மலைகளின் பறத்தல்

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

மாதங்கி



முன்னொரு நாளில்
தோன்றியபோதெல்லாம்
இறக்கைகளை விரித்துக்கொண்டு
பறந்து கொண்டிருந்த மலைகளைக்
கெஞ்சிக் கேட்டேன்
பறப்பதை நிறுத்திவிடுங்களேன்

நிமித்த காரணம் சொல்லலாமே
அவை கேட்டன

எங்கள் குழந்தைகள்
தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்
எங்களுக்கே சோறு பலசமயங்களில் இறங்குவதில்லை
சில பறவைகள் உங்களைக் கண்டு பறத்தலையே
மறக்கத் துவங்கிவிட்டன
எங்கள் குழந்தைகள் வெட்டவெளிகளில்
விளையாட மறுக்கின்றனர்
பயிர்த்தொழில் பாதிப்படைகிறது
எங்கள் நிம்மதி
உங்களால் போய்க்கொண்டிருக்கிறது

தங்களால் யாரும் உயிரிழக்காத போதும்
எங்களுக்காக
தாமே தம் இறக்கைகளை இற்றுப்போக
செய்து
பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்

இன்று யுத்த பேரிகைகளும்
போர்ச்சாவுகளும்
உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்
மலைகள் சிரிக்குமோ அழுமோ


madhunaga@yahoo.com.sg
வடக்குவாசல் டிசம்பர் 2008

Series Navigation