான் ஈடுகட்டவே சில மாதங்கள் ஆகும்.

நாலைந்து பேர் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம். கிறுஸ்துமஸ் அல்லது புத்தாண்டு இரவுகளில் எல்லோரும் சேர்ந்து பணம் சேர்த்து ஒரு வெள்ளைக்காரியை அழைத்து வந்து தங்க வைப்பதென்று. கிறுஸ்துமஸ்ஸிர்க்கும் புத்தாண்டிற்கும் சில மாதங்கள் இருந்தன.

அன்றைக்கு மசூதித் தெரு வெள்ளைக்காரிகளை நினைத்துக் கொண்டே மிதமாகக் குடித்தேன். எதற்கும் கொஞ்சம் மிச்சம் இருக்கட்டுமே என்று சில பவுண்டுகளும், சில பென்னிகளும் பாக்கெட்டில் தட்டுப்பட்டன. ஒரு வகைத் தள்ளாட்டத்துடன் மசூதித் தெருவிற்குச் சென்ற போது ஏதாவதொரு மூலையில் நின்று கொண்டு ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. முழுதாய் ஒரு பெண்ணை தொட முடியாத முப்பது வயது. ஊருக்குத் திரும்ப முடியாமல் ஏதோ இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் துன்பம். மசூதித் தெருவுக்கு வருவது என்று முடிவு செய்திருந்தும் சரியான ஆடையைத் தேர்வு செய்து அணிந்து வராதது பெரிய குறையாகப்பட்டது. வேலையிலிருந்து அப்படியே பாருக்குப் போனதால் எல்லாம் அழுக்காகவே இருந்தன.

டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் ஒன்றின் ஓரத்தில் நின்றிருந்த வெள்ளைக்காரியிடம் சென்றேன். மெல்லப் புன்னகைத்தேன். பாக்கெட் சிகரெட்டை எடுத்து நீட்டினேன். நானும் பற்ற வைத்துக் கொண்டேன் . அவள் சிகரெட்டை ஏற்றுக் கொண்டது சந்தோஜம் தந்தது அவளின் வலது கையைப் பிடித்து முத்தமிடுகிற இயல்புடன் முகத்தை நீட்டினேன். அவள் தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

உன் ஷென்மம் முழுவதும் உழைத்து விட்டு என்னிடம் வா. அவள் குரலில் ஒரு வகை கடுமை இருந்தது. சிகரெட்டை நீண்ட மூச்சாய் இழுத்து, காலில் போட்டு நசுக்கினாள் . முத்தமிட ஒரு தொகை , உடம்பைக் காட்ட ஒரு தொகை,உடம்புடன் இருக்க ஒரு தொகை.. தெரியுமா… என்றாள்.

உம்…

நீ வேறு தெருவுக்குப் போக வேண்டியவன்.

என்னிடமும் கொஞ்சம் இருக்கிறது….

பென்னீஸ் இருக்கலாம் …. விஜமத்துடன் சிரித்தாள். உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள் . குதியுயர்ந்த கால் செருப்பை கழட்டி விட்டாள். டிபார்ட்மென்ட் ஸ்டோர் கண்ணாடியின் ஓரப் பகுதியில் முகம் பார்த்தாள். ப்ளீஸ் என்றேன் ஒரு வகையான சுய இரக்கத்துடனான கெஞ்சலுடன். வேண்டாம் போய்விடு.எனக்குத் தேவையான பணம் உன்னிடம் இருக்காது. வலதுகையை நீட்டி அவளைத் தொட முயன்ற போது என் மார்பில் கை வைத்துத் தள்ளினாள். ஸ்டோரின் கண்ணாடிப் பகுதியில் விழுந்தேன் உள்ளிருந்து ஓடி வந்த ஒருவன் என்னைத் தூக்கி நிறுத்தி முகத்தில் ஓங்கி குத்துவிட்டான் . நான் விழுந்த வேகத்தில் அவன் என் புட்டத்தில் உதைத்தான் . நான் சுருண்டு கொண்டேன். என் வாய் உப்பு கரித்தது. ஏஷண்டாக இருக்கலாம்.

ஒரு வெள்ளைக்காரியைத் தற்காலிகமாய் அடைவதற்காய் சேமிப்பு செய்வது என்பது எனது உடனடி லட்சியமானது. மேலே விமானம் ஒன்று பறந்து எழுப்பின சத்தத்தில் வானம் பார்த்தேன். அதன் உருவம் சிறுத்து ஆகாயத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிற மாதிரி பட்டது. ஏதாவதொரு விமானத்தில் இடம் கிடைத்தால் போதும் . புது பாஸ்போர்ட், விமானப் பயணச் சீட்டு செலவிற்கு சேமிப்பது என்ற லட்சியம் மாறி, ஏதாவதொரு வெள்ளைக்காரியைத் தற்காலிகமாய் அடைவதற்குப் பணம் சேர்ப்பது உன்ற லட்சியம் பற்றி நினைக்கையில் வருத்தம் மிஞ்சுகிறது.

srimukhi@sancharnet.in

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்