ஒரு குறை! ஒரு நிறைவு!

This entry is part [part not set] of 8 in the series 20000625_Issue

அனுஷா


ஐந்தாவது பிறந்ததும் பெண்பிள்ளை என்று, நர்ஸ் சொன்னதும் நெஞ்சே ஒருகணம் நின்று உயிர் போய் உயிர் வந்தது! ஒவ்வொரு பேறு காலத்தின் முடிவிலும் டாக்டரம்மா எனக்கு எச்சரிக்கைதான் செய்கிறாள். நானும் பிழைத்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரு வேளை, ஆறாவது பிள்ளை யாவது ஆணாகப் பிறந்து என் வயிற்றில் பாலை வார்க்காதா, என்ன ?…..

இருபது ஆண்டுகளாக தவமிருந்தும் தீராத ஓர் ஆத்ம தாகம்! பொங்கிப் பொங்கி மோதும் கடல் அலையாய் வருகிறது! நெஞ்சின் உட்கருவைச் சுட்டெரித்து, உடல். உயிர் இரண்டையுமே உருக்கி திரவ மாக்குகிறது! அதற்கு வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை. செய்யாத தர்மம் இல்லை. இரவு பகல் எந்நேரமும் என்னைப் பேயாய்ப் படுத்த, செக்குமாடாய் ஒன்றையே சுற்றிச் சுற்றி, மயக்கம் அடைகிறேன்.

இந்தப் பாழும் வயிற்றில் ஓர் ஆண் மகவு பிறக்காதா ? வேண்டாத பெண் ஜென்மங்களாய் பிறக்கிறது. அதற்கு என் கருப்பையில் தான் பிசகா ? அல்லது அவர் விந்து தான் காரணமா ? ஒவ்வொரு பிரசவத்திலும் எனக்கு ஏமாற்றம்தான்! இந்த அக்கினிப் பரீட்சைக்கு நானே பலியாகி விட்டால், பிறகு இந்த ஐந்து பிள்ளைகளையும் யார் கப்பாற்றுவது ? பிறக்கும் பெண் பிள்ளைகளைக் கண்டு கண்ணீர் வடிக்கிறேன்.

தெய்வமே! உனக்குக் கருணை இல்லையா ? எப்போது எனக்குப் புலிக்குட்டிபோல் ஓர் ஆண் மகன் பிறப்பான் ? ஐந்தில் ஒன்றாவது ஆணாகப் பிறக்கக் கூடாதா ? தினமும் நொந்து நொந்து வேகிறது மனம்! ஆத்மாவின் அந்தரங்க சுத்தமான ஆசையெல்லாம் நிறைவேறும் என்பதெல்லாம் உண்மை தானா ?

என் உடம்பையே பகடைப் காயாக வைத்து சூதாட்டம் ஆடுகிறேன். இதுவரைத் தோற்றால்தன் என்ன ? ஒரு முறையாவது வெற்றி கிட்டாதா ? எனக்கு அதில் பயம் இல்லை. துணிச்சல் இருக்கிறது. தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இந்தப் பம்பாய் நகரில் பெரிய குடும்பத்தையும் பராமரித்து விடலாம் என்ற குருட்டு ஊக்கம் உள்ளது. அசையாத திடசக்தியோடு அடுத்தடுத்து விதியோடு மோதிப் பார்க்கிறேன். முதலில் பிள்ளை வரம் பெற்று, எமனையே ஏமாற்றி இறுதியில் கணவன் உயிரை மீட்க வில்லையா, சாவித்திரி ?

