வம்ச விலக்கு
Published April 1, 2005 • By
ரஜித்
ரஜித்

ஒளி மொத்தமும் உமிழ்ந்துவிட்டதால்
இனி ஒளிர முடியாதாம்
ஒரு வைரம் சொல்கிறது
மணங்கள் முடிந்த்தால் இனி
வெறும் விறகுதானாம்
ஒரு சந்தனக்கட்டை சொல்கிறது
இசைகள் மொத்தமும் ஊதி முடிந்ததால்
இனி வெறும் குழாய்ிதானாம்
ஒரு புல்லாங்குழல் சொல்கிறது
கற்பனைகள் முடிந்ததால்
இனி கவிதைகள் இல்லையாம்
ஒரு சிந்தனை சொல்கிறது
ஊற இனி நீரில்லையாம்
ஒரு மணற்கேணி சொல்கிறது
தீந்தமிழ் சொற்களெல்லாம்
தீர்ந்து போனதால்
தமிழ்த் திரைக்கு இனி
தமிழ்ப் பெயர் இல்லையாம்
ஒரு தமிழன் சொல்கிறான்
தமிழனிடம்
தமிழைப் பழித்தோனை
தாய் தடுத்தாலும் விடாத
பாரதிதாசனின் கொள்ளுப்பேரா
நீ வம்ச விளக்கா இல்லை
வம்ச விலக்கா
ரஜித்
rajid_ahamed@yahoo.com.sg