ஆனால் இப்போது பார்த்து எங்கள் தாம்பத்திய உறவு அற்று விடுகிறது. என் கணவர் என்னைத் தீண்டுவதில்லை! கண்ணோடு கண்ணினை நோக்கி, காந்தவலை வீசி என்னைக் கவர்வ தில்லை! பின்புறம் பூனைபோல் நெருங்கி, கட்டியணைத்து என் நெஞ்சிளகப் பிணைத்துக் கொள்வதில்லை! ஏன் ?…. ஐந்து குஞ்சுகள் பொரித்து விண்ட கூடாக இருக்கிறேன், இப்போது! சுட்ட கத்தரிக்காய் போல் சூம்பிய என்முகம், அவரைக் கவர முடியவில்லை! ஒட்டி உலர்ந்து தொங்கும் எனது கொங்கைகள் அவரது விழிகளைச் சுண்டி இழுப்பதில்லை! எனது அருகாமையை அவர் மிகவும் வெறுக்கிறார். என்னை விட்டுத் தூர விலகிச் செல்கிறார். ஐந்து ஜீவன்களைப் பெற்றபின் பட்டமரம் போல் காட்சி அளிக்கிறேன். பெண் மேனியில் மிளிரும் காந்த சக்தி எனக்கு மந்தமாகி விட்டது. இளமையில் துளிர்க்கும் வளர்பிறை போய், எனக்குத் தேய்பிறைக் காலம், இப்போது! பாலை வனத்தில் தாகத்தோடு அலைகிறேன்!

அவரோ சீர் குலையாமல், சிங்கம் போலிருக்கிறார். மன்மதன் இவரைப் போல்தான் இருக்க வேண்டும்! என்னைப் போல் அவருக்கும் நாற்பது வயதுதான். முப்பது வயது வாலிபன் போல் முறுக்குடனும், செருக்குடனும் கன்னிப் பெண்களைக் காமக் கண்களோடு விழுங்கிக் கொண்டு திரிகிறார்.

இப்போது அடிக்கடி எங்களுக்குள் சண்டை வருகிறது. பயங்கரச் சண்டை! வாய்ச் சண்டைதான்! கருத்தொருமித்து, காதலித்து, கல்யாணம் செய்து கொண்ட கலியுகத் தம்பதிகள்தான்!

காதல்! காதல்! காதல்!

காதல் சற்றே கசந்து போயின்,

மோதல்! மோதல்! மோதல்!

பண விஷயத்திலே தான் முதலில் சண்டை துவங்கும். அது பிறகு மகா யுத்தமாக முடியும்! பல நாட்கள் எங்களுக்குள் பேச்சு வார்த்தையே இருக்காது.

பம்பாய் நகரில் செம்பூரில்தான் எங்கள் வாடகை வீடு. அபார்ட்மெண்ட் கட்டடத்தில் ஒரு பகுதி. முன்னூறு ரூபாய் வாடகை. எங்கள் மாளிகையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். சோப் பாக்ஸ் பிளானில் கட்டிய வீடு! முன்னால் ஓர் அறை. பின்னால் சமயற் கட்டு தனி. இடையில் கக்கூஸ் உடன் குளியல் அறை. இந்த பங்களாவில் தான் ஆறு பெண்கள், ஓர் ஆண்! ஏழு உயிர் ஜென்மங்கள் உண்பது, உறங்குவது, குளிப்பது, உடை மாற்றிக் கொள்வது, பிள்ளைகள் படிப்பது,

பெற்றோர் சண்டை இடுவது, பின் சமாதான மாகி இரவில் உறவு கொள்வது, எல்லாம்!

ஆபீஸிலிருந்து கணவரின் சம்பளப் பணம் கையில் முழுசாக எண்ணூறு ரூபாய் வருகிறது. வீட்டு வாடகை மற்றும் கணவர் கைச் செலவு போக, எஞ்சிய தொகை நானூறு என் கையில் விழுகிறது. சரியான உணவு உண்டா ? உடை உண்டா ? ஒரு சினிமா உண்டா ? மாதக் கடைசியில் பணம் பற்றாமல் கடன் வாங்க வேண்டி வரும். கடன் வாங்குவது அவர். கடனை அடைக்க வேண்டியது என் பொறுப்பு! நான் எங்கே சம்பாதிக்கிறேன் ? சண்டையின் ஆரம்பமே இங்குதான்!

சண்டை அமர்க்களப்படும். சாப்பிடும் தட்டுகள், பறக்கும் ஸாசர்களாய் பறக்கும்! இறுதியில் அவர் சாப்பிடாமல் வெளியேறி விடுவார். தலை மறைவில் இருந்து, சில நாட்கள் கழிந்து வருவார். பின் என்னிடம் இரவில் கொஞ்சுவார்! ஐந்து பிள்ளைகள் எப்படி பிறந்தன ? இப்படித்தான்! இது சகஜமாக நடப்பது! அபூர்வ காதல் தம்பதிகள்!

இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து ஓர் அதிர்ச்சி செய்தி வருகிறது எனக்கு. நோயில் கிடந்த என் தந்தை இறந்து விட்டதாக தங்கை வாணி, மதுரையிலிருந்து தந்தி அடித்திருந்தாள். நான் மட்டும் அவசரமாய் ரயிலில் மதுரைக்குச் செல்கிறேன். மூன்றாம் நாள் போய்ச் சேர்ந்த நான், வெறும் வீட்டைத்தான் கண்டேன். எல்லாம் அதற்குள் முடிந்து விட்டது. வாசலில் நின்று கொண்டு கதறிக் கதறி அழுகிறேன்.

துக்கம் உருக்கி விட்ட வாணியைக் கண்டு என் இதயம் துடிக்கிறது. அம்மா இறந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன. வாணி இப்போது தனி மரம்! முப்பது வயதைத் தாண்டிய குமரி! இதுவரை ஓரு கல்யாண ஏற்பாட்டைக் கூட அப்பா செய்ய முடியவில்லை. அதற்குள் கண்ணை மூடிவிட்டார்.

வாணிக்கு மூன்று தடவை நிச்சயமாகி, திருமணம் நடக்காமல் நின்று விட்டது. அதற்குப் பின் அவளும் கல்யாணமே வேண்டா மென்று வெறுப்புடன் வேலை பார்க்கிறாள். பி.ஏ. பட்டதாரியான வாணி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் டாச்சராக இருக்கிறாள். கட்டுக் குலையாத மேனி! கவர்ச்சியான தோற்றம்! தங்கக் குடம்போல் உடம்பு! எடுப்பாய் எழுந்த கொங்கைகள்! அவளுக்கு என்ன குறை ? ஒரே ஒரு குறைதான்! பொங்கிவரும் முழு நிலவா, முகம் ? இல்லை! அரை நிலவு! காந்தவலை வீசும் கண்கள் இரண்டா! இல்லை! ஒன்றுதான்! வாணிக்கு ஊனமாய்ப் போனது ஒரு கண்! சிறு வயதில் பெரியம்மை நோய் வந்து, ஒரு கண்ணில் வெள்ளை விழுந்து விட்டது. கறுப்புக் கண்ணாடி போட்டு மறைத்துக் கொள்கிறாள். அப்போது அவளைப் பார்த்தால், எழில் அரசி, ஊர்வசிதான்!

திருமணச் சந்தையில் இரண்டாம் தாரம், ஏன் மூன்றாம் தாரமாக் கூட வாணி விலை போகவில்லை!

வாணியை நான் என்னுடன் பம்பாயிக்கு அழைத்து வந்து விட்டேன். அதுதான் நான் செய்த முதல் பிசகு! நாகரீகப் பம்பாய் நகரம் அவளைப் புதிய பறவையாய் ஆக்கியது! எங்கெங்கு நோக்கினும் எழில் பாவையர்! கண்கவரும் ஆடவர்! அவளது பெண்மை கட்டுமீறிப் பொங்கி எழுந்தது! நடை, உடை, பாவனை, நளினம் எல்லாம் மாறி, அவள் ஓர் அழகு மேனகையாகத் தோன்றினாள்!

வந்த உடனே வாணிக்கு கல்லூரியில் டாச்சர் வேலை கிடைத்தது, என் கணவர் உதவியால். ஆயிரம் ரூபாய்ச் சம்பளம்!

வாணியின் கால்கள் தரையிலே இல்லை! வானில் பறந்தாள், விடுதலைப் பறவையாய்! வீட்டில் பணம் செழித்தது. அவள் சம்பாத்தியத்தில் எல்லாருக்கும் நல்ல சுவையான உணவு! வயிறு நிறைய உணவு! அலங்கார உடை! உல்லாசப் பொழுது போக்கு! பிள்ளைகளுக்கு வாணியை மிகவும் பிடித்து விட்டது. ‘சித்தி, சித்தி ‘ என்று எல்லாரும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தார்கள்! என் கணவரோ, அவள் காந்த மண்டலத்தில் இழுக்கப்பட்டு, அவள் நிழலாய் ஒட்டிக் கொண்டு விட்டார்!

வாணி என் கணவரைக் கைப்பற்றி, என்னிடமிருந்து அவரைக் களவாடிக் கொண்டாள்! வீட்டில் அவளே அவருக்கு காஃபி கொடுப்பாள். சாப்பாடு போடுவாள். குளித்தபின் அவருக்குச் சட்டையை எடுத்துக் கொடுப்பாள். டையைக் கழுத்தில் மாட்டிவிடுவாள். பட்டனைத் தைத்துக் கொடுப்பாள். அவர் படிக்கும் புத்தகங்களைத் தானும் படிப்பாள். படித்துத் தர்க்கம் செய்து ஆனந்தப் படுவாள்.

மனைவி என்ற பெயரில் நான் ஒருத்தி முன்னால் இருந்தும், இருவர் கண்களுக்கும் தெரியாது போயிற்று!

பிரவசி இல்லாத சோப்பாக்ஸ் வீட்டில் நெருங்கிப் பழகவும், விரிந்த பம்பாய் நகரில் திரிந்து புரளவும், இருவருக்கும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன! எங்கும், எப்போதும், எதற்கும் இணைந்தே போவார்கள். இணைந்தே வருவார்கள். அபார்ட்மெண்டின் மொட்டை மாடியில் மாலையிலும், இரவிலும் மணிக்கணக்காய் உரையாடுவார்கள். ஒன்றாக இருப்பார்கள்.

பொருமினேன், நான்! புழுங்கினேன், நான்! வெடித்தேன், நான்! என்ன பயன் ? அவர்களது நட்பு இறுகிக் கொண்டது! இருவரில் ஒருவரைப் பிரிப்பது என்று முடிவு செய்தேன். யாரைப் பிரிப்பது ? எப்படிப் பிரிப்பது ? சம்பாதிக்கும் கணவனை வெளியேற்றுவதா ? அல்லது மணமாகாத, அனாதைத் தங்கையை விரட்டி விடுவதா ? எதைச் செய்வேன், நான் ? மதுரையிலிருந்து அவளைப் பம்பாயிக்கு அழைத்து வந்தது, என் மூடத்தனம்! வாணிக்குச் செய்த கல்யாண ஏற்பா டெல்லாம் எதுவும் பலன் தரவில்லை! பார்த்து விட்டுப் போனவர் யாரிட மிருந்தும் திரும்பக் கடிதம் வருவதில்லை! இந்த விபரீத நட்பு எதில் போய் முடியப் போகிறது ? தீயின் அருகில் ஈசல் வட்ட மிட்டுக் கொண்டே இருந்தால் என்ன நடக்கும் ? இரவும் பகலும் எனக்கு வேதனைதான்!

எது நடக்கக் கூடாது என்று பயந்து கொண்டிருந்தேனோ, அதுவும் நடந்து விட்டது! ஒரு நாள் காலையில் குளியல் அறையில், யாரோ வாந்தி எடுக்கும் அரவம் கேட்டு, எழுந்து வந்து பார்த்த எனக்குப் பகீரென்றது! தொண்டையில் ஏதோ அடைத்தது, எனக்கு. நெஞ்சே பிளந்து இரு கூறாக விழுவதுபோல் வலித்தது! என் அருமைத் தங்கை வாணிதான்! வாணியேதான்! எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.

‘அடிப் பாவி! என்ன காரியம் செய்தே ? இது துரோகம்! வெட்கக் கேடு! மானம் மரியாதையோடு இனி எப்படி வாழ்வது ? இந்தப் பெண்பிள்ளைகள் என்ன நினைக்கும், உன்னைப் பற்றி ? கேட்டால், நான் என்ன சொல்வது ? எப்படிச் சொல்வது ? எங்கள் குடும்ப வாழ்வையே பாழாக்கி விட்டாயே, பாவி! ‘ என்று தலையில் அடித்துப் புலம்புகிறேன். அவளைத் திட்டிக் குவிக்கிறேன்.

வாணியோ, எதுவும் பேசாமல், கேளாதவள்போல் தலையைத் திருப்பிக் கொண்டு அகன்று விடுகிறாள். எந்தவித தப்பு உணர்ச்சியும் அவளிடம் இல்லை! எந்தவித அதிர்ச்சியோ, அவமானமோ, அருவருப்போ அவளிடம் ஏற்படவில்லை! வந்ததெல்லாம், எனக்குத்தான்!

எதிரே வந்த கணவரையும் மானப்பட, மரியாதை இல்லாமல், மனதாரத் திட்டுகிறேன்.

என் கணவரும் பதில் பேசாமல் என்னைக் காணாதபடி போகிறார்! எப்போதும் பதிலுக்குப் பதில் சண்டையிடும், போர்க் கணவனைக் கூட சாந்த மூர்த்தி யாக்கி விட்டாளே, வாணி! இருவரும் இப்படி ஊமையா யிருந்தால், இதற்கு என்ன அர்த்தம் ? என்னைத் தோற்கடித்து விட்டோம் என்றா ?

காலை விடிந்ததும் பிரச்சனையும் முடிந்தது! சிக்கலான முடிச்சு சுலபமாக அவிழ்ந்தது! இல்லை ஒரு சிக்கல் நீங்கி, இன்னுமொரு சிக்கலை உண்டாக்கியது! நெஞ்சிலிருந்து பாரம் இறங்கி, என் தலைமேல் போய் விழுந்தது!

‘சித்தியைக் காணோம் ‘ என்று என் இளைய பெண் ஓடி வந்து என்னிடம் சொன்னாள்! ‘அப்பாவைக் காணவில்லை ‘ என்று மூத்த பெண் பதறிப்போய் சொன்னாள்! எனக்கு எல்லாம் புரிந்து விட்டது! இதயத்திலே மின்னல் தாக்கி குப்பென எரிகிறது! இடி விழுகிறது என் தலையில்! எப்படிக் காப்பாற்றுவேன், இந்த சின்னஞ் சிறிய பிள்ளைகளை ? தள்ளாடி மயக்கமோடு தரையில் சாய்கிறேன்! பிள்ளைகள் புரிந்தும், புரியாமலும் விழித்தார்கள்! தொண்டை அடைத்துக் கொள்ள, கண்ணீர் அருவியாய்க் கொட்ட, உடற் சக்தி எல்லாம் உருக, விக்கி விக்கி அழுகிறேன்!

கிளியோபாத்ரா அண்டோனியை இழுத்துக் கொண்டு எங்கேயோ போய்விட்டாள்! எங்கே ? எங்கே ? எங்கே ? என்று துளைத் தெடுக்கிறது என்மனம்! வாணியைச் சாபமிடுகிறேன்! கணவனைக் காரி உமிழ்கிறேன்!

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருஷங்களாகி, எப்படியோ ஐந்து ஆண்டுகள் ஓடி ஒழிகின்றன! பெண் பிள்ளைகள் யாவரும் வளர்ந்து விட்டார்கள். முதல் மூன்று பெண்களும் ‘பெரியவளாகி ‘ விட்டார்கள்! ஓடிப் போன மிருக ஜென்மங்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை! எங்கே ஒளிந்து கொண்டு குடித்தனம் நடத்துகிறார்கள் ? அவர்கள் வேலை செய்த ஆபீஸிலும் யாருக்கும் தெரிய வில்லை! எல்லாம் மர்மமாகவே இருந்தது!

மூத்த பெண்கள் மூவரும், நானும் வேலை செய்கிறோம், டைப்பிஸ்டுகளாக!. வேறு வழி இல்லை! கால் வயிற்று, அரை வயிற்றுச் சாப்பாட்டில் உயிர் வாழ்கிறோம்! கடல் அலைகளில் மூழ்கியும் மூழ்காமலும், ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு, கரை சேர முடியாதபடி தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்!

அடுத்து ஒர் இடி மின்னல் எங்களை எல்லாம் தாக்குகிறது! இது பேரிடி! ‘அத்தான், திடார் மாரடைப்பில் காலமானார் ‘ என்று வாணி அடித்த தந்தி வருகிறது! துக்கம் என் நெஞ்சைக் கோடாரியால் உடைத்துப் பிளக்கிறது! ‘அப்பா போய்விட்டாரே ‘ என்று பிள்ளைகளெல்லாம் கோவென அழுகிறார்கள். எதிர்நீச்சல் போட்டுக் கரையேறும் போது, தரையே வெள்ளத்தில் கரைந்து போக

வேண்டுமா ?

தந்தி கல்கத்தாவிலிருந்து வந்திருந்தது. ஒரு மொட்டைத் தந்தி! முகவரி யில்லை! வாணியின் பெயர் மட்டும் தான் இருந்தது! எங்கேயோ கணவர் வேறு ஒருத்தியோடாவது உயிரோ டிருக்கிறார், என்ற என் சிற்றின்பத்தையும், விதி பறித்துக் கொண்டு போய் விட்டதே!

எதற்காக இப்படி ஒரு மொட்டைத் தந்தி ? என் முகத்தில் விழிக்க, வாணிக்கு மன உறுதி இல்லையா ? கல்கத்தாவில் எப்படி இறந்தார் ? எங்கே இறந்தார் ? தனியாக எப்படி அவரை அடக்கம் செய்தாள், வாணி ? பிள்ளைகளும் நானும் இறுதிச் சடங்கில் பங்கு கொள்ள வேண்டாமா ?

இனிமேலும் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறாள் ? எங்கே இருக்கிறாள் ? அவளும் இப்போது ….. என்னைபோல்…….! அந்த வார்த்தையைச் சொல்ல என் நா கூசுகிறாது …….!

இப்போது இந்தப் பெண் பிள்ளைகளுக்கு அப்பா இல்லை! அவர் பெற்ற பிள்ளைகள். கல்யாணம் போன்ற நல்ல காரியங்களில் நடக்கும் போது, கைப்பிடித்துக் கொடுக்க அப்பா என்றோர் ஆத்மா இருக்காது! இனி அந்த இடம் காலியாக இருக்கும்! பாவி வாணி, சுயநலக்காரி! பெண்களுக்குத் தந்தை இல்லை என்று சொல்ல வைத்து விட்டாள். எனக்கும் கணவன் இல்லை என்னும் …… அந்த பயங்கரப் பட்டத்தையும் சூட்டி விட்டாள், என் அருமைத் தங்கை வாணி! அவளது பேராசைக்கு அவர் பலி! திருடித் தின்ற கனியும் தீய்ந்து போனது!

நாட்களும், மாதங்களும் ஆமைபோல் நகர்கின்றன. வாணியிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என்ன ஆயிற்று அவளுக்கு ? எங்கே தனியாக இருக்கிறாள், அவள் ? ஏன் தலைமறைவாக இருக்கிறாள் ? மொட்டைக் கடிதமாவது வராதா ? என்று தினம், துடிக்கிறது மனம்! இப்படியே ஆறு மாதங்கள் ஓடி விட்டன!

ஒருநாள் காலை. உடல் நலமில்லாமல் படுத்திருந்தேன். கதவு தட்டும் ஓசை கேட்டு, தாழ்ப்பாவை இழுத்து கதவைத் திறந்தேன். யாரோ நடுத்தர வயதுள்ள ஒரு மாது, கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாள். அருகில் ஒரு சிறு பையன். வந்தவள் எதுவும் பேசாது, என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டுகிறாள்.

ஆச்சரியத்தோடும், ஆர்வத்தோடும் கடிதத்தை வாங்கிய நான், வைத்தகண் வாங்காமல் என்னையே நோக்கும் சிறுவனைப் பார்க்கிறேன். பால் வடியும் அந்தப் பிஞ்சு முகத்தில் வாணியின் கண்களையும், கணவரின் சாயலையும் கண்டு என் நெஞ்சு பாகாய் உருகியது! கை நடுங்கிப் பதட்டமோடு அந்தக் கடிதத்தைப் படிக்கிறேன்.

‘அருமை அக்கா!

காலம் கடந்து இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு என்னை மன்னித்துவிடு. பம்பாயிக்கு வரும் என் சிநேகிதி, நர்ஸ் கமலா சேகரை உன்வசம் ஒப்படைப்பாள். அக்கா! அவனை ஏற்றுக் கொள். என் வயிற்றில் பிறந்த சேகரை, உன் மகனாக வளர்த்து வா. ஒட்டுமாங்கனி ஒட்டிய வேறு கிளையில் உண்டான போதிலும், அதுவும் ஓரே மரத்தில் பழுத்த கனிதான்!

என் கண்மணியைக் காப்பாற்று. சுமைதாங்கி யான உன்மேல் இன்னுமொரு பாரத்தை வைக்கிறேன். வேறு வழி இல்லை.

ஒரு குறையை உடைய நான், எல்லோரையும் போல வாழ முடியவில்லை. ஆனாலும் உன்னால் எனக்கு ஒரு நிறைவு கிடைத்தது. வழிப்பறி செய்து தர்மம் புரிவதைக் கைமாறு என்று கூற மாட்டேன். அக்கா! குறுக்கு வழியில் சென்ற எனக்குச் சரியான தண்டனை கிடைத்தது. ஆத்மாவின் ஆசை நிறைவேற வேண்டுமானால், ஏதாவது ஒன்றை இழக்கத்தான் வேண்டும் போல் தெரிகிறது! வாழ்க்கையில் ‘நிறை, குறை ‘ என்னும் ஒரு தெய்வ நியதி சிலரை ஏற்றி இறக்குகிறது! சிலரை இறக்கி ஏற்றுகிறது!

அக்கா! உங்களை எல்லாம் விட்டுப் பிரிந்த வேதனை தாங்க முடியாமல் தான், அத்தான் சீக்கிரம் போய்ச் சேர்ந்தார்.

நான் மூன்று மாதங்களாக ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறேன். எனது நாட்கள் எண்ணப் படுகின்றன! கர்ப்பப் பையில் ஏதோ புற்று நோயாம்! அக்கா! என்னைப் பற்றிக் கவலைப் படாதே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாதே! என்னைக் காணவும் முயற்சி செய்யாதே! நான் ஒரு வஞ்சகி!

ஒரே ஒரு இறுதி வேண்டுகோள்! என் கண்மணியை ஏற்றுக் கொண்டு, அவனை ஆளாக்கு. அத்தானின் மரண இன்ஸ்சூரன்ஸ் பணச்செக் ரூபாய் பத்தாயிரத்தை கடிதத்தில் வைத்து அனுப்பி இருக்கிறேன்.

உன் அன்புத் தங்கை,

வாணி.

கடிதம் முடியும் முன்னே, கண்கள் இரண்டும் குளமாயின. அணையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளம் போல், அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது! இதயத்தில் ஒரு எரிமலை வெடித்து தீப்பொறிகள் பொங்குகின்றன! கண்ணீரும் கம்பலையுமாக ஓடி, சேகரை வாரி அணைத்துக் கொண்டு முத்த மாரி பொழிந்து, கதறிக் கதறி அழுகிறேன்! பெண்களும் வாஞ்சையோடு அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள். இருபது ஆண்டுகளாக தவமிருந்தும், நிறைவேற்ற முடியாத ஒரு குறையை இன்று நிறைவாக்கி விட்டாள், தங்கை வாணி!

 

 

  Thinnai 2000 June 25

திண்ணை

Series Navigation

அனுஷா

அனுஷா